வேலூரையே வெலவெலக்க வைத்த வாய் சண்டை.. கடித்தவரின் மூக்கை பதிலுக்கு கடித்தே துப்பிய தொழிலாளி
வேலூர்: வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த திருவலம் அருகே உள்ள கார்ணாம்பட்டு காலனியைச் சேர்ந்தவர்களுக்கு இடையே சண்டை நடந்துள்ளது. வீட்டின் முன்பு மண் கொட்டியதற்காக நடந்த இந்த சண்டை , வாக்குவாதம் முற்றி கைகலப்பாகி உள்ளது. ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த ரமேஷ் குமார் என்பவர் பக்கத்து வீட்டுக்காரரின் மூக்கை கடித்து துப்பியுள்ளார். இந்த சம்பவத்தில் இருவருக்குமே காயம் ஏற்பட்டுள்ளது.
குழாயடி சண்டை, பக்கத்து வீடுகளில் தண்ணீர் கால்வாய் செல்வதில் சண்டை, வீடு கட்டுவதற்கு மண் கொட்டுவதால் ஏற்படும் சண்டை, பாதையை மறைத்து கட்டிடம் கட்டுவோரால் ஏற்படும் சண்டை பல வகை சண்டைகள் நமது ஊர்களில் அடிக்கடி நடக்கும். ஒரு தரப்பிற்கு நியாயம் என்று தோன்றும் விஷயம், இன்னொரு தரப்பிற்கு அநியாயம் என்று தோன்றும்.

வெறும் வாக்குவாதமாக இருக்கும் வரை பிரச்சனை இருப்பது இல்லை.. ஆனால் வார்த்தைகள் தடிக்கும் போது, வாய்த்தகராறு அடிதடியாக மாறுகிறது. அப்படிப்பட்ட சின்ன சின்ன சண்டைக்கு எல்லாம், கையில் கிடைப்பதை எல்லாம் தூக்கி அடித்து சிலர் கொலைக்காரனாக மாறிவிடுகிறார்கள். சிலர் தங்கள் உறவுகளை இழக்கிறார்கள். சிலர் வாழ்நாள் முழுக்க ஊனமாகிறார்கள் . அப்படித்தான் ஒரு சம்பவம் வேலூர் பகுதியில் நடந்துள்ளது.
வேலூர் மாவட்டம் திருவலம் அருகே கார்ணாம்பட்டு காலனி ராமர்கோவில் தெருவை சேர்ந்தவர்கள் பரசுராமன் (வயது 48). தமிழரசன் (39). இருவரும் அண்ணன் தம்பிகள். நேற்று முன்தினம் மழைபெய்தபோது மழைநீர் வீட்டுக்குள் வருவதை தடுக்க வீட்டின் முன்பு முரம்பு மண்ணை கொட்டியிருக்கிறார்கள். பக்கத்து வீட்டுக்காரரான ரமேஷ்குமார் (32), அவரது அண்ணன் பெயிண்டர் அருண்குமார் (36) ஆகிய இருவரும் சேர்ந்து இங்கு மண்ணை கொட்டக்கூடாது என தகராறு செய்திருக்கிறார்கள்.
இதில் வாக்குவாதம் ஏற்பட்டு, ரமேஷ்குமாரை, பரசுராமன் கடித்தாராம். அப்போது வலிதாங்க முடியாமல் பரசுராமனை, ரமேஷ்குமார் அடித்துள்ளார். இதை பார்த்த பரசுராமனின் தம்பி தமிழரசன் தடுக்க முயன்றுள்ளார். அப்போது ஆத்திரம் அடைந்த ரமேஷ்குமார், தமிழரசனின் மூக்கை கடித்து துப்பியுள்ளார். இதனால் ரத்தம் கொட்டியது. அருண்குமார் வாயில் குத்தியிருக்கிறார். அதில் தமிழரசனின் பல் உடைந்திருக்கிறது.
இதுகுறித்து பரசுராமன் திருவலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் காயமடைந்த தமிழரசனை வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்குக்கும், ரமேஷ்குமாரை வாலாஜா அரசு மருத்துவமனைக்கும் போலீசார் சிகிச்சைக்காக அனுப்பி வைத்திருக்கிறார்கள். இது குறித்து திருவலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மண் கொட்டிய சண்டையில் பல்லை உடைத்து, மூக்கை கடித்து துப்பிய சம்பவம் வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications