சட்டமன்றத்தில் உரையாற்ற தகுதியற்றவர் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி - திருமாவளவன் காட்டமாக விமர்சனம்
தூத்துக்குடி: தமிழ்நாடு சட்டசபையில் உரையாற்ற தகுதியற்றவர் ஆளுநர் ஆர்.என்.ரவி என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் காட்டமாக விமர்சித்துள்ளார்.
பாளையங்கோட்டையில் புனித சேவியர் கல்லூரியில் சமத்துவப் பொங்கல் விழா இன்று நடைபெறுகிறது. இந்த விழாவில் கலந்து கொள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வந்திருந்தார்.
அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், ஆர்.எஸ்.எஸ் தொண்டரைப் போன்று செயல்பட்டு வருகிறார். அவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஆர்எஸ்எஸ் பணிகளை மேற்கொள்ளலாம். அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக செயல்படுகிறார்.

அரசியலமைப்பு சட்டம்
இது அரசியல் அமைப்பு சட்டத்தை அவமதிக்கும் செயலாகும். தமிழக ஆளுநர் தொடர்ந்து குதர்க்கமான கருத்துகளை பேசி வருகிறார். தமிழகம் என்றாலும் ஒன்றுதான் தமிழ்நாடு என்றாலும் ஒன்றுதான், திமுக அரசின் கொள்கைக்கு எதிரானவர். திராவிட கோட்பாட்டிற்கு எதிரானவர்.

தமிழ்நாட்டில் ஆளுநராக நீடிக்க தகுதி இல்லை
தமிழ்நாட்டில் ஆளுநராக நீடிப்பதற்கு தகுதி இல்லை. இப்படிப்பட்ட ஒருவர் சட்டசபையில் நாளை உரையாற்றுவது எந்த வகையில் பொருத்தம்? திராவிட மாடல் அரசின் கொள்கையை முன்னிறுத்தக் கூடிய உரையை ஆற்றுவதற்கு அவர் எந்த வகையிலும் தகுதி படைத்தவர் அல்ல. பெரியார், அண்ணா முன்னெடுத்த அரசியலை பழிக்க வேண்டும் என்பதற்காகவே பேசி வருகிறார் ஆளுநர். இவ்வாறு திருமாவளவன் தெரிவித்தார்.

ஆளுநர் பேசியது என்ன
உத்தரப்பிரதேசம் மாநிலம் வாரணாசியில் நடந்த காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்களை சென்னை ஆளுநர் மாளிகைக்கு வரவழைத்து பாராட்டினார் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பேசுகையில் தமிழகத்தில் தவறான எதிர்மறையான அரசியல் அணுகுமுறைகள் இருக்கின்றந. இது ஒழிக்கப்பட வேண்டும்.

இந்தியா
இந்தியா என்பது ஒரே நாடு. தமிழர்கள் தங்களை திராவிடர்களாக உணருகிறார்கள். தமிழ்நாடு என்று சொல்வதை விட தமிழகம் என சொல்வதே சரியாக இருக்கும். திராவிட ஆட்சியில் 50 ஆண்டுகளாக மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர். இவ்வாறு ஆளுநர் பேசியுள்ளார். ஆளுநரின் இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு என்பதை தமிழகம் என்றே அழைக்க வேண்டும் என ஆளுநர் பேசியுள்ளதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர் கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளனர். தமிழ்நாடு ஆளுநர் இந்த மாநிலத்தை விட்டே ஓடி விடலாம் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்திருந்தார்.












Click it and Unblock the Notifications