கண்ணிமைப்பதற்குள் நடந்த விபத்து.. 2 மாணவர்களின் உயிரை பறித்த மினி பஸ்.. ஸ்ரீவில்லிபுத்தூரில் ஷாக்
விருதுநகர்: ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே மினி பேருந்து கவிழ்ந்து விபத்தில் சிக்கியதில் 2 பள்ளி மாணவர்கள் பலியாகியுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு பகுதியில் அரசு மேல்நிலை பள்ளி ஒன்று இருக்கிறது. இந்த பள்ளியில் அக்கம் பக்கத்திலுள்ள கிராமங்களிலிருந்து நூற்றுக்கணக்கான மாணவர்கள் வந்து பயில்கின்றனர். இப்படி இருக்கையில் இவர்கள் மாலையில் புதுப்பட்டி நோக்கி செல்லும் மினி பேருந்தில் வீட்டிற்கு செல்வது வழக்கம். அப்படித்தான் இன்று மாலையும் சுமார் 30 மாணவர்கள் இந்த பேருந்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்துள்ளனர். இந்நிலையில் பேருந்து கிருஷ்ணா பேட்டை அருகே வந்தபோது விபத்தில் சிக்கியுள்ளது.

பேருந்து வேகமாக வந்ததால் திருப்பத்தில் சரியாக திரும்பாமல் அருகில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்திருக்கிறது. இதில் சம்பவ இடத்திலேயே 12ம் வகுப்பு படிக்கும் அரசு பள்ளி மாணவர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர். அதேபோல 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். அவர்களை மீட்ட அக்கம் பக்கத்தினர் வத்திராயிருப்பு அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்தள்ள காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications