ஒரு ஃபாத்திஹா ஓதிடுவோம்! வரவேற்ற ஹஜ்ரத்! உமறுப் புலவர் நினைவிடத்தில் துஆ செய்த துரை வைகோ!
தூத்துக்குடி: இஸ்லாமிய தமிழ் இலக்கியத்தின் மணிமகுடமாக திகழும் சீறாப்புராணத்தையும், முதுமொழி மாலையையும் எழுதிய உமறுப்புலவர் நினைவிடத்திற்கு சென்ற துரை வைகோ அங்கு நடைபெற்ற துஆவில் கலந்துகொண்டார். இது குறித்து அவரே தனது சமூக வலைதளப் பக்கங்களில் விடுத்துள்ள பதிவு பின் வருமாறு;
''சீறாப்புராணம் தந்த அமுதகவி உமறுப்புலவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினேன். பதினேழாம் நூற்றாண்டில் தமிழ் மரபுகளைப் பின்பற்றி இறைத்தூதர் நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எழுதப்பட்ட தமிழ் இலக்கியம் சீறாப்புராணம்.

வள்ளல் சீதக்காதி என்று போற்றப்படும் செய்யது அப்துல் காதர் மரைக்காயர் அவர்களின் வேண்டுகோளை ஏற்று 5,027 பாடல்களை கொண்ட சிறந்த இஸ்லாமிய இலக்கியமான சீறாப்புராணத்தையும், முதுமொழி மாலை என்ற நூலையும் தந்த சிறப்புக்குரியவர்தான் உமறுப்பலவர். இவர் தூத்துக்குடி மாவட்டம், நாகலாபுரம் என்ற கிராமத்தில் 1642 ல் பிறந்தார்.
இந்தப் பகுதிகள் எல்லாம் அன்றைய எட்டயபுரம் சமஸ்தானத்தில் இருந்த பகுதிகள். உமறுப் புலவர் தமிழ் இலக்கிய உலகின் பெருமகனாரான எட்டயபுரம் சமஸ்தானத்தில் அவை புலவராக இருந்த கடிகை முத்துப் புலவரிடம் தமிழ் கற்றவர். கடிகை முத்துப் புலவர் மறைவுக்கு பின்னர் உமறுப் புலவர் எட்டையபுர சமஸ்தானத்தின் அவைப் புலவராகவும்,மன்னரின் பேரன்பைப் பெற்றவராகவும் விளங்கினார்.
இஸ்லாமிய தமிழ் இலக்கியத்தின் மணிமகுடமாக சீறாப்புராணம் இன்றளவும் சிறந்து விளங்குகிறது.
மகாகவி பாரதியார் பிறப்பதற்கு சுமார் 250 ஆண்டுகளுக்கு முன்னரே பிறந்து, மிகச் சிறந்த தமிழ் இலக்கிய ஆளுமையாக வாழ்ந்து தமிழ்த் தொண்டாற்றிய உமறுப் புலவருக்கு, தமிழ்நாடு அரசு அவர் பிறந்து வளர்ந்து தமிழ் தொண்டாற்றி மறைந்த எட்டையபுரத்தில் சிறந்த மணிமண்டபத்தை கட்டி உள்ளது.
இஸ்லாமிய தமிழ் இலக்கியத்தின் சிறந்ததொரு படைப்பான சீறாபுராணத்தை படைத்து தந்த உமறுப்புலவரின் நினைவிடமான அந்த மணி மண்டபத்திற்கு சென்று மரியாதை செலுத்தினேன்.''












Click it and Unblock the Notifications