இந்த ரூட்ல போக முடியாது.. திருச்சி பக்கம் செல்பவர்கள் கவனிக்க.. மோடி வருகையால் போக்குவரத்து மாற்றம்!
திருச்சி: பிரதமர் நரேந்திர மோடியின் வருகையை முன்னிட்டு திருச்சி புதுக்கோட்டை சாலையில் 2 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதுகுறித்த விவரங்களை பார்க்கலாம்.
திருச்சியில் ரூ.1,112 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள விமான நிலைய புதிய முனையத்தின் திறப்பு விழா, பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 38-வது பட்டமளிப்பு விழா ஆகியவற்றில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி நாளை திருச்சிக்கு வருகை தருகிறார்.

இதற்காக டெல்லியில் இருந்து நாளை காலை 7 மணிக்கு தனி விமானத்தில் புறப்படும் பிரதமர் மோடி, காலை 10 மணிக்கு திருச்சி விமான நிலையம் வந்தடைகிறார். பின்னர், சாலை மார்க்கமாக பாரதிதாசன் பல்கலைக்கழகம் செல்லும் பிரதமர் மோடி, அங்கு ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் காலை 10.30 மணிக்கு தொடங்கும் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்கிறார். அந்த விழாவில், 33 பேருக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றுகிறார்.
பிறகு, கார் மூலம் 12 மணிக்கு திருச்சி விமான நிலையம் வரும் பிரதமர் மோடி, அங்கு கட்டப்பட்டுள்ள புதிய விமான முனையத்தை பார்வையிட்டு, விமான நிலைய அதிகாரிகளுடன் கலந்துரையாடுகிறார். பின்னர், அங்கு 10 ஆயிரம் பேர் அமரும் வகையில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட பந்தலில் நடக்கும் விழாவில், பல்வேறு திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.
பிரதமர் வருகையையொட்டி, திருச்சியில் 3 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மத்திய மண்டல காவல்துறை தலைவர் கார்த்திகேயன் தலைமையில் திருச்சி மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களைச் சேர்ந்த 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு குழுவினர் கடந்த 2 நாட்களாக ஆய்வு செய்து, நிகழ்ச்சிகள் குறித்து ஆலோசனைகளை நடத்தி பாதுகாப்பை உறுதி செய்துள்ளனர்.
திருச்சி விமான நிலையத்தில் இருந்து பாரதிதாசன் பல்கலைக்கழகம் வரையிலான 11 கி.மீ தொலைவுக்கு சாலையின் இருபுறங்களிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், பிரதமர் வருகையின்போது, இடையூறு ஏற்படாத வகையில் தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த சாலையில் இன்று இரவு 8 மணி முதல் போக்குவரத்து தடை செய்யப்பட்டு, மாற்று வழியில் வாகனங்களை திருப்பிவிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி வருகையையொட்டி திருச்சி- புதுக்கோட்டை சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பிரதமர் மோடி வருகையையொட்டி திருச்சியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி இன்று (திங்கள் கிழமை) இரவு 8 மணி முதல் விமான நிலையம் வழியாக புதுக்கோட்டை செல்லும் அனைத்து கனரக வாகனங்களும் ஜி.கார்னர், டி.வி.எஸ்.டோல்கேட் மேம்பாலம், மன்னார்புரம் மேம்பாலம், எடமலைப்பட்டிபுதூர் பைபாஸ் சந்திப்பு, விராலிமலை வழியாக புதுக்கோட்டை சென்றடைய வேண்டும்.
நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 7 மணி முதல் சென்னை, சேலம், கோவை மற்றும் திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து புதுக்கோட்டை செல்லும் அனைத்து பேருந்துகளும் டி.வி.எஸ்.டோல்கேட், மன்னார்புரம், எடமலைப்பட்டிபுதூர் பைபாஸ் சந்திப்பு, விராலிமலை வழியாக புதுக்கோட்டை சென்றடைய வேண்டும்.
பிரதமர் மோடியை வரவேற்பதற்காக விமான நிலையத்துக்கு வரும் கட்சி தொண்டர்களின் வாகனங்கள், நாளை காலை 9 மணி வரை மட்டுமே புதுக்கோட்டை சாலையின் வழியாக செல்ல அனுமதிக்கப்படும்.அதே போல் குண்டூர், மாத்தூர், பாரதிதாசன் பல்கலைக்கழகம் செல்லும் கட்சியினரின் வாகனங்கள் டி.வி.எஸ். டோல்கேட், மன்னார்புரம், எடமலைப்பட்டிபுதூர் பைபாஸ் சந்திப்பு, புதிய சுற்றுச்சாலை, கும்பக்குடி வழியாக செல்ல அறிவுறுத்தப்படுகின்றனர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications