யாரும்மா அங்க.. உள்ளே வாங்க.. தயங்கி தயங்கி நின்ற மூதாட்டி! தாராளம் காட்டிய திமுக எம்.எல்.ஏ.!
வேலூர்: வீட்டு வாசலில் தயங்கி தயங்கி நின்ற மூதாட்டியை வாஞ்சையுடன் வீட்டுக்குள் அழைத்த திமுக எம்.எல்.ஏ. நந்தகுமார், அவருக்கு பணம், பொருள் உள்ளிட்டவைகளை கொடுத்து அனுப்பி வைத்துள்ளார்.
மேலும், வீடு தொடர்பான அந்த மூதாட்டியின் கோரிக்கையை அதிகாரிகள் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பதாகவும் நந்தகுமார் எம்.எல்.ஏ. நம்பிக்கை அளித்துள்ளார்.
முன்னதாக எம்.எல்.ஏ.வை பார்க்க தனக்கு அனுமதி கிடைக்குமோ கிடைக்காதோ என்ற தயக்கத்துடனேயே அந்த மூதாட்டி காத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

நந்தகுமார் எம்.எல்.ஏ.
வேலூர் மத்திய மாவட்ட திமுக செயலாளராகவும், அணைக்கட்டு தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினராகவும் இருப்பவர் நந்தகுமார். இவர் தினமும் காலை 7.30 மணி முதல் தனது வீட்டில் விசிட்டர்களை சந்தித்துப் பேசுவது வழக்கம். அதிகாரிகள், கட்சிக்காரர்கள், பொதுமக்கள், என பலதரப்பட்டோரும் எம்.எல்.ஏ. என்ற முறையில் நந்தகுமாரை சந்திக்க தினமும் அவரது வீட்டுக்கு வந்து செல்வார்கள்.

தயங்கி நின்ற மூதாட்டி
அந்த வகையில் வழக்கம் போல் நேற்றும் தனது இல்லத்தில் விசிட்டர்களை சந்தித்துக் கொண்டிருந்த நந்தகுமார் எம்.எல்.ஏ. நீண்ட நேரமாக தனது வீட்டு வாசலில் மூதாட்டி ஒருவர் தயங்கி தயங்கி நின்றதை பார்த்திருக்கிறார். யாரும்மா அங்க, தயங்காம உள்ளே வாங்க, என்ன வேண்டும் உங்களுக்கு என அக்கறை பொங்க கேட்டிருக்கிறார். அப்போது தாம் ஆதரவற்ற நிலையில் இருப்பதாகவும் வீடு தொடர்பான கோரிக்கையை அளிக்க வந்ததாகவும் கூறியிருக்கிறார்.

ரூ.1000 பணம்
அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு செல்வதாக நம்பிக்கையளித்த நந்தகுமார் எம்.எல்.ஏ. தனது சட்டை பாக்கெட்டில் இருந்து ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்துக் கொடுத்ததோடு, தனக்கு வழங்கப்பட்ட சால்வைகளையும் அளித்து குளிருக்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள் எனக் கொடுத்தார். இதனால் நெகிழ்ந்து போன அந்த மூதாட்டி, நந்தகுமார் எம்.எல்.ஏ.வை மனதார வாழ்த்தி அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். முன்னதாக இவரை எம்.எல்.ஏ.வீட்டு ஊழியர்கள் கண்டுகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கூர்மையாக கவனித்து
தன்னை சந்திக்க வரும் கூட்டத்தினருக்கு மத்தியிலும் வீட்டு வாசலில் தயங்கி நிற்கும் ஒருவரை கவனித்து அவரை அழைத்து என்ன தேவை எனக் கேட்டு உதவியிருப்பது இங்கு கவனிக்கத்தக்கது. இதனிடையே நந்தகுமாரை அணைக்கட்டு தொகுதியை சேர்ந்தவர்கள் கட்சிக்கு அப்பாற்பட்டு கல்யாணம், காதுகுத்து, என தங்கள் இல்ல விழா ஒன்று விடாமல் அழைப்பதும் அதில் இவர் ஒன்றுவிடாமல் பங்கேற்பதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications