முகமது யூனுஸ் பதவி விலகனும்.. மோடி தங்கியிருந்த மாளிகை அருகே பயங்கர கோஷம்.. பரபரத்த அமெரிக்கா
வாஷிங்டன்: வங்கதேசத்தின் இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் பதவி விலக வேண்டும் என்று அமெரிக்காவில் பிரதமர் மோடி தங்கியிருந்த மாளிகையின் அருகே ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சியை சேர்ந்தவர்கள் பேனர்களுடன் வந்து போராட்டம் நடத்தி கோஷமிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
வங்கதேசம் தனிநாடாக உருவாக போராடிய தியாகிகளின் வாரிசுகளுக்கான இடஒதுக்கீட்டுக்கு எதிராக கடந்த ஆண்டு அங்கு மாணவர்கள் போராட்டம் வெடித்தது. இந்த போராட்டம் வன்முறையானது. பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா பதவியை ராஜினாமா செய்து நம் நாட்டில் தஞ்சமடைந்தார்.

தற்போது வங்கதேசத்தில் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு நடந்து வருகிறது. இவர் பாகிஸ்தான் ஆதரவாளர். இதனால் தற்போது வங்கதேசத்துக்கும் நம் நாட்டுக்கும் இடையேயான உறவு என்பது மோசமாகி உள்ளது.
வங்கதேசம் உருவாக பாகிஸ்தான் ராணுவத்துக்கு எதிராக நம் நாட்டு வீரர்கள் தான் போரிட்டு வெற்றி பெற்றனர். அந்த நன்றியை மறந்து முகமது யூனுஸ் தற்போது பாகிஸ்தானுடன் நட்பு பாராட்டி வருகிறார். மேலும் ஷேக் ஹசீனா மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளதை சுட்டிக்காட்டி உடனடியாக அவரை வங்கதேசத்துக்கு நாடு கடத்த வேண்டும் என்று முகமது யூனுஸ் அரசு நம் நாட்டுக்கு மீண்டும் மீண்டும் அழுத்தம் கொடுத்து வருகிறது.
ஆனால் நம் நாடு அவரை நாடு கடத்த இன்னும் இசைவு தெரிவிக்கவில்லை. ஷேக் ஹசீனாவின் பாதுகாப்பு கருதி இன்னும் வங்கதேசத்துக்கு அவரை நம் நாட்டுக்கு அனுப்பாமல் தொடர்ந்து ரகசிய இடத்தில் வைத்து பாதுகாத்து வருகிறது. இதனால் கோபமாகி உள்ள வங்கதேசம் தொடர்ந்து நம் நாட்டை சீண்டி வருகிறது. அதுமட்டுமின்றி வங்கதேசத்தில் வசிக்கும் அவாமி லீக் கட்சியின் தலைவர்கள் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றனர்.
இதனால் இடைக்கால அரசு மீது அவாமி லீக் கட்சியினர் கடும் கோபமடைந்துள்ளனர். இந்நிலையில் தான் பிரதமர் மோடி இப்போது அமெரிக்கா சுற்றுப்பயணத்தில் உள்ளார். அவர் வெள்ளை மாளிகையின் அருகே உள்ள பிளேர் விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்தார். அதன்பிறகு தான் அவர் வெள்ளை மாளிகையில் அதிபர் டொனால்ட் டிரம்ப்பை சந்தித்து பேசினார்.
முன்னதாக பிரதமர் மோடி தங்கியிருந்த பிளேர் விருந்தினர் மாளிகை முன்பு திரண்ட அவாமி லீக் கட்சியின் ஆதரவாளர்கள் முகமது யூனுஸ் பதவி விலக வேண்டும் என்று கோஷமிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள், முகமது யூனுஸை கொலைக்காரர் என்று கூறினர். ‛‛ஸ்டெப் டவுன்.. ஸ்டெப் டவுன்.. கில்லர் யூனுஸ்.. கில்லர் யூனுஸ்.. '' என்று கோஷமிட்டனர்.
இதன்மூலம் கொலைக்காரரான முகமது யூனுஸ் வங்கதேச இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் பொறுப்பில் இருந்து பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தினர். இந்த சம்பவம் பிளேயர் ஹவுஸ் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications