கோவில்பட்டி தனியார் பள்ளி கழிவறையில் பிளஸ் 2 மாணவி தற்கொலை வழக்கு .. சிபிசிஐடிக்கு மாற்றம்
தூத்துக்குடி: கோவில்பட்டியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் மாணவியின் உடல் தூக்கில் தொங்கியவாறு சடலமாக மீட்கப்பட்ட வழக்கு சிபிசிஐடி போலீஸாருக்கு மாற்றப்பட்ட நிலையில் முதற்கட்ட விசாரணை பள்ளியில் தொடங்கியுள்ளது.
மாணவியின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்த காவல்துறையினர் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சமீப நாட்களாக பள்ளி மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டு உயிரிழக்கும் சம்பவம் அதிகரித்து வரும் நிலையில், இதனை தடுக்க மாணவர்களுடனான கலந்துரையாடல் அவசியம் என்று சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
லீக்கான வீடியோ! பாத்ரூமில் கேமரா! 60 பெண்களின் வீடியோவை கசியவிட்ட சக மாணவி! கடைசியில் மெகா அதிர்ச்சி
விடுதியில் மாணவி
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள சில்லங்குளத்தில் தனியார் மேல்நிலைப்பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இப்பள்ளியின் விடுதியில் தங்கி ராமநாதபுரத்தை சேர்ந்த மாணவி ஒருவர் +2 பயின்று வந்துள்ளார். நேற்று வழக்கம் போல விடுதியில் இருந்த மாணவி சிறிது நேரத்திற்கெள்ளலாம் காணாமல் போயுள்ளார். சக மாணவிகள் இவரை தேடியுள்ளனர். ஆனால் எங்கு தேடியும் கிடைக்காததால் பள்ளி நிர்வாகத்திற்கு தகவல் அளிக்கலாம் என்று இருந்துள்ளனர்.
உயிரிழப்பு
ஆனால் அப்போதுதான் ஒரு அதிர்ச்சி காத்திருந்திருக்கிறது. அதாவது, பள்ளியின் கழிவறையில் அந்த மாணவி தூக்கில் தொங்கியவாறு இருந்துள்ளார். இதை கண்டு அதிர்ச்சியடைந்த சக மாணவிகள் பள்ளி நிர்வாகத்திற்கு உடனடியாக தகவல் கொடுத்துள்ளனர். நிர்வாகமும் காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளது. சம்பவ இடத்திற்கு வந்த பசுவந்தனம் போலீசார், மாணவியின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
விசாரணை
சம்பவ இடத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி, ஒட்டப்பிடாரம் தாசில்தார் நிஷாந்தினி, எஸ்பி லேகஷ்வரன் ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர். மற்றொருபுறம் காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளது. உயிரிழந்த மாணவி, சமீபத்தில்தான் வீட்டிற்கு சென்று வந்ததாக கூறப்படுகிறது. அப்போது உறவினர் ஒருவரின் துக்க நிகழ்ச்சியில் பங்கேற்று திரும்பியதாகவும் கூறப்படுகிறது.
கலந்துரையாடல்
அதன் பின்னர் மாணவி விடுதியில், மிகவும் சோர்வாகவே இருந்துள்ளார். சக மாணவிகளுடன் கலந்துரையாடுவதில் விருப்பமில்லாமல் இருந்துள்ளாதாக சொல்லப்படுகிறது. எனவே காவல்துறையினர் இந்த வழக்கு குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். சமீப நாட்களாக பள்ளி மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டு உயிரிழக்கும் சம்பவம் அதிகரித்து வரும் நிலையில், இதனை தடுக்க மாணவர்களுடனான கலந்துரையாடல் அவசியம் என்று சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
சிபிசிஐடிக்கு மாற்றம்
மாணவி மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி அவரது உடலை பெற்றோர் வாங்க மறுப்பு தெரிவித்துள்ளார்கள். இந்த நிலையில் இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டிஎஸ்பி உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து தனியார் பள்ளிக்கு சென்றுள்ள சிபிசிஐடி போலீஸார் முதற்கட்ட விசாரணை நடத்தி வருகிறார்கள்.