விஏஓ டூ தாசில்தார் விடை தெரியாத கேள்வி.. விருதுநகரில் பொறியில் சிக்கிய பெண் அரசு அதிகாரி.. சிக்கல்
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் நரிக்குடி யூனியன் ஆபீஸில் ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வட்டார வளர்ச்சி பெண் அலுவலர் அதிரடியாக கைதாகி உள்ளார். 5 லட்சத்தில் சாலை அமைக்கும் பணி நடந்து முடிந்த நிலையில் அதற்கான பில்லை அனுமதிக்க வேண்டும் என்றால், 3000 ரூபாய் லஞ்சம் வேண்டும் என்று கேட்டதாக கூறப்படுகிறது. அவரை லஞ்ச ஒழிப்பு போலீசார் பொறிவைத்து பிடித்தனர்.
அரசு அதிகாரிகள் லஞ்சம் பெறுவதை தடுக்க லஞ்ச ஒழிப்புபோலீசார் தீவிரமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். கிராம நிர்வாக அலுவலர் முதல் நிள அளவையர், தாசில்தார், நகராட்சி கமிஷனர், மாநகராட்சி அதிகாரிகள், பத்திரப்பதிவாளர்கள் என யாராக இருந்தாலும் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தால் அவர்களை பொறிவைத்து பிடிக்கும் அதிகாரிகள் கைது செய்கிறார்கள். கைது நடவடிக்கையை எதிர்கொள்ளும் அரசு ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள்.

அதன்பிறகு விசாரணையை எதிர்கொண்டபடி சஸ்பெண்ட் முடிந்ததும் மீண்டும் வேலையில் சேருவார்கள். அந்த வகையில் கடந்த சில மாதங்களில் மட்டும ஏராளமான அரசு ஊழியர்கள் லஞ்ச வழக்கில் கைதாகி உள்ளார்கள். பத்திரப்பதிவு, பட்டா, சாலை ஒப்பந்தம், நில அளவை, வாரிசு சான்றிதழ், சொத்து பாகப்பிரிவினை என பல விஷயங்களுக்கு லஞ்சம் வாங்கியதாக கைதாகி உள்ளார்கள்.
அப்படித்தான் விருதுநகர் மாவட்டத்தில் பெண் அதிகாரி ஒருவர் லஞ்சம் வாங்கியதாக கைதாகி உள்ளார். விருதுநகர் மாவட்டம் நரிக்குடி யூனியன் இலுப்பைக்குளத்தில் ரூ.5 லட்சத்தில் சாலை அமைக்கும் பணி நடந்தது. இந்த பணி முடிந்த நிலையில் அதற்கான பணத்தை பெறுவதற்காக துணை காண்டிராக்டர் அஜித்குமார் (வயது 26) என்பவர், நரிக்குடி யூனியன் அலுவலகத்திற்கு சென்று வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயபுஷ்பத்தை (48) சந்தித்துள்ளார். அப்போது வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயபுஷ்பம் , ஒப்பந்த பணிக்கான பணத்தை அனுமதிக்க ரூ.5 ஆயிரம் லஞ்சம் தர வேண்டும் என அஜித்குமாரிடம் கேட்டதாக கூறப்படுகிறது. லஞ்சம் கொடுக்க விரும்பாத அஜித்குமாரிடம் ரூ.3 ஆயிரமாவது தரவேண்டும் என ஜெயபுஷ்பம் வற்புறுத்தினாராம்.
இதனால் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயபுஷ்பம் பற்றி விருதுநகர் லஞ்ச ஒழிப்பு போலீசில் அஜித்குமார் புகார் அளித்தார். லஞ்ச ஒழிப்பு போலீசாரின் ஏற்பாட்டின் பேரில், ரசாயன பவுடர் தடவிய ரூ.3 ஆயிரத்துக்கான பணநோட்டுகளை அஜித்குமாரிடம் போலீசார் கொடுத்தனுப்பினர்.
அந்த பணத்தை அஜித்குமார், விருதுநகர் மாவட்டம் நரிக்குடி யூனியன் அலுவலகத்துக்கு கொண்டு சென்றார். அங்கு அமர்ந்திருந்த வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயபுஷ்பத்திடம் கொடுத்தார். அப்போது அங்கு மறைந்து நின்றிருந்த லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி ராமச்சந்திரன், இன்ஸ்பெக்டர்கள் சால்வன்துரை, பூமிநாதன் மற்றும் போலீசார் விரைந்து சென்று வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயபுஷ்பத்தை கையும், களவுமாக கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் தீவிர விசாரணை நடந்தது. இந்த அதிரடி நடவடிக்கை யூனியன் அலுவலகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications