தூத்துக்குடியில் காதல் ஜோடி வீடு புகுந்து வெட்டிக் கொலை.. திருமணம் ஆன 3 நாளில் பயங்கரம்
தூத்துக்குடி: தூத்துக்குடியில் 3 நாட்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்த ஜோடி, வீடு புகுந்து வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பெண்ணின் வீட்டார் கொலையில் ஈடுபட்டுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.
தூத்துக்குடி முருகேசன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் வசந்தகுமார். இவரது மகன் மாரிச்செல்வம் இவருக்கு 23 வயது ஆகிறது. மாரிச்செல்வம் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் தூத்துக்குடி நகரில் திருவிக நகர் பகுதியில் வசிக்கும் கார்த்திகா என்ற இளம் பெண்ணை மாரிச்செல்வம் காதலித்து வந்துள்ளார். இருவரும் தீவிரமாக காதலித்து வந்துள்ளார்கள்.

ஒரு கட்டத்தில் இவர்களின் காதல் வெளியே தெரிந்தது.இந்த காதலுக்கு இரு வீட்டிலும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. பெண் வீட்டினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆனால் கடந்த 3 தினங்களுக்கு முன்பு, அதாவது கடந்த அக்டோபர் மாதம் 30ம் தேதி வீட்டை விட்டு வெளியேறிய கார்த்திகா, மாரிச் செல்வத்தை திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் மாரி செல்வத்தின் காதலை அவரது வீட்டில் ஏற்றுக் கொண்டனர்.
கடந்த 3 நாட்களாக தூத்துக்குடி முருகேசன் நகர் பகுதியில் உள்ள தனது பெற்றோருடைய வீட்டில் தான் மாரிச்செல்வம், தனது மனைவி கார்த்திகா உடன் வசித்து வந்தார். இந்நிலையில் இன்று கார்த்திகா மாரிச்செல்வம் தம்பதி வீட்டில் இருந்தனர்.
அப்போது மூன்று மர்ம நபர்கள் திடீரென வீட்டிற்கு வந்த நிலையில், எதுவுமே பேசாமல் ஆவேசத்துடன் கையில் வைத்திருந்த அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் மாரிச் செல்வம், கார்த்திகாவை பயங்கரமாக தாக்கி உள்ளனர். கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த சம்பவத்தில் காதல் ஜோடிகள் இருவருமே உயிரிழந்தனர். இதையடுத்து தாக்குதல் நடத்திய மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர்.
இது தொடர்பாக தூத்துக்குடி சிப்காட் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து காவல்துறையினர் உடனே விரைந்து வந்து கார்த்திகா, மாரிச் செல்வம் ஜோடியின் உடலை பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வழக்கு பதிவு செய்த போலீசார் குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகிறார்கள்.
இதனிடையே கொலை நடந்த இடத்தில் தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி., புறநகர் டி.எஸ்.பி. உள்ளிட்டோர் விசாரணை நடத்தினார்கள். கொலையாளிகளைப் பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. கார்த்திகாவின் தந்தை முத்துராமலிங்கம், ஆட்களை வைத்து இருவரையும் கொலை செய்துள்ளது தெரியவந்துள்ளது.
முத்துராமலிங்கத்திற்கு 3 பெண் குழந்தைகள் இருந்த நிலையில், மூத்த மகளான கார்த்திகா, பொருளாதார வசதி குறைவான மாரிச் செல்வத்தை காதலித்து வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்ததால், இருவரும் கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது.
குற்றசெயலில் ஈடுபட்டவர்களை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள். காதல் ஜோடி திருமணமான மூன்று நாளில் பெண் வீட்டாரால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆணவக் கொலைகளை தடுக்க எவ்வளவு சட்டம் இயற்றினாலும் தொடர்ந்து நடந்து கொண்டே இருப்பது கவலையை ஏற்படுத்தி உள்ளது. தூத்துக்குடி,திருநெல்வேலி பகுதியில் அடிக்கடி சாதிய குற்றங்கள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications