பச்சையிலிருந்து நீல நிறத்திற்கு மாறும் சைக்கிள்கள்.. தமிழக அரசின் இந்த மாற்றத்திற்கு காரணம் என்ன?
வேலூர்: வேலூர் மாவட்டத்தில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு நீல நிறத்தில் மிதிவண்டி வழங்கப்படவுள்ளது.
அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு சீருடை, புத்தகப்பை, எழுதுகோல், மிதிவண்டி, லேப்டாப் உள்ளிட்ட நலத்திட்டங்களை தமிழக அரசு வழங்கி வருகிறது.
அந்த வகையில் தமிழகத்தில் கடந்த ஆண்டு பிளஸ் 1 படித்த மாணவர்களுக்கு அரசின் இலவச மிதிவண்டி வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டது. தற்போது பிளஸ் 2 படித்து வரும் அந்த மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்க ஏற்பாடுகள் நடைபெறுகின்றன.

வேலூர் மாவட்டம்
வேலூர் மாவட்டத்தில் தற்போது 84 அரசு மற்றும் அரசு நிதியுதவி, ஆதி திராவிடர் நல மேல்நிலைப் பள்ளிகளில் படித்து வரும் 6,348 மாணவர்கள், 7 ஆயிரம் மாணவிகள் என மொத்தம் 13,395 பேருக்கு இலவச சைக்கிள் வழங்கப்படவுள்ளது. இதற்காக தனியார் மிதிவண்டி நிறுவனம் சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கருநீலம்
தனியார் நிறுவனத்தில் மிதிவண்டிகளை தயார் செய்யும் பணிகளை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள். இத்தனை ஆண்டுகளாக பச்சை நிறத்தில் சைக்கிள் வழங்கப்பட்டு வந்தது. இந்த முறை சற்று வித்தியாசமாக நீல நிறத்தில் அதாவது கரு நீல நிறத்தில் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

சைக்கிள்கள்
கடந்த சில நாட்களுக்கு முன்பு நாமக்கல் மாவட்டத்தில் மாணவ, மாணவிகளுக்கு கொடுக்கப்பட்ட சைக்கிள்களும் நீல நிறத்தில் இருந்தன. 2021-2022 ஆம் ஆண்டு பிளஸ் 1 படித்த மாணவர்களுக்கு மிதிவண்டிகள் வழங்கும் பணி நடைபெற்றன. நாமக்கல், திருச்செங்கோடு ஆகிய கல்வி மாவட்டங்களில் உள்ல 12,969 மாணவர்களுக்கு இந்த சைக்கிள்கள் வழங்கப்பட்டன.

உற்பத்தி
கடந்த ஆட்சியில் பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள தனியார் நிறுவனத்தில் சைக்கிள்கள் ஆர்டர் கொடுக்கப்பட்டு பெறப்பட்டிருந்தன. நிகழாண்டில் வேறு ஒரு நிறுவனத்தில் சைக்கிள் உதிரிபாகங்களை இணைக்கும் பணிகள் நடைபெற்றது. இந்த சைக்கிள்கள் தொலைதூர கிராமத்தில் உள்ள மாணவர்கள் பள்ளிக்கு வர உதவுவதாக பயனாளிகள் மகிழ்ச்சி தெரிவித்திருந்தனர். கலர் மாற்றத்திற்கு காரணம் என்னவென தெரியவில்லை.












Click it and Unblock the Notifications