"திமுகவுக்கு சம்பந்தமில்லை! நான் எடுத்த முடிவு! தவெக அரசின் அச்சாணி விசிக!" திருமாவளவன் அதிரடி
வேலூர்: காட்டுமன்னார்கோவில் சட்டசபை தொகுதியில் போட்டியிட வேண்டாம் என திமுக வற்புறுத்தவில்லை, ஆனால் பரிசீலனை செய்யுமாறு கூறினர் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து திருமாவளவன் செய்தியாளர் சந்திப்பில் கூறியிருப்பதாவது: இந்த ஆண்டுக்கான விருது பெறும் சான்றோர் பட்டியல் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருக்கிறது. அந்த விழாவில் இயக்கத் தோழர்கள், விடுதலைச் சிறுத்தைகள் பெருவாரியாக பங்கேற்க வேண்டும் என்று அழைப்பு விடுக்கிறேன். ஆகஸ்டு 17 என்னுடைய பிறந்தநாள் தமிழர் எழிச்சி நாளாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு மே 17 நடைபெறவிருந்த தமிழ்த் தேசிய எழுச்சி மாநாடு ஆகஸ்டு 17 என்று நடைபெறுகிறது. எந்த இடம் என்பதை பிறகு முடிவு செய்து அறிவிக்கிறோம்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தவெக ஆட்சியமைப்பதற்கு ஆதரவளித்துள்ளது , அமைச்சரவையிலும் இடம் பெற்றுள்ளது. இந்த நிலையின் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் எதிர்கால அரசியல் குறித்து கட்சியில் உயர்நிலைக் குழு கூட்டத்தைக் கூட்டி ஆலோசிக்க இருக்கிறோம்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மதசார்பின்மையை பாதுகாப்பதில் உறுதியாக இருக்கிறது. தமிழகத்தை பொறுத்தவரையில் மதவாத சக்திகளுக்கு இடம் இல்லை என்பதை மீண்டும் நடந்து முடிந்த தேர்தல் மூலம் தமிழக மக்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள்.
எனினும் கூட வெவ்வேறு அடையாளங்களோடு தமிழ்நாட்டில் மதவாத சக்திகள் கால் ஊன்றுவதற்கு முயற்சிக்கிறார்கள். உதாரணத்திற்கு அண்ணாமலை பாஜகவில் இருந்து வெளியேறி, ஒரு இயக்கத்தை தொடங்கியுள்ளார். இது கவனிக்கத்தக்க ஒன்றாக உள்ளது.
கட்சியை விட்டு வெளியேற வேண்டுமானால் அவர் பாட்டுக்கு செய்தியாளர்களை சந்தித்து விலகியிருக்கலாம். ஆனால் ஒரு அரசு அதிகாரி பதவி விலகும்போது என்ன நடைமுறையை கையாளுவாரோ அப்படி பாஜக தலைமைக்கு பதவி விலகல் கடிதம் கொடுத்து தலைமையின் அனுமதியைப் பெற்று, அதன் பிறகு அவர் புதிய இயக்கத்தை தொடங்கி இருக்கிறார். பாஜக எந்த வடிவத்தில் வந்தாலும் தமிழ்நாட்டு மக்கள் அனுமதிக்க மாட்டார்கள். மதவாத அரசியல் எந்த அவதாரத்தை எடுத்தாலும் தமிழக மக்கள் அடையாளம் கண்டு கொள்வார்கள்.
மேகதாது அணை விவகாரத்தில் சட்டசபையில் தீர்மானத்தை நிறைவேற்றியதன் மூலம் கர்நாடக அரசுக்கு தனது எதிர்ப்பை முதல்வர் விஜய் காட்டியுள்ளார். சட்டசபையில் முதல்வர் முன்மொழிந்துள்ள தீர்மானத்திற்கு அனைத்து கட்சினரும் ஆதரவு நல்கி ஒருமனதாக நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
அனைத்து கட்சியினரும் ஒருங்கிணைந்து எவ்வாறு செய்யல்பட வேண்டும், மேகதாது பகுதியில் அணை கட்டினால் தமிழகம் எந்த வகையில் பாதிக்கப்படும், விவசாயிகள் மட்டுமின்றி குடிநீருக்கு மக்கள் எவ்வாறு பாதிக்கப்படுவார்கள், கால் நடைகள் எவ்வாறு பாதிக்கப்படும் என்பது கூறித்தெல்லாம் நமக்கு கவலை மேலோங்கியிருக்கிறது.
எனவே இதை விவாதிக்க வேண்டியது தவிர்க்க முடியாத ஒரு தேவை. அனைத்து கட்சினரும் எவ்வளவு கருத்து முரண்பாடுகள் இருந்தாலும் தமிழக நலன்களை முன்னிறுத்தி இந்த விவகாரத்தில் ஒற்றுமையாக இருந்து ஒருங்கிணைந்து செயல்பட வேண்டிய தேவை உள்ளது என்பதை யாரும் மறுக்க இயலாது.
சட்டசபை தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்றனர்- திருமாவளவன்
காட்டுமன்னார்கோவிலில் போட்டியிட வேண்டாம் என என்னை திமுக கட்டாயப்படுத்தவில்லை.
தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்ய வேண்டியிருப்பதால் பரிசீலிக்குமாறு திமுக கூறியது.
தேவையில்லா சங்கடங்களை தவிர்க்கவே தேர்தலில் போட்டியிட வேண்டாம் என நான் முடிவு செய்தேன். 2006 ஆம் ஆண்டு அதிமுகவுடன் கூட்டணி அமைத்து 2 தொகுதிகளில் வென்றோம். பின்னர் அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறி அதே ஆண்டு திமுக அரசு நீடிக்க ஆதரவு கொடுத்தோம். அது போல் ஸ்டாலின், உதயநிதியிடம் சொல்லிவிட்டுதான் தவெகவுக்கு ஆதரவு கொடுத்தோம். தவெக அரசு எனும் வண்டி ஓடுவதற்கு அச்சாணி போல் இருப்பதே விசிகதான் என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications