திருப்பதியில் மட்டும் நிற்பான்.. திருசெந்தூரில் உணவு இன்றி தவித்த பக்தர்கள் பற்றி சேகர் பாபு கமெண்ட்
தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயிலில் சுவாமி தரிசனத்திற்காக பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருந்தனர். இது குறித்து அவர்கள் கேள்வி எழுப்பியிருந்த நிலையில், இதனை திருப்பதி கோயில் கூட்ட நெரிசலுடன் ஒப்பிட்டு அமைச்சர் சேகர்பாபு பேசியிருந்தார்.
"திருப்பதியில் மட்டும் 24 மணி நேரம் நிற்பான்" என்று அமைச்சர் சேகர்பாபு கூறியிருந்தார். இவரது கருத்துக்கு கடும் எதிர்ப்புகள் எழுந்திருக்கின்றன.

வழக்கமாக வார இறுதி நாட்களில் வழிபாட்டு தலங்களில் கூட்டம் அலைமோதும். அந்த வகையில், முருகனின் அறுபடை வீடுகளில் 2ம் வீடாக கருதப்படும் திருச்செந்தூர் முருகன் கோயிலிலும் இன்று ஆயிரக்கணக்கில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. ஆனால் தரிசனத்திற்கு உடனே அனுமதிக்கப்படவில்லை என்று பக்தர்கள் குற்றம் சாட்டினர். சுமார் 6 மணி நேரமாக தரிசனத்திற்கு காத்திருந்ததாகவும், குழந்தைக்கு பால் வாங்க கூட அனுமதிக்கவில்லை என்றும் பக்தர்கள் குமுறினர்.
முதியோர்கள், இணைநோய் கொண்டவர்களும் தரிசன வரிசையில் காத்திருப்பதாகவும், ஆனால் தங்களுக்கு உரிய வசதி செய்துகொடுக்கவில்லை என்றும் பக்தர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
அந்த நேரம் திருச்செந்தூர் கடற்கரையில் அரிப்பு ஏற்பட்டிருப்பதை பார்வையிட மாவட்ட ஆட்சியரும் வந்திருந்தார். ஆனால் பக்தர்களின் கோரிக்கைகளுக்கு ஆட்சியர் பதிலளிக்காமல் சென்றார். இதனையடுத்து உடனே பக்தர்கள் முழக்கமிட தொடங்கினர். இதனால் அந்த இடத்தில் லேசான சலசலப்பு ஏற்பட்டது.
சரியாக அந்த நேரம் பார்த்து அமைச்சர் சேகர்பாபு வந்திருந்தார். அவரை வரவேற்ற கனிமொழி எம்பி, என்ன பிரச்சனை என்று கேட்டார். இதற்கு, "கூட்டம் அதிகமாக இருந்தால் வரிசையில்தான் நிற்க வேண்டும். திருப்பதியில் மட்டும் 24 மணி நேரம் நிற்பான்" என்று கூறியுள்ளார். இது தொடர்பான வீடியோ சோஷியல் மீடியாக்களில் வெளியாகி விவாதங்களை கிளப்பியிருக்கிறது.

இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் திருச்செந்தூர் கோயிலும் ஒன்று. இக்கோயிலில் பெருந்திட்ட வளாக பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் ஹெச்சிஎல் நிறுவனம் 20 பணிகளை எடுத்துக்கொண்டிருக்கிறது. இதில் 3 பணிகள் முடிக்கப்பட்டு திறப்பு விழாவும் நடத்தப்பட்டிருக்கிறது.
அதேபோல ராஜகோபுர சீரமைப்பு பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. ஜன.20ம் தேதி ஏழு கோபுரங்களுக்கு பாலாலயம் நடைபெற இருக்கிறது. மட்டுமல்லாது புதிய திட்டத்தின்படி 122 பக்தர்கள் தங்கும் அறைகள் கட்டப்பட இருக்கின்றன. ஏ மற்றும் பி பிரிவில் 56 பக்தர்கள் தங்கும் அறைகள் கட்டப்பட்டு வருகின்றன. இவை மார்ச் மாதம் முடிக்கப்பட்டு அதன் பின்னர் பக்தர்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்படும். வரும் ஜூலை 7ம் தேதி இக்கோயிலுக்கு குடமுழுக்கு நடைபெற இருக்கிறது. இந்த நேரத்தில், தரிசனத்திற்காக பக்தர்கள் நீண்ட நேரம் காக்க வைக்கப்பட்டிருப்பது விவாதங்களை கிளப்பியிருக்கிறது.












Click it and Unblock the Notifications