தாலியின் ஈரம் கூட காய்ந்திருக்காது.. திருச்செந்தூரில் கல்யாணம் ஆன 3 நாளில் புதுமண தம்பதிக்கு துயரம்
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் கல்யாணம் ஆகி 3 நாளில் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூரை அடுத்து உள்ளது மேல ஆத்தூர் சுப்பிரமணியபுரம். அந்த கிராமத்தைச் சேர்ந்த விவசாயி மாணிக்கராஜ் என்பவருடைய மகன் பழனிகுமார் (வயது 30), கேரள மாநிலத்தில் பழைய இரும்பு வியாபாரம் செய்து வந்திருக்கிறார்,

பழனிகுமாருக்கும் தூத்துக்குடி முள்ளக்காட்டைச் சேர்ந்த ராமய்யா மகள் 21 வயதாகும் முத்துமாரிக்கும் கடந்த 10-ந்தேதி கல்யாணம் நடந்தது. பின்னர் சுப்பிரமணியபுரத்தில் புதுமண தம்பதி வசித்து வந்தார்கள்.
இந்த நிலையில் வியாழக்கிழமை மதியம் பழனிகுமார்-முத்துமாரி வீட்டில் மதியம் சாப்பிட்டுள்ளார்கள். பின்னர் அவர்கள் வீட்டின் அருகில் உள்ள தோட்டத்துக்கு செல்வதாக குடும்பத்தினரிடம் கூறிவிட்டு வெளியில் சென்றுள்ளார்கள். தொடர்ந்து மாலையில் நீண்ட நேரமாகியும் அவர்கள் வீட்டுக்கு திரும்பி வரவில்லை. பழனிகுமாரின் செல்போனும் ஸ்விட்ச் ஆப் ஆகி இருந்தது.
இதனால் புதுமண தம்பதியை அவர்களது குடும்பத்தினர், உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடி அலைந்தனர். மேலும் உறவினர்களின் வீடுகளுக்கு புதுமண தம்பதி சென்றனரா? அல்லது கேரளாவுக்கு மனைவியை பழனிகுமார் அழைத்து சென்றாரா? என பலரிடமும் செல்போனில் தொடர்பு கொண்டு விசாரித்திருக்கிறார்கள்.

இந்த நிலையில் நேற்று காலையில் மேல ஆத்தூரில் கூட்டு குடிநீர் திட்டத்துக்காக அமைக்கப்பட்டு இருந்த நீர்த்தேக்கத்தில் 2 பேர் பிணமாக மிதந்துள்ளனர் இதனைப் பார்த்த அப்பகுதியினர் அதிர்ச்சி அடைந்து ஆத்தூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து நேரில் வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், சப்-இன்ஸ்பெக்டர் முத்து மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தண்ணீரில் பிணமாக மிதந்த பழனிகுமார் மற்றும் முத்துமாரியின் உடல்களை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். இதை பார்த்து அவரது குடும்பத்தினர், உறவினர்கள் கதறி அழுதார்கள்.
இறந்த புதுமண தம்பதியின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு விசாரித்த போது, நீர்த்தேக்கத்தின் கரையில் அமர்ந்து புதுமண தம்பதி பேசிக் கொண்டிருந்தபோது, முத்துமாரி தண்ணீரில் தவறி விழுந்ததால், அவரை காப்பாற்ற பழனிகுமார் முயன்றதில் அவர்கள் 2 பேரும் தண்ணீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது,. தாலியின் ஈரம் கூட காயும் முன்பே புதுமண தம்பதி உயிரிழந்ததால் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications