அம்பேத்கர் மாதிரி ஆக ஆசைப்பட்டான்.. கார் மோதி பறிபோன உயிர்கள்..முதல்வர் இரங்கல்..நிவாரணம் அறிவிப்பு
திருப்பத்தூரில் சாலை விபத்தில் உயிரிழந்த 3 பள்ளி மாணவர்களின் குடும்பத்தினருக்கும் தலா 2 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
திருப்பத்தூர்: வாணியம்பாடி அருகே பள்ளிக்கு செல்லும் போது சாலை விபத்தில் உயிரிழந்த 3 மாணவர்களின் குடும்பத்தினருக்கும் தலா 2 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். படித்து பெரிய ஆளாக வர வேண்டும் என்று ஆசைப்பட்டவர்கள் உயிரிழந்து விட்டார்களே என்று பெற்றோர்கள் கதறி துடித்தது காண்பவர்களின் கண்களை கலங்க வைத்தது.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே பள்ளி மாணவர்கள் மீது, கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் சைக்கிளில் பள்ளிக்கு சென்றுக்கொண்டிருந்த பள்ளி மாணவர்கள் சூர்யா, ரபீக் மற்றும் விஜய் ஆகிய 3 பேர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே துடிதுடித்து ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தனர்.

தனியார் கல்லூரி மாணவர்கள் சென்ற கார் தாறுமாறாக ஓடி 3 இளம் பிஞ்சுகளின் உயிரை காவு வாங்கி விட்டது. மாணவர்களின் மரணத்திற்கு காரணமானவர்கள் பிடித்து அடித்து துவைத்து எடுத்து விட்டனர் கிராம மக்கள். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் விபத்து நிகழ்ந்தது குறித்து விசாரணை மேற்கொண்டனர்.
சாலை விபத்தில் இரண்டு மகன்களையும் பறிகொடுத்த பெற்றோர் கண்ணீர் விட்டு கதறி அழுதது காண்பவர்களின் நெஞ்சத்தை உருக்கியது. காலையில் டாட்டா காட்டி விட்டு பள்ளிக்கு போனவர்களை ரத்த வெள்ளத்தில் பார்த்தோம் என்று குழந்தைகளின் தாயார் கண்ணீர் விட்டு கதறி அழுதார். நன்றாக படித்து அம்பேத்கர் போல வர வேண்டும் என்ற ஆசைப்பட்டானே..இப்படி போய்ட்டானே என்று கதறி துடித்தனர் உறவினர்கள்.
இந்த நிலையில், சாலை விபத்தில் உயிரிழந்த 3 பள்ளி மாணவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.

இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி வட்டம், வளையாம்பட்டு கிராமம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கிரிசமுத்திரம் அரசுப் பள்ளிக்கு செவ்வாய்க்கிழமை காலை சைக்கிளில் சென்று கொண்டிருந்த வளையாம்பட்டு எம்ஜிஆர் நகர் பகுதியைச் சேர்ந்த ரபிக், விஜய் மற்றும் சூர்யா ஆகிய மூன்று மாணவர்கள் மீது எதிர்பாராத விதமாக கார் மோதி மூவரும் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.
உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினர் மற்றும் அவர்களுடைய நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதல்களையும் தெரிவித்துக் கொள்வதோடு அவர்களின் குடும்பத்தினருக்கு தலா இரண்டு லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications