தமிழக மழை வெள்ளப்பாதிப்பு! தேசிய பேரிடராக அறிவிக்க மறுத்த மத்திய அரசை கண்டித்து மதிமுக ஆர்ப்பாட்டம்
விருதுநகர்: தமிழக மழை வெள்ளப் பாதிப்புகளை தேசிய பேரிடராக அறிவிக்க மறுத்த மத்திய அரசை கண்டித்து மதிமுக முதல் ஆளாக இன்று மாலை ஆர்ப்பாட்டம் நடத்துகிறது.
தமிழக மழை வெள்ள நிவாரணம் குறித்தும், தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது எனவும் 2 நாட்களுக்கு முன்னர் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டியளித்தது தமிழக அரசியல் களத்தில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பலரும் நிர்மலா சீதாராமன் கருத்துக்கு பதிலடிகள் கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் மதிமுக இன்னும் ஒரு படி மேலாக நேரடியாக களத்தில் இறங்கி மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்துகிறது. இது குறித்து துரை வைகோ கூறியிருப்பதாவது;
''வரலாறு காணாத இயற்கைப் பேரிடரால் தமிழ்நாட்டு மக்கள் துயரக் கடலில் மூழ்கி இருக்கிறார்கள். டிசம்பர் 4ஆம் தேதி வீசிய மிக்ஜாம் புயலால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. பெருமழையின் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. தமிழ்நாடு அரசு மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் மிக்ஜாம் புயலில் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. ''
''டிசம்பர் 17, 18 ஆகிய தேதிகளில் தென் மாவட்டங்களான நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் பெய்த பெருமழையால் மீள முடியாத துயரத்தில் தென்மாவட்ட மக்கள் சிக்கி இருக்கிறார்கள். வாழ்வாதாரத்தை முற்றிலும் இழந்து தவிக்கிறார்கள். எனவே தமிழ்நாடு அரசு தமிழ்நாட்டை பேரிடர் பாதித்த மாநிலமாக அறிவிக்க கோரி இருக்கிறது.''
''ஆனால் ஒன்றிய பாஜக அரசு அதனை ஏற்காமல் போதிய நிதியும் ஒதுக்கீடு செய்யாமல் தமிழ்நாட்டை வஞ்சித்து வருகிறது. அவ்வாறு தமிழ்நாட்டை வஞ்சித்து வரும் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து தமிழ்நாட்டை பேரிடர் பாதித்த மாநிலமாக அறிவிக்கக் கோரி இன்று மாலை 03:00 மணிக்கு கழகத்தின் முதன்மைச் செயலாளராகிய எனது தலைமையில் விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் காமராஜர் சிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.''












Click it and Unblock the Notifications