திடீரென ஈரானுக்கு நன்றி சொன்ன டிரம்ப்.. அமெரிக்க தளங்களை தாக்கினாலும் பதிலடி தரலையே ஏன்?
வாஷிங்டன்: இஸ்ரேல் ஈரான் போரில் அமெரிக்கா தலையிட்ட பிறகு பதற்றம் அதிகரித்தது. திடீரென கத்தாரில் உள்ள அமெரிக்கத் தளங்கள் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தியதால் நிலைமை மேலும் மோசமாகும் என்றே அஞ்சப்பட்டது. ஆனால், சில மணி நேரத்தில் நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. குறிப்பாக ஈரானுக்கும் கூட திடீரென டிரம்ப் நன்றி சொல்லியிருக்கிறார்.
ஈரான் அணு ஆயுதங்களைத் தயாரிக்க முயல்வதாகச் சொல்லிக் கடந்த 13ம் தேதி இஸ்ரேல் திடீரென தாக்குதலை ஆரம்பித்தது. ஈரானில் பல்வேறு பகுதிகளைக் குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. அதற்கு ஈரானும் பதிலடியைக் கொடுக்க ஆரம்பித்ததால் நிலைமை மோசமானது. இரு தரப்பும் மாறி மாறி தாக்கிக் கொண்டன. ஒரு வாரத்திற்கு மேலாக மோதல் தொடர்ந்தது.

அமெரிக்கா தாக்குதல்
இந்தச் சூழலில் திடீரென ஞாயிற்றுக்கிழமை இந்த மோதலில் அமெரிக்காவும் குதித்தது. ஈரானின் அணுசக்தி தளங்களைக் குறிவைத்து அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. ஈரானின் 3 அணுசக்தி நிலையங்களைக் குறிவைத்து அமெரிக்கா இந்த தாக்குதலை நடத்தியது. மோதலில் அமரிக்கா உள்ளே வந்ததால் நிலைமை மோசமாகும் என்றே பலரும் அஞ்சினர்.
டிரம்ப்
ஆனால், சில மணி நேரத்தில் நிலைமை தலைகீழாக மாறியது. டிரம்ப் தலையிட்டதால் கடந்த 12 நாட்களாகத் தொடர்ந்த இஸ்ரேல் ஈரான் மோதல் முடிவுக்கு வந்துள்ளது. இதற்கிடையே அமெரிக்க அதிபர் டிரம்ப் திடீரென ஈரானுக்கு நன்றி சொல்லியுள்ளார். மேலும், கத்தாரில் உள்ள அல் உடைட் விமானத் தளத்தின் மீது ஈரான் தாக்குதல் நடத்திய போதிலும், ஈரானுக்குப் பதிலடி கொடுக்காது என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் சூசகமாகத் தெரிவித்தார். ஈரான் தனது கோபத்தை முழுவதுமாக வெளிப்படுத்திவிட்டது என்றும் இனி வெறுப்பு இருக்காது என்றும் நம்புவதாக டிரம்ப் குறிப்பிட்டார்.
ஈரான் நேற்றிரவு திடீரென தாக்குதல் நடத்திய நிலையில், அங்கு நிலவும் சூழலை அதிபர் டிரம்ப் கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணித்தார். இது தொடர்பாக டிரம்ப் மேலும் கூறுகையில், "ஈரான் இப்போது பிராந்தியத்தில் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை நோக்கிச் செல்ல முடியும். இஸ்ரேலும் அதை நோக்கியே செல்ல வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
ஈரானுக்கு நன்றி சொன்ன டிரம்ப்
அமெரிக்கா ஈரானின் அணு ஆயுத தளங்களை அழித்திருந்த நிலையில், அதற்குப் பதிலடி கொடுக்கிறேன் என ஈரான் நடத்திய இந்த தாக்குதல்கள் பலவீனமாகவே இருந்ததாக ட்ரம்ப் விமர்சித்தார். ஈரான் மொத்தம் 14 ஏவுகணைகளை ஏவியதாகவும், அதில் 13 ஏவுகணைகள் இடைமறித்து அழிக்கப்பட்டன என்றும் டிரம்ப் கூறினார். ஒரு ஏவுகணை இலக்கை நோக்கி வராமல் வேறு எங்கோ சென்றதால் அதை அப்படியே விட்டுவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அடுத்து டிரம்ப் சொன்னதை தான் பலரும் முக்கியமாகப் பார்க்கிறார்கள். ஈரானுக்கு நன்றி கூறுவதாக டிரம்ப் கூறியிருக்கிறார். அதாவது தாக்குதல் குறித்து முன்கூட்டியே தகவல் அளித்ததற்காக ஈரானுக்கு நன்றி தெரிவித்த டிரம்ப், "முன்கூட்டியே தகவல் அளித்த ஈரானுக்கு நான் நன்றி சொல்ல விரும்புகிறேன். இதன் காரணமாக உயிர்ச் சேதம் இல்லை.. யாரும் காயமடையவில்லை" என்றார்.
போர் முடிந்தது
அமெரிக்கப் படைகள் மீதான ஈரான் தாக்குதலைத் தொடர்ந்து போர் மிக மோசமான நிலைக்கே செல்லும் எனப் பலரும் எதிர்பார்த்தனர். இருப்பினும், சில மணி நேரத்தில் அங்கு காட்சிகள் மொத்தமாக மாறிவிட்டது. இப்போது போர் நிறுத்தம் அமலுக்கு வந்துவிட்டது. இரு நாடுகளிலும் மெல்ல இயல்பு நிலை திரும்பும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications