அந்த விஷயத்தில் நான் கொஞ்சம் கறார்தான்.. ஆனால் முதலை விடும் அளவுக்கு அல்ல.. டிரம்ப்
வாஷிங்டன்: அகதிகள் ஊடுருவலை தடுக்க அகழிகளில் முதலைகளை விடச் சொன்னேனா, அது தவறான செய்தி என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மறுப்பு தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா- மெக்சிகோ இடையேயான எல்லை 3,145 கி.மீ. நீளம் ஆகும். எல்லையில் ஏற்கனவே தடுப்புகள் அமைக்கப்பட்டு தொடர் கண்காணிப்பு பணி நடைபெற்று வருகிறது.
எனினும் நூற்றுக்கணக்கான அகதிகள் தடுப்புகளை தாண்டி அமெரிக்காவில் சட்டவிரோதமாக நுழைவது தொடர்ந்து வருகிறது. மெக்சிகோ எல்லை வழியாக அகதிகள் போர்வையில் சமூகவிரோதிகளும் நுழைவதாக கூறப்படுகிறது.
கட்டுப்பாடுகள்
இதனால் நாட்டினுள் சட்டவிரோதமாக நுழைவதை தடுக்க எல்லையில் சுவர் எழுப்பப்படும் என டிரம்ப் அதிபராக பதவியேற்கும் போதே உறுதியளித்தார். இந்த நிலையில் அவர் பதவியேற்றது முதல் அகதிகள் அமெரிக்காவில் நுழைவதற்கு கட்டுப்பாட்டுகளை விதித்து வருகிறார்.
ஆங்கில பத்திரிகை
எல்லையில் சுவர் கட்டும் திட்டத்தை நிறைவேற்ற முயற்சித்து வருகிறார். இந்த நிலையில் எல்லை வழியே நுழையும் அகதிகளின் காலில் சுட வேண்டும் என்றும் ஊடுருவல்களை தடுக்க எல்லையில் முதலைகள், பாம்புகள் நிறைந்த அகழிகளை உருவாக்க வேண்டும் என்று அவர் உத்தரவிட்டதாக ஆங்கில பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது.
செய்திகள்
இதை டிரம்ப் திட்டவட்டமாக மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில் ஊடகங்களை உண்மை விற்க முயற்சிக்கின்றன. தென் பகுதியில் உள்ள எல்லையில் அகழியை உருவாக்கி பாம்புகள், முதலைகள் விடுமாறும் மின் வேலி அமைக்கவும் கூரிய கம்பிகளை வைக்குமாறும் நான் உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் வலம் வருகின்றன.
போலி செய்தி
அவை முற்றிலும் தவறு. எல்லை பாதுகாப்பு விஷயத்தில் நான் கறார்தான். ஆனால் ஊடகங்கள் கூறும் அளவுக்கு கறார் பேர்வழி அல்ல. ஊடகங்களுக்கு பைத்தியம் பிடித்துவிட்டது. எனவே இது போலியான செய்தி என டிரம்ப் தெரிவித்திருந்தார்.