சுடுமண்ணால் ஆன பெண்ணின் தலை.. ஒட்டுமொத்த தமிழ்நாடே வியந்து நோக்கும் வெம்பக்கோட்டை அகழாய்வு!
விருதுநகர்: வெம்பக்கோட்டையில் சுடுமண்ணால் ஆன பெண்ணின் தலைப்பகுதி கண்டெடுக்கப்பட்டிருக்கிறது. ஏற்கெனவே இங்கு ஏராளமான பழங்கால பொருட்கள் கண்டெடுக்கப்பட்டிருக்கும் நிலையில், தற்போது பெண்ணின் தலைப்பகுதி கிடைத்திருப்பது அகழ்வாய்வை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.
தமிழர்களின் வரலாற்றையும், பண்பாட்டையும் அறிந்துக்கொள்ளும் பொருட்டு அகழ்வாய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த காலங்களில் தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை மேற்கொண்ட அகழாய்வுகளின் அறிவியல் அடிப்படையிலான பகுப்பாய்வு முடிவுகள் மூலம் தமிழ்நாட்டின் வரலாற்றில் புதிய வெளிச்சம் ஏற்பட்டுள்ளது.

கீழடி அகழாய்வு, தொல்லியலாளர்கள் இடையே மட்டுமின்றி உலகத் தமிழர்கள் இடையேயும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்ச் சமூகமானது, கி.மு. ஆறாம் நூற்றாண்டில் படிப்பறிவும் எழுத்தறிவும் பெற்ற மேம்பட்ட சமூகமாக விளங்கியதை கரிமப் பகுப்பாய்வுகளின் முடிவுகள் வாயிலாக உறுதியாக நிலைநிறுத்தியுள்ளது.
அதேபோல பொருநை ஆற்றங்கரை நாகரிகம், 3200 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்பதை சிவகளை அகழாய்வில் கிடைக்கப்பெற்ற நெல் உமியினை பகுப்பாய்வு செய்ததன் வாயிலாக உறுதி செய்ய முடிகிறது. அதேபோன்று, கிருஷ்ணகிரி மாவட்டம், மயிலாடும்பாறை அகழாய்வில் பெறப்பட்ட இரண்டு அக்செலரேட்டர் மாஸ் ஸ்பெக்ட்ரோமெட்ரி காலக் கணிப்பு முடிவுகள் வாயிலாக தமிழ்நாட்டில் இரும்பு 4200 ஆண்டுகளுக்கு முன்னதாக அறிமுகப்படுத்தப்பட்டது உறுதி செய்ய முடிகிறது.
இந்நிலையில், கீழடி மற்றும் அதன் அருகிலுள்ள தொல்லியல் தளமான கொந்தகை, வெம்பக்கோட்டை, கீழ்நமண்டி, பொற்பனைக்கோட்டை, திருமலாபுரம், சென்னானூர், கொங்கல்நகரம் மற்றும் மருங்கூர் ஆகிய எட்டு இடங்களில் தொல்லியல் அகழாய்வுப் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 19ம் தேதி தொடங்கி வைத்தார்.
தொல்லியல் துறை சார்பில் 2024ம் ஆண்டிற்கான அகழாய்வுப் பணிகளின் தொடக்கமாக சிவகங்கை மாவட்டம் - கீழடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதியான கொந்தகை, விருதுநகர் மாவட்டம்- வெம்பக்கோட்டை, திருவண்ணாமலை மாவட்டம் - கீழ்நமண்டி, புதுக்கோட்டை மாவட்டம் - பொற்பனைக்கோட்டை, தென்காசி மாவட்டம் - திருமலாபுரம், கிருஷ்ணகிரி மாவட்டம் - சென்னானூர், திருப்பூர் மாவட்டம் - கொங்கல்நகரம் மற்றும் கடலூர் மாவட்டம் - மருங்கூர் ஆகிய எட்டு இடங்களில் அகழாய்வுப் பணிகளை தொடங்கி வைத்தார்.
அந்த வகையில் விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையில் மூன்றாம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. ஏற்கெனவே இந்த பகுதியிலிருந்து சுமார் 6,000 ஆண்டுகளுக்கு முந்தைய காலகட்டத்தில் மக்கள் பயன்படுத்திய பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. அர்ச்சுனா நதி, அனுமன் நதி, குண்டாறு, தேவியாறு, மற்றும் வைப்பாறு போன்ற ஆற்றங்கரையையொட்டி அமைந்துள்ள வெம்பக்கோட்டையில் வாழ்ந்த தமிழர்கள் எழுத்தறிவுமிக்கவர்களாக இருந்திருக்கிறார்கள்.
இப்படி இருக்கையில் தற்போது சுடுமண்ணால் ஆன பெண்ணின் தலைப்பகுதி கண்டெடுக்கப்பட்டிருப்பது தொல்லியல் ஆய்வாளர்களிடையே ஆர்வத்தை தூண்டியிருக்கிறது.












Click it and Unblock the Notifications