விஜய்யின் அரசியல் பிரவேசம் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கு! என்னங்க வைகோவே இப்படி சொல்லிட்டாரே!
திருச்சி: தவெக தலைவர் விஜய்யின் அரசியல் பிரவேசம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது நிஜம்தான். ஆனால் அந்த தாக்கம் எந்த விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை தேர்தல் முடிவுகளை பொறுத்துதான் கூற முடியும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
மதிமுக சார்பில் நடைபெறவுள்ள மாநாட்டுக்காக திருச்சிக்கு ஞாயிற்றுக்கிழமையான நேற்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வந்திருந்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது: தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக விளங்கும் விஜய்க்காக அதிகளவில் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

அவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் வருவதும், கலையுலக கவர்ச்சி நாயகனை காண துடிப்பதையும் திருச்சியில் சனிக்கிழமை விஜய் பிரச்சாரத்தின் போது காணமுடிந்தது. ஆனால் தேர்தல் களத்தில் விஜய் கூறுவது போன்ற நிலை அமையாது. விஜய்யின் அரசியல் பிரவேசம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
அந்தத் தாக்கம் மதச்சார்ப்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றியை பாதிக்காது. அதை தடுக்கும் சக்தியை விஜய்யால் ஏற்படுத்த முடியாது. மேலும் விஜய்யின் தாக்கம் எந்த விளைவுகளை ஏற்படுத்தும் என தேர்தல் முடிவுகளை பொறுத்துதான் கூற முடியும்.
தமிழக முதல்வர் ஸ்டாலின், அறிவித்த வாக்குறுதிகள் மட்டுமில்லாமல் அறிவிக்கப்படாத பல நல்ல திட்டங்களையும் அவர் நிறைவேற்றி வருகிறார். அத்துடன் வெளிநாடுகளில் முதலீடுகளை ஈர்த்து வருகிறார். தமிழகத்தின் முன்னேற்றத்துக்காகவும் தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை காக்கவும் உழைத்து வருகிறார்.
அதிமுகவை விமர்சனம் செய்ய விஜய்க்கு மனம் இல்லை. அவர் என்ன அரசியல் நிலைப்பாடு வைத்துள்ளார் என்பது எனக்கு தெரியவில்லை. மத்திய அரசு தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிதியை வழங்காமல் அலைக்கழித்து வருகிறது.
கீழடி ஆய்வை மத்திய அரசு ஏற்க மறுக்கிறது. மத்திய பாஜக அரசு தொடர்ந்து தமிழகத்தை வஞ்சித்து வருகிறது. திருச்சியில் நடைபெறும் மதிமுக மாநாடு, வரலாறு மீண்டும் திரும்புகிறது என கூறும் வகையில் புத்தெழுச்சியுடன் நடைபெறும். 2026 சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணி அறுதி பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் என வைகோ தெரிவித்துள்ளார்.
நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய், தனது அரசியல் பயணத்தை செப்டம்பர் 13, 2025 அன்று திருச்சியில் தொடங்கினார். இந்த சுற்றுப்பயணம் "வெற்றிப் பேரணியில் தமிழ்நாடு - உங்கள் விஜய், நான் வரேன்" என்ற பெயரில் நடத்தப்பட்டது.
திருச்சி, அண்ணா, எம்.ஜி.ஆர் போன்ற அரசியல் தலைவர்களின் முக்கிய திருப்புமுனையாக இருந்த மண் என்று குறிப்பிட்டு, தனது அரசியல் பயணத்தைத் தொடங்க இதுவே சிறந்த இடம் என்று தெரிவித்தார்.
தி.மு.க. அரசு அளித்த 505 தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிவிட்டது என்று குற்றம் சாட்டினார். குறிப்பாக, பெட்ரோல், டீசல் விலை குறைப்பு, பெண்களுக்கு ரூ.1000 உரிமைத் தொகை போன்ற வாக்குறுதிகள் பற்றியும் கேள்வி எழுப்பினார். இவரது பிரச்சாரத்திற்கு ஏராளமானோர் கூட்டம் கூடினர். சில இடங்களில் அவருடைய பிரச்சார வாகனம் ஒரு அடி கூட நகர முடியாமல் இருந்தது.
இது போல் விஜய்க்கு வந்த கூட்டம் குறித்து தவெக நிர்வாகிகள் சமூகவலைதள பக்கத்தில் புகைப்படம் எடுத்து வெளியிட்டு வருகிறார்கள். இது குறித்து நாம் தமிழர் கட்சி சீமான், திமுக அமைச்சர்கள் உள்ளிட்டோர் கூடும் கூட்டம் எல்லாம் சினிமா நடிகரான விஜய்யை பார்ப்பதற்காகத்தானே தவிர அவை எல்லாம் வாக்குகளாக மாறுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.












Click it and Unblock the Notifications