"சாதீ"யை சொல்லி.. இருளர் சிறுவனை நெருப்பில் தள்ளிவிட்ட கொடுமை.. திண்டிவனத்தில் என்ன நடக்கிறது?
பள்ளி மாணவனை சாதி பெயர் சொல்லி நெருப்பில் தள்ளி விட்டுள்ளனர் 3 பேர்
திண்டிவனம்: மீண்டும் பள்ளியில் சாதி பிரச்சனை எழுந்துள்ளது.. 6ம் வகுப்பு மாணவனை சாதி பெயரை சொல்லி அழைத்து நெருப்பில் தள்ளிய சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி வருகிறது.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த காட்டுச்சிவிரி பகுதியை சேர்ந்தவர் கன்னியப்பன்... 39 வயதாகிறது.. பழங்குடி இருளர் வகுப்பை சேர்ந்தவர். இவரது மகன் சுந்தர்ராஜ்.
11 வயதாகிறது.. அங்குள்ள ஒரு உயர்நிலைப் பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வருகிறான்.. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு, பள்ளியில் படிக்கும் சக மாணவர்கள் சுந்தர்ராஜன் பள்ளிக்கு போகும்போது, சாதி பெயரை சொல்லி அழைத்து, அவமானம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

சுந்தர்ராஜன்
இதனால் அவமானம் அடைந்த சுந்தர்ராஜன், தன்னுடைய அப்பாவிடம் சென்று நண்பர்கள் கேலி செய்ததை சொல்லி உள்ளான்.. இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த தந்தையும், பள்ளிக்கு சென்று தலைமை ஆசிரியரிடம் முறையிட்டுள்ளார்... இந்நிலையில் நேற்று மாலை வீட்டிலிருந்து சுந்தரராஜன் தன்னுடைய பாட்டி வீட்டுக்கு சென்று கொண்டிருந்தான்.. அப்போது, கருமகாரிய கொட்டகை அருகே, 3 பேர் நின்று கொண்டிருந்தனர்.. சுந்தர்ராஜனை பார்த்ததும், "வில்லி பையா இங்க வாடா" என்று அழைத்துள்ளனர்..

நெருப்பு
மேலும் அங்கே எரிந்து கொண்டிருந்த நெருப்பில் சிறுவனை தள்ளிவிட்டதாகவும் கூறப்படுகிறது.. அந்த நெருப்பில் நிலைகுலைந்து விழுந்துவிட்டான் சுந்தர்ராஜன்.. உடம்பெல்லாம் நெருப்பு பட்டு, படுகாயமடைந்து கதறி உள்ளான்.. பிறகு, வேறு வழியில்லாமல் அருகில் இருந்த தண்ணீர் டேங்க் ஒன்றில் குதித்து, தன் உடலை நனைத்து கொண்டுள்ளான்,.. பிறகு, அழுதுகொண்டே வீட்டிற்கு சென்றபோது, சுந்தர்ராஜனின் அம்மா மட்டும் இருந்துள்ளார்..

நெருப்பில் வெந்த சுந்தர்ராஜன்
மகன் நெருப்பில் வெந்துபோனதை பார்த்து கதறி உள்ளார்.. உடனடியாக கணவருக்கும் தகவல் சொல்லி வீட்டுக்கு வரவழைத்துள்ளார்.. தகவலறிந்து விரைந்து வந்த அப்பாவும், மகனின் உடலில் அதிக அளவில் தீக்காயம் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்... பின்னர் மணம்பூண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனையில் மகனை கொண்டு சேர்த்தனர்.

விசாரணை
பிறகு, இதுகுறித்து கன்னியப்பன் அளித்த புகாரின் பேரில் வெள்ளிமேடு பேட்டை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்... இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.. தீண்டாமைக் கொடுமை இன்னும் பள்ளி மாணவர்கள் மத்தியில் வளர்ந்து கொண்டிருப்பது பெரும் வேதனை அளிக்கிறது.. தமிழகத்தில் பள்ளி மாணவர்கள் தொடர்பாக சமீபகாலமாக வெளியாகும் செய்திகள் அனைத்தும் அதிர்ச்சியையும் கவலையையும் அளிக்கக் கூடியதாக உள்ளது..

ரோல்மாடல்கள்
மாணவர்கள் தங்களுக்குள் மோதிக் கொள்வது, ஆசிரியர்களை அடிக்கப் பாய்வது, வகுப்பறையில், பொதுவெளியில் கட்டுப்பாடில்லாமல் நடந்துகொள்வது, சாதியை அடையாளப்படுத்தி கயிறுகள் கட்டுவது, டீ சர்ட் போடுவது, போன்ற ஆபத்துகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. இவையெல்லாம் களைய பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது... சமீபகாலமாகவே, நரிக்குறவர் மற்றும் இருளர் இனத்தைச் சேர்ந்த மக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் எத்தனையோ நலத்திட்டங்களை வழங்கி, அந்த சமுதாய மக்களை அரவணைத்து வரும் நிலையில், இப்படி ஒரு சம்பவம் தற்போது நடந்துள்ளது அதிர்ச்சியையே கூட்டி வருகிறது.












Click it and Unblock the Notifications