பிளான் ‘B’.. பம்பரம் சின்னம் கிடைக்காவிட்டால் இதில் போட்டியிடுவோம்.. உறுதியாகச் சொன்ன துரை வைகோ!
திருச்சி: பம்பரம் சின்னம் கிடைக்காவிட்டால் வேறு சின்னங்களை கேட்டுள்ளோம். அதில் போட்டியிடுவோம் என்று மதிமுக திருச்சி தொகுதி வேட்பாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார்.
லோக்சபா தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி தமிழ்நாட்டில் நடைபெற உள்ளது. இன்றுடன் வேட்பு மனு தாக்கல் முடிவடையும் நிலையில், அனைத்து கட்சிகளும் தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மதிமுகவுக்கு திருச்சி தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. திருச்சி தொகுதியில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் மகன் துரை வைகோ போட்டியிடுகிறார்.

இந்நிலையில், நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்கக்கோரி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் கோரிய மனு மீது இன்று காலை 9 மணிக்குள் முடிவெடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க முடியாது என தேர்தல் ஆணையம் பதில் அளித்துள்ளது.
பம்பரம் சின்னம் கிடைக்காவிட்டால்: இந்நிலையில் இன்று காலை நடைப்பயிற்சியின்போது துரை வைகோ அளித்த பேட்டியில், பம்பரம் சின்னம் கிடைக்காவிட்டால் வேறு சின்னத்தில் போட்டியிடுவோம் என்று தெரிவித்துள்ளார். அவர் பேசுகையில், "சின்னம் விவகாரத்தில் தேர்தல் ஆணையம் ஒருதலைப்பட்சமாக நடந்து கொள்கிறது. பாஜக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு அவர்கள் விரும்பும் சின்னம் ஒதுக்கப்படுகிறது. ஆனால் பிற கட்சிகள் வஞ்சிக்கப்படுகின்றன.
தமிழகத்தில் நாம் தமிழர் கட்சிக்கும் கரும்பு விவசாயி சின்னம் தரவில்லை. அவர்கள் தேர்தலில் வெற்றி பெறாவிட்டாலும் கூட அந்த சின்னத்துக்கு என தனி அடையாளத்தை உருவாக்கியுள்ளனர். அதுபோலவே இப்போது எங்களுக்கும் பம்பரம் சின்னத்தில் பிரச்சனை செய்கிறது. நல்ல தீர்ப்பு வரும் என நாங்கள் நம்புகிறோம். ஒருவேளை பம்பரம் சின்னம் கிடைக்காவிட்டால் மாற்று திட்டங்களும் வைத்துள்ளோம். அதன்படி வேறு சின்னத்தில் போட்டியிடுவோம்." எனத் தெரிவித்துள்ளார்.
ஆவேசமடைந்த துரை வைகோ: அண்மையில் திருச்சியில் வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் பேசும்போது திமுகவினர், துரை வைகோவை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுமாறு கூறியதால் உணர்ச்சிவசப்பட்டு பேசினார் துரை வைகோ. "விருப்பமே இல்லாமல் கட்சிக்காக நான் அரசியலுக்கு வந்தேன். எனக்கு வெற்றி பெற வேண்டும் என்று பெரிய வேட்கை கிடையாது. ஆனால், எனது அப்பாவுக்காகவும், எனது கட்சிக்காரர்களுக்காகவும் போட்டியிடுகிறேன். இந்த கட்சிக்காக 30 ஆண்டுகள் உழைத்து உழைத்து தேய்ந்துவிவிட்டார் எனது தந்தை.
செத்தாலும் எங்களது சின்னத்தில்தான் போட்டியிடுவோம். உதயசூரியன் சின்னத்தை நாங்கள் மதிக்கிறோம். ஆனால், மதிமுகவில் எனது பொறுப்பை ராஜினாமா செய்துவிட்டு மற்றொரு கட்சியின் சின்னத்தில் நான் நிற்க முடியாது" என்று பேசியிருந்தார். துரை வைகோ பேசிக்கொண்டிருந்தபோதே திடீரென உணர்ச்சி வசப்பட்டு டேபிளில் கையை வைத்து குத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.
துரை வைகோ சொத்து: திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் ம.தி.மு.க சார்பில் போட்டியிடும் துரை வைகோ, தனது வேட்புமனுவை திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமாரிடம் தாக்கல் செய்தார். மதிமுக வேட்பாளர் துரை வைகோ தனக்கு ரூ. 35.90 கோடி சொத்து உள்ளதாக தெரிவித்துள்ளாா். துரை வைகோவிடம் கையிருப்பாக ரூ.2 லட்சத்து 5 ஆயிரம், அவரது மனைவி கீதாவிடம் ரூ.5 லட்சத்து 2 ஆயிரம், மகன் வருணிடம் ரூ.2 ஆயிரத்து 500, மகள் வானதி ரேணுவிடம் ரூ.2 ஆயிரம் உள்ளது.
அவரது குடும்பத்தினா் பெயா்களில் ரூ.2 கோடியே 18 லட்சத்து 94 ஆயிரத்து 789 மதிப்பிலான அசையும் சொத்துக்களும், ரூ.33 கோடியே 71லட்சத்து 89 ஆயிரத்து 498 மதிப்பிலான அசையா சொத்துக்கள் என மொத்தம் ரூ.35 கோடியே 90 லட்சத்து 84ஆயிரத்து 287 உள்ளதாகவும், ஒரு காா் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளாா். அவருக்கு ரூ.1 கோடியே 35 லட்சத்து 65 ஆயிரம் கடன் (2.07 கிலோ தங்க நகைகள், 6.38 கிலோ வெள்ளி, ரூ.19 லட்சம் மதிப்பிலான வைர நகைகள்) உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளாா்.












Click it and Unblock the Notifications