"அவர் யாரு.. அவர் தான் அதிமுகவிலேயே இல்லையே.." ஓபிஎஸ் பற்றி கேட்டதும் கடுகடுத்த கடம்பூர் ராஜூ
தூத்துக்குடி: அதிமுகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சி குழப்பம் தொடரும் நிலையில், ஓ. பன்னீர்செல்வத்தை கடம்பூர் ராஜூ மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.
அதிமுகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சி குழப்பம் கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து வருகிறது. அதிமுக இப்போது எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் என இரு பிரிவுகளாகப் பிரிந்து உள்ளது.
இரு தரப்பும் மற்ற தரப்பைக் கடுமையாக விமர்சித்து வருகிறது. பல மாதங்களாக இது தொடரும் போதிலும், இந்த சிக்கல் முடிந்ததாகத் தெரியவில்லை.

கடம்பூர் ராஜூ
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சட்டசபை அலுவலகத்தில் வைத்து முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சரும் கோவில்பட்டி எம்எல்ஏவுமான கடம்பூர் ராஜூ செய்தியாளர்களைச் சந்தித்தார். தீப்பெட்டி தொழிற்சாலைகளுக்கான ஜிஎஸ்டி வரி தொடர்பாகப் பேசிய அவர், ஓ. பன்னீர்செல்வம் தரப்பையும் மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.

தீப்பெட்டி தொழில்
அப்போது பேசிய கடம்பூர் ராஜூ, "டெல்லியில் நடைபெற்ற தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் கூட்டத்தில் நாங்கள் வைத்த அனைத்து கோரிக்கைகளையும் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஏற்றுக்கொண்டார். அதேபோல் ஜிஎஸ்டியில் வரி குறைப்பிலும் அவர் உறுதி அளித்துள்ளார். மேலும் சீனா இறக்குமதி லைட்டர்களை தடுப்பதற்கு உண்டான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் தீப்பெட்டி தொழிலாளர்களின் நிலை குறித்து நேரடி ஆய்வு செய்யப்படும் என்றும் மத்திய அமைச்சர் உறுதி அளித்தார்.

ஓ.பன்னீர்செல்வம்
ஓ.பன்னீர்செல்வம் இப்போது அதிமுகவிலேயே இல்லை.. அதிமுக பொதுக்குழுக் கூட்டம் எல்லாம் ஏற்கனவே நடந்து முடிந்துவிட்டது. நடந்து முடிந்த அந்த பொதுக்குழுக் கூட்டத்தில் 99 சதவீத பொதுக்குழு உறுப்பினர் கலந்து கொண்டனர். அதில் தான் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்துள்ளனர்.. இதுதான் அதிமுக. அமைப்பு ரீதியான அதிமுக எங்கள் பக்கம் தான் உள்ளது. ஓபிஎஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர். எனவே, நீக்கப்பட்டவர் கருத்து எல்லாம் அதிமுகவுக்குப் பொருந்தாது.

திமுக கூட்டணி
கூட்டணி என்பது தேர்தலுக்காக அமைக்கப்பட்டதாக இருக்க வேண்டும்.. ஆனால் திமுக கூட்டணியில் இருப்பவர்களெல்லாம் பேரத்தின் அடிப்படையில் இருக்கின்றனர்.. முதல்வர் தொகுதியிலே ஒரு கால்பந்து வீராங்கனை மரணமடைந்துள்ளார். இது பெரிய வேதனை அளிக்கிறது. இந்த விவகாரத்தில் அவர்களுடன் கூட்டணியில் இருக்கும் பொதுவுடைமை கட்சிகள் வாய் திறக்க மறுக்கின்றனர்.. சுகாதாரத் துறைக்கே சிகிச்சை தேவைப்படும் நிலையில் தான் இப்போது மாநில சுகாதாரத் துறை உள்ளது.

திரைத்துறை
தமிழகத்தில் ரெட் ஜெயன்ட் மூவிஸ் மூலம் வந்தால் தான் தமிழகத்தில் படங்கள் திரையிடப்படும் முடியும் என்ற சூழல் தான் இப்போது உள்ளது. தமிழ்நாட்டில் இப்போது படம் எடுத்தாலும் வெளியிடப்பட முடியாத சூழ்நிலை தான் உள்ளது.. அதிக பட்ஜெட்டில் படம் எடுத்தால் கூட ரெட் ஜெயன்ட் மூலம் தான் திரையிட முடியும் என்ற சூழல் உள்ளது.. எதிர்காலத்தில் படம் வெளியிடுவது மட்டும் இல்லாமல் படம் எடுக்கவும் முடியாது என்ற சூழ்நிலை நிச்சயம் உருவாகும்.

தனியார் மயம்
திரைத்துறை அழிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. அதில் யாருக்கும் எந்தவொரு சந்தேகமும் இருக்காது. செய்தி விளம்பரத்துறையில் அரசின் திட்டங்களை நேரடியாக மக்களுக்குக் கொண்டு சென்று வந்தது. ஆனால் இப்போது அரசு நிகழ்ச்சி மற்றும் முதல்வர் நிகழ்ச்சிகளைத் தனியார் மையமாக்க முயல்கின்றனர். இது ஒரு மோசமான சூழ்நிலையை உருவாக்கும்" என்று அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications