வெயில் மழையில் உழைத்த பெண்கள்.. ஏழைகள் வயிற்றில் அடிக்கும் மோடி! அமைச்சர் தங்கம் தென்னரசு காட்டம்!
விருதுநகர்: 100 நாள் வேலை திட்டத்திற்கு வழங்க வேண்டிய நிதியை மத்திய அரசு விடுவிக்காமல் இருப்பதாகவும், வெயிலிலும், மழையிலும் உழைத்த பெண்களுடைய கண்ணீருக்கு ஒன்றிய அரசு பதில் சொல்ல வேண்டும் என தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு விமர்சித்துள்ளார்.
மகாத்மா காந்தி 100 நாள் வேலை திட்டத்திற்கு சம்பளத் தொகையை விடுவிக்காத மத்திய அரசை கண்டித்து திமுக சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் செங்குன்றாபுரத்தில் நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, "ஒன்றிய பாஜக அரசு தமிழகத்திற்கு தரவேண்டிய நிதியை விடுவிக்காமல் உள்ளது. 100 நாள் வேலை திட்டத்திற்கு தரவேண்டியுள்ள 4034 கோடி ரூபாயை தர மறுக்கிறது. இங்கு மட்டுமல்ல பாஜக இன்றி எதிர்க்கட்சிகள் ஆளுகிற எல்லா மாநிலத்திலும் 100 நாள் வேலைத்திட்ட தொகை தரப்படவில்லை. ஆனால் பாஜக ஆளும் மாநிலங்களில் 100 நாள் வேலைத் திட்டத்திற்கு வழங்க வேண்டிய நிதி தரப்படுகிறது.
பாஜக அரசு எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை தராமல் வஞ்சிக்கிறது. கடந்த நவம்பர் மாதத்தில் இருந்து திட்டத்திற்கு நிதி வழங்கவில்லை. நம்முடைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதியுடன் ஒன்றிய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், சிவ்ராஜ் சிங் சவுகான் ஆகியோரை நேரில் சந்தித்து 100 நாள் வேலை திட்டத்திற்கு வழங்க வேண்டிய நிதியை விடுவிக்க கோரி வலியுறுத்தப்பட்டது. இதுவரை வழங்கப்படவில்லை.
இந்த தொகையானது இங்கே கூடி இருக்கக்கூடிய பெண்களுக்கு தர வேண்டிய சம்பளப் பணம். வெயிலிலும் மழையிலும் காடு கரைகள் எங்கும் உழைத்த பெண்களுக்கு தர வேண்டிய பணம். உழைத்தவருக்கு கூலியை கொடுங்கள் என்கிற உரிமையை கேட்கின்றோம். இது மட்டுமல்ல கல்விக்கு வழங்க வேண்டிய 3500 கோடி நிதியை இந்தி மொழி கற்றால் தான் தருவோம் என மிரட்டியது. அவர்களின் மிரட்டலுக்கு அடிபணியாமல் அந்த நிதியே வேண்டாம் என முழங்கினோம். ஆனால் இது ஏழை மக்களுடைய வயிற்றில் அடிக்கும் செயல். ஏழையின் கண்ணீர் இந்த நாட்டு மன்னனை தண்டித்தே தீரும். இதிலிருந்து மோடி அரசு தப்பவே முடியாது. இதற்கு இந்த அரசு பதில் சொல்ல வேண்டும். தமிழக மக்களின் குரலுக்கு செவி மடுத்து உடனடியாக ஒன்றிய அரசு தமிழகத்திற்கு தர வேண்டிய நிதியை விடுவிக்க வேண்டும்" எனக் கூறினார்.












Click it and Unblock the Notifications