வெற்றிக்கு "சின்ராசு"! பிரச்சினைக்கு "நாட்டாமை"! விருதுநகரில் கலகலப்பூட்டிய ராதிகா சரத்குமார்
விருதுநகர்: சூர்யவம்சம் சின்ராசு மாதிரி இந்த நாட்டாமை எனக்கு பக்கபலமாக இருக்கிறார் என கணவர் சரத்குமார் குறித்து ராதிகா கலகலப்பாக பேசியிருந்தார்.
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலையொட்டி அதிமுக, திமுக, பாஜக, நாம் தமிழர் என 4 முனை போட்டி நிலவி வருகிறது. ஒவ்வொரு தொகுதியிலும் பிரச்சாரங்கள் களை கட்ட தொடங்கிவிட்டன.

முதல்வர் ஸ்டாலின், முன்னாள் முதல்வர் ஸ்டாலின், டிடிவி தினகரன், திமுக எம்பி கனிமொழி, திமுக அமைச்சர்கள், அதிமுக முன்னாள் அமைச்சர்கள், தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா, பாமக தலைவர் அன்புமணி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் பிரச்சாரத்தை தொடங்கிவிட்டனர்.
அந்த வகையில் நட்சத்திர தொகுதியாக பார்க்கப்படுவது விருதுநகர் தொகுதி. இங்கு காங்கிரஸ் கட்சியின் மாணிக்கம் தாகூரும் தேமுதிக சார்பில் விஜய பிரபாகரன், பாஜக சார்பில் ராதிகா சரத்குமார், நாம் தமிழர் கட்சி சார்பில் 26 வயதான டாக்டர் கவுஷிக் ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.
இந்த நிலையில் நேற்று காலை விருதுநகர் மக்களவைத் தொகுதிகளுக்கு வந்த பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார் முக்கிய கோயில்களுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்துவிட்டு பிரச்சாரத்தை தொடங்கினார். இதைத் தொடர்ந்து அவர் அருப்புக்கோட்டை, சிவகாசி, சாத்தூர், விருதுநகர் உள்ளிட்ட இடங்களில் வேட்பாளர் அறிமுக கூட்டங்களில் கலந்து கொண்டு பேசினார்.
அந்த வகையில் விருதுநகரில் நடந்த வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் ராதிகா பேசுகையில், தற்போது நடைபெற போவது நாடாளுமன்றத் தேர்தல், ஏதோ இது சட்டசபைக்கான தேர்தல் என நினைத்துக் கொண்டு சிலர் புரியாமல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நாட்டை யார் ஆள வேண்டும் என்பதற்கான தேர்தல் இது.
கடந்த 10 ஆண்டுகளாக இந்தியா பல்வேறு துறைகளில் வளர்ச்சியை கண்டுள்ளது. நாட்டை பிரதமர் திறம்பட ஆட்சி செய்து வருகிறார். இந்த நிலையில் இந்தியாவை மேலும் வளமாக்க பிரதமர் மோடியின் கரங்களை வலுவாக்குவோம். கடந்த தேர்தலை போல் திருமங்கலம் ஃபார்முலா தற்போது எடுபடாது. மக்கள் யாரும் ஏமாற மாட்டார்கள்.
அனுபவமிக்க அரசியல்வாதிகள், கட்சி பொறுப்பாளர்கள் உள்ள பாஜகவில் இணைந்ததில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். பாஜகவில் இருப்பதை போல் காரியகர்த்தாக்கள் வேறு எந்த கட்சியிலும் பார்க்க முடியாது. சிரித்த முகத்துடன் வரவேற்கிறார்கள். எத்தனை வெறியுடன் வேலை செய்கிறார்கள்? பார்க்கவே ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது.
நீங்கள் சூர்யவம்சம் படம் பார்த்திருப்பீர்கள். அதில் தனது மனைவியை படிக்க வைத்து கலெக்டராக்கி அழகு பார்க்கும் சின்ராசுவை போல் அரசியலில் கூட எனக்கு தூண் இல்லாமல் ஆலமரம் போல் இந்த நாட்டாமை பக்கபலமாக இருப்பார். என்னை பெரியாளாக்குவதற்கு பக்கபலமாக சரத்குமார் உழைத்துக் கொண்டிருக்கிறார்.
இந்த தொகுதியில் எந்த பிரச்சினை வந்தாலும் உடனடியாக இந்த நாட்டாமையை நான் கூப்பிட்டு விடுவேன். நாம் அனைவரும் சேர்ந்து ஒரு உழைப்பை கொடுக்க வேண்டும். அரசியல் எனக்கு புதிதல்ல. நிறைய மேடைகளை நான் பார்த்துள்ளேன். நான் எதற்காக இங்கு வந்தேன், எனக்காகவா இல்லை, சமுதாயம் நன்றாக இருக்க வேண்டும். இந்த தொகுதி மக்கள் வேலைவாய்ப்பு, உணவு, இருப்பிடம் உள்ளிட்டவைகளுடன் சுயமரியாதையுடன் வாழ வேண்டும் என்பதற்காக நான் இங்கு வந்தேன்.
நான் உழைப்பை மட்டுமே நம்பி வந்தவள். என் வாழ்க்கையில் இந்த உழைப்பு எனக்கு துரோகம் செய்ததே இல்லை. அந்த உழைப்பு என்றைக்குமே ஒரு பலமாக இருக்கும். என்னை தட்டி கொடுத்து எனக்கு தன்னம்பிக்கையை ஊட்டி, எனக்கு இந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த கணவருக்கு நான் நன்றி சொல்லிக் கொள்கிறேன்.
முன்பெல்லாம் சரத்குமாருக்காக தேர்தல் பணிக்காக ஒவ்வொரு ஊருக்கு சென்றிருக்கிறேன். பார்ப்பதற்கே சங்கடமாக இருக்கும். குடிக்க தண்ணீர் இல்லாமல் மக்கள் கஷ்டப்படுவார்கள், வீட்டு வாசலில் சாக்கடை நீர் ஓடும்.. என்னங்க இது 50 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த நீங்கள் என்னதான் செய்தீர்கள். திராவிடம் திராவிடம் என பேசுகிறீர்களே, உங்கள் குடும்பத்தினரை தவிர வேறுயார் தான் உயர்ந்திருக்கிறார்கள் என கொந்தளித்தபடியே பேசினார்.












Click it and Unblock the Notifications