ராகுல் காந்தியின் நடைபயணம்.. காங்கிரஸ் கட்சிக்கு புதிய வலிமை கொடுக்கும்.. கனிமொழி எம்.பி. நம்பிக்கை
தூத்துக்குடி: தமிழக அரசு எழுத்தாளர்களுக்கு மிகப் பெரிய மரியாதை வழங்கி வருவதாக திமுகவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி பெருமிதம் தெரிவித்தார். காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் நடைபயணம், அக்கட்சிக்கு வலு சேர்க்கும் என்றும் கனிமொழி குறிப்பிட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில், மறைந்த கரிசல் பூமி எழுத்தாளர் கி.ராஜநாராயணனுக்கு நினைவரங்கம், நூலகம் மற்றும் அவரது சிலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. 45 சென்ட் இடத்தில், சுமார் 1.5 கோடி செலவில் கி.ராஜநாராயணனுக்கு சிலை மற்றும் நூலகம் அமைக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இதற்கான பணிகளை, திமுக-வைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி நேரில் பார்வையிட்டார். நினைவகம் தொடர்பான கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்த அவர், பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் பணிகள் குறித்தும் கேட்டறிந்தார். கட்டுமானப் பணிகளை சிறந்த முறையில் முடிக்குமாறு அதிகாரிகளிடம் கனிமொழி எம்.பி. கேட்டுக்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து கனிமொழி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழக அரசு, எழுத்தாளர்களுக்கு மிகப் பெரிய மரியாதை வழங்கி வருவதாக தெரிவித்தார். எழுத்தாளர்களுக்கு பதிப்பகங்கள்தான் ராயல்டியை தருவது வழக்கம். மற்ற மாநிலங்களில் எப்படி என்பது குறித்து தெரியவில்லை.
தமிழக அரசு எழுத்தாளர்களுக்கு மிகப்பெரிய மரியாதையை வழங்கி வருகிறது. சாகித்திய அகாடமி உள்ளிட்ட விருதுகள் வாங்கிய எழுத்தாளர்களுக்கு வீடுகள் வழங்கும் திட்டத்தை தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். எழுத்தாளர்களுக்கும், தமிழுக்கும் பல்வேறு திட்டங்களை தினமும் தமிழக அரசு அளித்து கொண்டு இருக்கிறது.
காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினரும், அக்கட்சியின் முன்னாள் தலைவருமான ராகுல் காந்தியின் நடைபயணம், காங்கிரஸ் கட்சிக்கு பலமாக இருக்கும். அதற்காக தான் ராகுல் காந்தி நடை பயணத்தை மேற்கொண்டுள்ளார் என கனிமொழி எம்.பி. தெரிவித்தார்.
இந்த நிகழ்வின்போது, சமூக நலன் மற்றும் உரிமைத்துறை அமைச்சர் பெ. கீதா ஜீவன், மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜீ.வி. மார்க்கண்டேயன், தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியாசமி, பொதுப்பணித்துறை உதவி கோட்டப் பொறியாளர் பரமசிவன், உதவிப் பொறியாளர்கள் சரத்குமார், சந்திரசேகர், ஊராட்சி ஒன்றிய ஆணையர் சுப்புலெட்சுமி, வட்டார வளர்ச்சி அலுவலகர் சீனிவாசன் மற்றும் வட்டாட்சியர் சுசிலா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
ராகுல் ஒருபக்கம் நடக்க.. இன்று “நடைபயணத்தை” தொடங்கும் தமிழக காங்கிரஸ்! பங்கேற்கும் மூத்த தலைவர்கள்