வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு.. அன்புமணியின் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வீர்களா? ராமதாஸ் ஓபன் டாக்!
விழுப்புரம்: வன்னியர்களுக்கு 10.5 சதவிகித இட ஒதுக்கீடு வழங்காத திமுக அரசை கண்டித்து ஜூலை 20ம் தேதி அன்புமணி தலைமையில் நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க மாட்டேன் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
பாமகவில் நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி இடையில் மோதல் போக்கு தொடர்ந்து வருகிறது. பாமக தலைவரக அன்புமணியின் பதவிக்காலம் மே 29ஆம் தேதியுடன் முடிவடைந்துவிட்டது என்று தேர்தல் ஆணையத்திற்கு ராமதாஸ் கடிதம் அனுப்பி இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் தனது பேச்சை கேட்காதவர்கள் பெயரை பயன்படுத்தக் கூடாது என்றும் அதிர்ச்சி கொடுத்தார்.

ராமதாஸ் கொடுத்த அதிர்ச்சி
அதுமட்டுமல்லாமல் நாளுக்கு நாள் அன்புமணிக்கு புதிய புதிய சிக்கல்களை ராமதாஸ் உருவாக்கி வருவதாக பார்க்கப்படுகிறது. அதேபோல் பேரன் முகுந்தனுக்கு பாமகவில் பதவி கொடுத்ததற்கு அன்புமணி எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தற்போது சகோதரி காந்திமதியை நேரடியாக கட்சிக்குள் கொண்டு வந்துள்ளார் ராமதாஸ். இதனால் பாமக நிர்வாகிகளே அதிர்ச்சியில் இருக்கின்றனர்.
அன்புமணி ஆர்ப்பாட்டம்
இந்த நிலையில் வன்னியர்களுக்கு 10.5 சதவிகித இட ஒதுக்கீடு வழங்காத திமுக அரசை கண்டித்து ஜூலை 20ம் தேதி அன்புமணி தலைமையில் விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பாமகவினர் அனைவரும் பங்கேற்க அன்புமணி அறிவுறுத்தி வருகிறார். விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டம் நடப்பதால், ராமதாஸ் பங்கேற்பாரா என்ற கேள்வியும் எழுந்தது.
ராமதாஸ் பதில்
இதுகுறித்து ராமதாஸிடம் கேள்வி எழுப்பப்பட்ட போது, அன்புமணி தலைமையில் நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள மாட்டேன் என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அதேபோல் ஆர்ப்பாட்டம் என்று நடக்கிறது என்பதையும் கேட்டு தெரிந்து கொண்டார். அன்புமணி தொடர்ச்சியாக திமுக அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம், நடைபயணம் என்று நடத்த ஆயத்தமாகி வருகிறார்.
பாமக ஆயத்தம்
ஆனால் ராமதாஸ் தரப்பில் இதுவரை எந்த கட்சியையும் விமர்சிக்காமல் அமைதியாக இருந்து வருகிறார். ஏற்கனவே முதல்வர் ஸ்டாலினை தம்பி என்று கூறிய ராமதாஸ், கருணாநிதி மறையும் வரை ஸ்டாலின் எப்படி அமைதியாக இருந்தாரோ, அதேபோல் அன்புமணியும் இருக்க வேண்டும் என்று அட்வைஸ் செய்திருந்தார். அதேபோல் பாமகவில் நடக்கும் பிரச்சனைகளுக்கு திமுகவே காரணம் என்று அன்புமணி கூறி இருந்தார்.
2 பிரிவாக பாமக
அதனை மொத்தமாக ராமதாஸ் மறுத்திருந்தார். இதனால் வரும் தேர்தலில் திமுக கூட்டணியுடன் செல்ல ராமதாஸ் ஆயத்தமாகி வருகிறாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது. பாமக இரண்டாக உடையும் பட்சத்தில் அன்புமணி ஒரு பிரிவாகவும், ராமதாஸ் ஒரு பிரிவாகவும் செயல்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications