'ஒப்பந்தத்தை மீற சாக்கு போக்கு கூறுகிறார் எலான் மஸ்க்'. . விட்டு விளாசும் ட்விட்டர்!
வாஷிங்டன்: ட்விட்டரை சுமார் 44 பில்லியன் அமெரிக்க டாலருக்கு வாங்குவதாக ஒப்பந்தம் செய்துவிட்டு தற்போது அந்த ஒப்பந்தத்தை மீற சாக்கு போக்கு கூறுவதாக எலான் மஸ்க்கை ட்விட்டர் நிறுவனம் சாடியுள்ளது.
உலகின் நம்பர் 1 பணக்காரரும், டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், ஸ்டார் லிங் ஆகிய நிறுவனங்களின் தலைவருமான எலான் மஸ்க், கடந்த ஏப்ரல் மாதம் ட்விட்டர் நிறுவனத்தை வாங்குவதாக அறிவித்தார்.
முன்னணி சமூக வலைத்தளங்களில் ஒன்றான ட்விட்டரை சுமார் 44 பில்லியன் அமெரிக்க டாலர் கொடுத்து வாங்குவதாக எலான் மஸ்க் அறிவித்து இருந்தார். மேலும் அதற்கான ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்கான வேலைகளும் முழு வீச்சில் நடைபெற்றன.

சட்ட ரீதியான நடவடிக்கை
இந்த நிலையில், ட்விட்டர் நிறுவனம் கூறியதை விட 4 மடங்கு போலி கணக்குகள் இருப்பதாகவும், அது பற்றிய முழுமையான தகவல்களை தராததால், ட்விட்டரை வாங்கும் ஒப்பந்தத்தை கைவிட போவதாகவும் எலான் மஸ்க் கடந்த 8 ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டார். எலான் மஸ்கின் இந்த அறிவிப்பால் டிவிட்டர் நிறுவன பங்குகள் 7 சதவீதம் சரிந்தன. 44 பில்லியன் டாலர் ஒப்பந்தத்தை கைவிடுவதாக எலான் மஸ்க் அறிவித்தது உலக அளவில் பரபரப்பாக பேசப்பட்டது. எலான் மஸ்கின் இந்த திடீர் முடிவால் அதிருப்தி அடைந்த ட்விட்டர் நிறுவன தலைவர் பிரட் டெய்லர், எலான் மஸ்க்கிற்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்போவதாக அறிவித்தார்.

மாறி மாறி வழக்கு
அதன்படி, ட்விட்டர் நிறுவனம் எலான் மஸ்க்கிற்கு எதிராக வழக்கு தொடர்ந்தது. ட்விட்டர் நிறுவனம் தொடர்ந்த இந்த வழக்கின் விசாரணை வரும் அக்டோபர் 17 ஆம் தேதி முதல் தொடர்ந்து 5 நாட்கள் நடைபெறும் என்று டெலாவேர் கோர்ட் ஆஃப் சான்சரி நீதிமன்றம் தெரிவித்து இருந்தது. இந்த நிலையில், ட்விட்டருக்கு போட்டியாக எலான் மஸ்க் தரப்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 164 பக்கங்கள் கொண்ட வழக்கு ஆவணத்தில் எலான் மஸ்க் தரப்பு என்ன சொல்லியிருக்கிறது என்ற விவரம் வெளியாகி இருந்த நிலையில், அதில் எலான் மஸ்க் என்ன கூறியிருந்தார் என்பது தெரியவந்துள்ளது.

ட்விட்டர் நிறுவனத்துக்கு எதிராக வழக்கு
கடந்த வாரம் டெலேவேர் நீதிமன்றத்தில் எலான் மஸ்க் தாக்கல் செய்த அந்த மனுவில், ட்விட்டருடன் மேற்கொண்ட இந்த ஒப்பந்தத்தில் நான் ஏமாற்றப்பட்டு விட்டதாக கூறியிருக்கிறார். மேலும், டிவிட்டரில் உண்மையான பயனர்களின் எண்ணிக்கையை டிவிட்டர் நிறுவனம் மறைத்து விட்டதாக சாடியிருக்கும் எலான் மஸ்க், 238 மில்லியன் ஆக்டிவ் பயனர்கள் இருப்பதாகவும் இந்த பயனர்கள் ட்விட்டரில் தோன்றும் விளம்பரத்தை பார்க்கக்கூடியவர்கள் என்றும் இதன் மூலம் வருவாய் ஈட்ட முடியும் என்று ட்விட்டர் கூறியது. ஆனால், உண்மை எண்ணிக்கை 65 மில்லியனுக்கும் குறைவாகவே உள்ளது" எனவும் தனது பதில் மனுவில் எலான் மஸ்க் தரப்பு தெரிவித்தது.
Recommended Video

சாக்கு போக்குகளை கூறும் எலான் மஸ்க்
எலான் மஸ்க் கடந்த வாரம் தாக்கல் செய்த அந்த மனுவுக்கு பதில் மனு தாக்கல் செய்யாமல் இருந்து ட்விட்டர் நிறுவனம், தற்போது அவரது மனுவுக்கு பதிலடி கொடுத்துள்ளது. அதன்படி ட்விட்டர் நிறுவனம், ''ஒப்பந்தத்தை மீறுவதற்காக நம்ப முடியாத, முரண்பாடான சாக்கு போக்குகளை எலான் மஸ்க் கூறுவதாக'' பதிலடி கொடுத்துள்ளது. மேலும், 'எலான் மஸ்க் உண்மைக்கு புறம்பான தகவல்களை கூறியிருப்பதாகவும்' ட்விட்டர் தனது பதில் மனுவில் தெரிவித்துள்ளது. ட்விட்டரின் இந்த எதிர்மனு குறித்து எலான் மஸ்க் தரப்பினர் கருத்து கூற மறுத்துவிட்டனர்.












Click it and Unblock the Notifications