விஜய்யின் அதிகார வெறி.. ரஜினி அப்படி கிடையாது.. பின்னணியில் ஆர்எஸ்எஸ்.. ஒப்பிட்டு சொன்ன திருமாவளவன்!
திருச்சி: நடிகர் ரஜினிகாந்த்-க்கு பதவி மீதோ அதிகாரத்தின் மீதோ வெறியோ, வேட்கையோ இல்லாததால் அரசியலில் இருந்து ஒதுங்கிவிட்டதாகவும், விஜய்க்கு முதல்வர் நாற்காலி மீது மோகம் இருப்பதால், முதல் நாள் முதலே திமுக மீது வெறுப்பை மட்டும் முன் வைத்து வருவதாக விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
கரூரில் விஜய் பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த விவகாரம் தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கி இருக்கிறது. இந்த விவகாரத்தில் தவெகவுக்கு பாஜக நிர்வாகிகள் ஒரே குரலில் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். விஜய்க்கு ஆதரவாக நாடாளுமன்ற எம்பிக்கள் குழு கரூர் வந்து ஆய்வு மேற்கொண்டு செல்கிறது.

அதேபோல் தவெகவின் முக்கிய நிர்வாகியான ஆதவ் அர்ஜுனா டெல்லி சென்று அமித்ஷாவை சந்திக்க உள்ளார். அதேபோல் கரூர் விவகாரத்தின் விஜய்யின் செயல்பாடுகள் பல்வேறு தரப்பினர் மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது. இதுதொடர்பாக விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், கரூர் விவகாரத்தில் விஜய் அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கிறார்.
41 பேர் உயிரிழந்தது தொடர்பாக விஜய் கொஞ்சம் கூட கவலைப்படவில்லை. ஹஸ்கி வாய்ஸில் பேசினால், சோகமாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டு பேசுவதாக தெரிகிறது. விஜய்யின் முகத்தில் சோக நிழலே இல்லை. முதல்வர் ஸ்டாலினை சீண்டிக் கொண்டிருக்கிறார். அதுதான் விஜய்யின் நோக்கமாக உள்ளது. 41 பேர் இறந்த நேரத்தில், அங்கு பயந்து கொண்டு உடனடியாக வர முடியாமல் போய்விட்டது.
அதற்காக மன்னிப்பு கேட்கிறேன் என்று சொல்லி இருக்க வேண்டும். அது எல்லோருக்கும் வரும் பயம்தான். அதில் எந்தத் தவறும் இல்லை. அங்கிருந்திருந்தால், மீண்டும் அதிக மக்கள் வருவார்கள் என்பதால், சென்னை வந்துவிட்டேன் என்று சொல்லி இருக்கலாம். அடுத்த நாளிலேயே அவரின் அலுவலகத்தில் வைத்து அஞ்சலி செலுத்தி இருக்கலாம். இரங்கல் கூட்டம் நடத்தி இருக்கலாம்.
பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன் என்று சொல்லி இருந்தால், அது அவர்களுக்கு எவ்வளவு பெரிய ஆறுதலாக இருந்திருக்கும். 3 நாட்களுக்கு பின் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ்காரர்கள் சொன்ன பின் வீடியோ வெளியிடுகிறார். இதனால் விஜய்க்கு மக்கள் மீதும், ரசிகர்கள் மீதும் என்ன அக்கறை இருக்கிறது.
கூட்ட நெரிசலுக்கும், வன்முறைக்கு வித்தியாசம் இல்லையா.. அங்கிருந்தவர்கள் தவெக தொண்டர்கள்.. 7 மணி நேரமாக காத்திருக்கிறார்கள்.. ஒருவர் மீது ஒருவர் மிதித்துதான் இறந்தார்கள்.. அங்கு யாராவது கல்லெறிந்தார்களா, ஸ்பிரே அடித்தார்களா, கழுத்தை நெறித்து கொன்றார்களா.. இதற்கு ஏதாவது ஆதாரம் இருக்கிறதா? இவர்கள் சொல்லித்தானே ஆம்புலன்ஸ் அங்கு வந்தது.. ஆதாயம் தேடுவதில் தான் குறியாக இருக்கிறார்களே, தவிர ஆறுதல் சொல்வதில் எந்த அக்கறையும் இல்லை.
நடிகர் ரஜினி கட்சி தொடங்க வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சார்ந்தவர்கள் அழுத்தம் கொடுத்தனர். அந்தப் பிடியில் சிக்கிக் கொள்ளக் கூடாது என்று மிகவும் எச்சரிக்கையாக ரஜினி தவிர்த்துவிட்டார். ரஜினிக்கு பதவி மீதோ, அதிகாரத்தின் மீதோ மோகம் இல்லை. முதல்வராக வேண்டும் என்ற வெறியோ, வேட்கையோ இல்லை. அதனால் அவர் அமைதியாக ஒதுங்கிவிட்டார்.
ஆனால் விஜய்க்கு வந்தநாள் முதல் அதிகாரத்தின் மீதும், ஆட்சியின் மீதும்தான் மோகம். அதனால்தான் திமுகவை குறி வைத்து சாடுகிறார். இதன் காரணமாகவே கருத்தியலாகவோ, தமிழ்நாட்டிற்கு என்ன செய்யப் போகிறேன் என்று சொல்லாமல், திமுக வெறுப்பை மட்டும் விஜய் முன் வைத்து வருகிறார். இப்படியானவர்கள் நிறைய பேரை ஆர்எஸ்எஸ் உள்ளே இறக்கிவிட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications