இன்று திமுக தென் மண்டல மாநாடு… 2 லட்சம் பேர் திரள்வார்கள் என எதிர்பார்ப்பு
விருதுநகர்: விருதுநகர் பட்டம் புதூரில் இன்று தி.மு.க. தென் மண்டல மாநாடு நடைபெறுகிறது. இதில் 2 லட்சம் தொண்டர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி அதிமுக தலைமையில் ஒரு அணியும், திமுக தலைமையில் மற்றொரு அணியும் தேர்தலை சந்திக்கிறது. திமுக கூட்டணியில் நேற்றுடன் தொகுதி பங்கீடு முடிவடைந்த நிலையில், அந்தக் கூட்டணியின் கட்சித்தலைவர்கள் தேர்தல் பிரச்சார பணிகளில் மும்முரமாக இறங்கியுள்ளனர்.
இந்த நிலையில் விருதுநகர் பட்டம் புதூரில் நடக்க உள்ள திமுக தென் மண்டல மாநாடு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இதேபோல், அதிமுக சார்பில் சென்னை வண்டலூரில் பிரமாண்ட பொதுக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கதவை மூடிய திமுக.. சிக்கலில் தேமுதிக.. குடுமி அதிமுக கையில்!
இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். இரு கட்சிகளும் ஒரே நேரத்தில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது . இதனால் தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.
முன்னதாக, திமுக தொண்டர்களுக்கு அக்கட்சியின் தலைவர் மு க ஸ்டாலின் எழுதிய கடிதத்தில், தாய்நாட்டு மக்களை ஏமாளிகளாக்காமல் காத்திட, இரண்டு ஆட்சியாளர்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.
கடந்த 2004 ஆம் ஆண்டு விருதுநகரில் தென் மண்டல மாநாடு நடைபெற்றதாகவும், அதன் பிறகு மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதாகவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார். அதே வரலாறு இந்த மக்களவைத் தேர்தலிலும் உறுதியாகத் திரும்பும் என்றும் தெரிவித்திருந்தார்.