ஈரோட்டை பார்த்து பயந்துபோய்.. இலங்கை ஓடிவிட்டார் அண்ணாமலை.. காங்கிரஸ் எம்.பி. கிண்டல்
ஈரோடு பிரச்சாரத்திற்கு பயந்து அண்ணாலை இலங்கை சென்றதாக மாணிக்கம் தாகூர் கூறியுள்ளார்.
விருதுநகர்: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்கு பயந்தே அண்ணாமலை இலங்கைக்கு பயணம் சென்றுள்ளதாக காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் விமர்சித்துள்ளார். அதேபோல் உலகின் 2வது பணக்காரராக அதானியை மாற்றிய பெருமையும், அதிமுகவை நான்கு துண்டுகளாக பிரித்த பெருமையும் பாஜகவுக்கும், மோடிக்கும் சேரும் என்றும் விமர்சித்துள்ளார்.
விருதுநகர் அருகே மீசலூர் செவல்பட்டியில் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.7.50 லட்சம் செலவில் கட்டப்பட்ட கலையரங்கத்தை காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் திறந்து வைத்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் கூறுகையில், ஏழை, எளிய மக்களுக்கு குறிப்பாக 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை நம்பி இருக்கும் சாமானிய கிராமப்புற மக்களின் வயிற்றில் அடிக்கிற பட்ஜெட்டாக இந்த பட்ஜெட்டாக உள்ளது.

மத்திய பட்ஜெட்
100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்திற்கான நிதியில் ரூ.30 ஆயிரம் கோடியை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குறைத்துள்ளார். ஏழ்மையைப் பற்றியோ, மக்ககளின் வலியைப் பற்றியோ உழைப்பவர்கள் பற்றியோ நிர்மலா சீதாராமனுக்கு எந்த ஒரு சிந்தனையும் இல்லை என்பதை மீண்டும் காட்டியுள்ளார் என்று தெரிவித்தார்.

அதானி விவகாரம்
தொடர்ந்து அதானி விவகாரம் பற்றிய கேள்விக்கு, பிரதமர் நரேந்திர மோடி கடந்த 8 ஆண்டுகளாக அதானிக்காக கடுமையாக உழைத்து உள்ளார். உலக பணக்காரர்கள் வரிசையில் 609வது இடத்தில் இருந்து இரண்டாவது இடத்திற்கு அதானியை மாற்றிய பெருமை நரேந்திர மோடியை மட்டுமே சாரும். அதானியின் நலனுக்காக செயல்படுகின்ற அரசாக இந்த அரசு மாறியிருக்கிறது.

பதில் சொல்லாத மோடி
அதானி பற்றி ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் எழுப்பிய நான்கு கேள்விகளுக்கு பிரதமர் மோடியால் பதில் சொல்லவில்லை. ராகுல் காந்தி மற்றும் அதானி ஆகிய இருவரின் பெயர்களையும் உச்சரிப்பதை மோடி தவிர்க்கிறார். ராகுல் காந்தியை உள்ளத்தாலும் உணர்வாலும் மோடி எதிர்க்கிறார். ராகுல் காந்தி என்ன சொன்னாலும் அதை ஏற்றுக் கொள்வதில்லை என்று தெரிவித்தார்.

அண்ணாமலைக்கு வாழ்த்து
தொடர்ந்து ஈரோடு இடைத்தேர்தல் பற்றிய கேள்விக்கு, ஈரோடு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றியை பெறுவார். திமுகவின் நல்லாட்சியின் சான்றாக இந்த தேர்தல் வெற்றி இருக்கும். அண்ணாமலை ஈரோடு இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்கு பயந்து இலங்கைக்கு பயணம் சென்றுள்ளார். ஈரோடு பக்கமே தலைவைத்து படுக்காமல் இலங்கைக்கு சென்றுள்ள அண்ணாமலைக்கு என் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்தார்.

அதிமுகவை பிரித்த பெருமை
பின்னர் மாநில ஆட்சியை கலைத்தது காங்கிரஸ் என்று மோடி பேசியது பற்றிய கேள்விக்கு, சசிகலா, டிடிவி தினகரன், எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓபிஎஸ் என அதிமுகவை நான்கு துண்டாக பிரித்த பெருமை பாஜகவையும், மோடியையும் சாரும். அதிமுக தொண்டர்கள் மன்னிக்கக் கூடாத ஒரே கட்சி பாஜக தான். காங்கிரஸ் தான் அதிமுகவை அழித்தது என மோடி பொய்யான பிரச்சாரம் செய்து வருகிறார். மோடி எப்போதும் பொய்யை பேசுபவராகவே இருக்கிறார் என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications