பச்சைக்கொடி.. அரசியல் ஆட்டத்தை தொடங்கும் விஜய்! விக்கிரவாண்டியில் தவெக மாநாட்டுக்கு போலீஸ் அனுமதி
விழுப்புரம்: நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாட்டுக்கு காவல்துறை அனுமதி வழங்கி உள்ளது. போலீஸ் சார்பில் கேட்கப்பட்ட 21 கேள்விகளுக்கு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பதிலளிக்கப்பட்ட நிலையில் செப்டம்பர் 23ம் தேதி திட்டமிடப்பட்ட மாநாட்டுக்கு விழுப்புரம் மாவட்ட காவல்துறை அனுமதி வழங்கி உள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் விஜய். இவர் கடந்த பிப்ரவரியில் தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கினார். கட்சிதொடங்கியபோதே 2026ல் நடக்கும் தமிழக சட்டசபையில் தான் போட்டியிட உள்ளதாக அறிவித்தார்.

இதையடுத்து தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தொகுதி வாரியாக நிர்வாகிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகர் விஜய் தனது கட்சியின் கொடியை அறிமுகம் செய்தார்.
மேலும் நடிகர் விஜயின் முதல் அரசியல் மாநாட்டை மதுரையில் நடத்த முடிவு செய்தார். தமிழகத்தில் அரசியல் கட்சி தொடங்கியவர்கள் மதுரையில் முதல் மாநாட்டை நடத்தி உச்சம் சென்றுள்ளனர். அந்த சென்டிமெண்ட்டை மனதில் வைத்து நடிகர் விஜய் மதுரையில் மாநாடு நடத்த இடம் தேர்வு செய்ய அறிவுறுத்தினார். ஆனால் மதுரையில் மாநாடு நடத்த இடம் கிடைக்கவில்லை.
அதன்பிறகு திருச்சி, சேலம், கோவை உள்ளிட்ட இடங்களில் மாநாடு நடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. அதுவும் கைக்கூடவில்லை. இதையடுத்து விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வி.சாலை பகுதியில் விஜய் மாநாடு நடத்த இடம் கிடைத்தது. இதையடுத்து செப்டம்பர் 23ம் தேதி வி.சாலையில் மாநாடு நடத்தவும், பாதுகாப்பு வழங்கவும் விழுப்புரம் எஸ்பியிடம் அனுமதி கோரப்பட்டது.
ஆனால் காவல்துறை உடனடியாக அனுமதி வழங்கவில்லை. மாநாடு தொடர்பாக 21 கேள்விகள் கேட்டு தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்துக்கு கடிதம் எழுதப்பட்டது. அதில் மாநாட்டில் எத்தனை பேர் கலந்து கொள்வார்கள்? எந்தெந்த மாவட்டத்தில் இருந்து தொண்டர்கள் வருவார்கள். உணவு வசதி எப்படி செய்யப்படுகிறது? தீதடுப்பு மற்றும் அவசர மருத்துவ உதவிக்கான ஏற்பாடுகள் குறித்து 21 கேள்விகள் கேட்கப்பட்டு இருந்தது. மேலும் முழுமையான நிகழ்ச்சி நிரல் பற்றிய விபரமும் கேட்கப்பட்டு இருந்தது.
இதற்கு புஸ்ஸி ஆனந்த் சார்பில் 21 கேள்விகளுக்கு பதில் அளித்து வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் விழுப்புரம் துணை காவல் கண்காணிப்பாளர் சுரேஷிடம் நேற்று முன்தினம் உரிய ஆவணங்களுடன் பதிலளித்தார். இதனை பரிசீலனை செய்த காவல்துறை நடிகர் விஜயின் முதல் அரசியல் மாநாட்டுக்கு அனுமதி வழங்கி உள்ளது. இதன்மூலம் விக்கிரவாண்டி வி.சாலையில் செப்டம்பர் 23ம் தேதி நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நடப்பது உறுதியாகி உள்ளது.
முன்னதாக விஜயின் அரசியல் மாநாட்டுக்கு போலீஸ் சார்பில் அனுமதி வழங்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்டது. இதனை தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா, அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்பட பல அரசியல் கட்சி தலைவர்கள் விமர்சனம் செய்தனர்.
மாநாட்டுக்கு உடனே அனுமதி வழங்கி பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று அவர்கள் கூறியிருந்தனர். இந்நிலையில் தான் நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போலீசாரின் 21 கேள்விகளுக்கும் சரியாக பதிலளிக்கப்பட்டுள்ளதால் தற்போது மாநாட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள், தொண்டர்கள், விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
மேலும் நடிகர் விஜய் கட்சி பெயரை அறிவித்து கொடியை அறிமுகம் செய்து இருந்தாலும் கூட அவர் இன்னும் கட்சியின் கொள்கை, கொடியில் இடம்பெற்றுள்ள நிறம் மற்றும் சர்ச்சையை ஏற்படுத்திய வாகை மலர் குறித்து இன்னும் எதுவும் பேசவில்லை. இதற்கு நடிகர் விஜய் விக்கிரவாண்டி மாநாட்டில் விளக்கம் அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன்மூலம் நடிகர் விஜயின் அரசியல் என்பது யாரை மையப்படுத்தி இருக்கும் என்பதை ஓரளவுக்கு கணிக்க முடியும் என்பதால் இந்த மாநாடு என்பது பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது












Click it and Unblock the Notifications