முதல்வர் பிரச்சார பயணம் செய்யும் பகுதியில் துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்த மர்ம நபர் கைது
முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்துவரும் வேலூர் மாவட்டத்தில் துப்பாக்கியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வேலூர் : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பிரச்சாரம் செய்து வரும் வேலூர் மாவட்டத்தில் சந்தேகப்படும் வகையில் காரில் சுற்றித்திரிந்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர். அந்த நபர் வைத்திருந்த துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சட்டசபை தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதங்களே உள்ள நிலையில் ஆளும்கட்சியும் எதிர்கட்சியும் பரபரப்பாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன. மூன்றாவது முறையாக ஆட்சியை தக்க வைக்க முனைப்போடு பிரச்சாரம் செய்து வருகிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.
அந்த வகையில் இன்றைய தினம் வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் எடப்பாடி பழனிச்சாமி பிரசாரம் மேற்கொண்டுள்ளார். முதல்வரின் வருகையையொட்டி ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வழிநெடுகிலும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், பேரணாம்பட்டு பகுதியில் வேகமாக வந்த ஒரு கார், சாலையோரம் நின்றுகொண்டிருந்த மக்கள் மீது மோதியது. இதில் சிலர் காயமடைந்துள்ளனர். ஆனால் அந்த காரை ஓட்டி வந்த நபர் காரை நிறுத்தாமல் தப்பிச் செல்ல முயன்றுள்ளார். பொதுமக்கள் மடக்கிப் பிடித்து அந்த நபரை பேரணாம்பட்டு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவரை போலீசார் கைது செய்தனர்.
ஸ்டாலின் மீது மீண்டும் பாய்ச்சல்... ராணிப்பேட்டையில் சவால் விட்ட முதல்வர் எடப்பாடியார்!
அவரிடம் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் காரை சோதனை செய்த போது அதில் ஒரு துப்பாக்கி இருந்தது. அந்த துப்பாக்கி மற்றும் காரை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட நபரிடம் விசாரணை நடைபெறுகிறது. முதல்வர் பிரச்சாரம் சென்ற பகுதியில் துப்பாக்கியுடன் ஒருவர் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.