ராமதாஸுக்கு ஆதரவு.. ஐயா சொல்படி தான் நாங்கள் நடப்போம்.. பாமக எம்எல்ஏ அருள் சொன்ன வார்த்தை!
விழுப்புரம்: பாமக நிறுவனரும், தலைவருமான ராமதாஸ் நடத்தும் கூட்டமே செல்லும் என்று அக்கட்சியின் எம்எல்ஏ அருள் தெரிவித்துள்ளார். ராமதாஸ் சொல்படியே நடப்போம் என்று கூறியுள்ள அருள், அன்புமணி நடக்கும் கூட்டம் பற்றியெல்லாம் தெரியாது என்றும் கூறி இருக்கிறார்.
பாமகவின் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையில் அதிகார மோதல் உச்சத்தில் இருக்கிறது. ஏப்ரல் மாதத்தில் அன்புமணியை தலைவர் பதவியில் இருந்து நீக்கிய ராமதாஸ், அடுத்தடுத்து அவர் மீது சரமாரியாக குற்றச்சாட்டுகளை முன் வைத்து வந்தார். தலைமை பண்பு கிடையாது, கூட்டணி குறித்து முடிவு சரியில்லை, வாரிசு அரசியல் என்று ஏராளமான கடுமையாக விமர்சனத்தை வைத்தார்.

அதுமட்டுமல்லாமல் பாமகவில் அன்புமணிக்கு ஆதரவாக இருந்த நிர்வாகிகளை அடுத்தடுத்து நீக்கி புதிய நிர்வாகிகளை நியமனம் செய்தார். இன்னொரு பக்கம் அன்புமணி, மாநில மற்றும் மாவட்ட அளவிலான நிர்வாகிகளை சந்தித்து தனது ஆதரவை நிரூபிக்க தொடங்கினார். இந்த சூழலில் ராமதாஸ், என் கடைசி மூச்சு இருக்கும் வரை பாமகவில் அன்புமணிக்கு தலைவர் பதவி கிடையாது என்று அறிவித்தார்.
அதேபோல் அன்புமணி உரிமை மீட்பு பயணத்தில் ராமதாஸின் புகைப்படம் இல்லாமல் அழைப்பிதழ் வெளியிட்டதோடு, ராமதாஸ் ஆதரவாளரான அன்பழகனையும் நீக்கி உத்தரவிட்டார். தற்போது திருவள்ளூர் மாவட்டத்தில் பாமக பொதுக்குழு கூட்டத்தை அன்புமணி நடத்தி வருகிறார். இன்னொரு பக்கம் புதிய நிர்வாகிகளை தைலாபுரத்தில் ராமதாஸ் சந்தித்து வருகிறார்.
ராமதாஸ் கூட்டிய கூட்டத்திற்கு பாமகவில் புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகள், பாமக கெளரவத் தலைவர் ஜிகே மணி, பாமக எம்எல்ஏ அருள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர். அப்போது செய்தியாளர்களை சந்தித்து பாமக எம்எல்ஏ அருள் பேசுகையில், மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்கள்.
அதற்காக வருகை தந்துள்ளோம். ஐயா என்ன சொல்கிறார்களோ, அவர் சொல்படி நடப்போம். ராமதாஸை நிறுவனராகவும், தலைவராகவும் கொண்டிருக்கிற கட்சிதான் பாமக. மற்ற கூட்டங்களை பற்றி எதுவும். வன்னியர் சமூக மக்களின் தெய்வத்தை பார்க்க வந்துள்ளோம். அவர் தலைமையில் நடக்கும் கூட்டமே செல்லும் என்று தெரிவித்துள்ளார்.
சில நாட்களுக்கு முன்பாக எம்எல்ஏ அருள், எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்வேன் என்று கூறி இருந்தார். தற்போது ராமதாஸ் அணி பக்கம் திரும்பி இருக்கிறார். ஏற்கனவே ஜிகே மணி, வன்னியர் சங்கத் தலைவர் அருள் மொழி ஆகியோர் ராமதாஸ் பக்கமே இருக்கிறார்கள். இதனால் கட்சியின் முக்கிய நிர்வாகிகளின் ஆதரவு ராமதாஸுக்கு இருப்பதாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications