“பாக். அதிபரை விலைக்கு வாங்கி.. அணு ஆயுதங்களை கட்டுப்படுத்தினோம்!” சிஐஏ ஏஜென்ட் போட்டு உடைத்த உண்மை
வாஷிங்டன்: "பாகிஸ்தான் அணு ஆயுதத்தை உருவாக்கியவுடன், அதனை இயக்கும் பொறுப்பை நாங்கள் எடுத்துக்கொண்டோம். இதற்காக அப்போது பாக். அதிபராக இருந்த பர்வேஸ் முஷாரஃப் தலைமையிலான அரசுக்கு ஏகப்பட்ட பணம் கொடுக்கப்பட்டது" என்று அமெரிக்க உளவுத்துறையான, சிஐஏ-வின் முன்னாள் ஏஜென்ட் உண்மைகளை போட்டு உடைத்திருக்கிறார். இந்த தகவல் உண்மையெனில், பாக் வசம் அணு ஆயுதங்கள் இருந்தாலும், அந்நாடு வெறும் டம்மி என்பதை உறுதி செய்திருக்கிறது.
முன்னாள் சிஐஏ அதிகாரி ஜான் கிரியாகோ, இரண்டு முக்கியமான தகவல்களை தெரிவித்திருக்கிறார். ஒன்று பாகிஸ்தான் அதிபர் விலை போனது. இன்னொன்று இந்திய வெளியுறவுத்துறை விவகாரங்களை அப்போதைய மத்திய அரசு எப்படி கையாண்டது என்பது. இந்த இரண்டு விஷயங்களும் மிகவும் முக்கியமானதாகும்.

உலகம் முழுவதும் அணு ஆயுதங்கள் வேகமாக அதிகரித்து வந்த காலகட்டம். அணு ஆயுதங்கள் இல்லாத நாடுகளை, சர்வதேச நாடுகள் மதிக்காத சூழலும் இருந்தது. இருப்பினும் அணு ஆயுதம் என்பது மரண பாதை. ஆனால் அது நெருப்பு வளையம் போல பாதுகாப்பு கவசமாகவும் இருந்தது. எனவே இந்தியாவும் அணு ஆயுதங்களை வைத்திருக்க தீர்மானித்தது. கடந்த 1998ம் ஆண்டு மே மாதம் 11ம் தேதி பொக்ரான் அணு ஆயுத சோதனையை இந்தியா வெற்றிகரமாக நடத்திக் காட்டியது.
இந்தியா அணு ஆயுத சோதனையை நடத்தியதால் பாகிஸ்தானுக்கும் வேறு வழியில்லை. எனவே அடுத்த 17வது நாளில் அதாவது 1998ம் ஆண்டு மே மாதம் 28ம் தேதி பாகிஸ்தான் அணு ஆயுத சோதனையை நடத்தியது. அடேங்கப்பா, வெறும் 17 நாட்களில் சோதனையை நடத்தியிருக்கிறதே! பாகிஸ்தானும் சர்வதேச அணு ஆயுதங்கள் வைத்திருக்கும் நாடுகளின் பட்டியலில் இடம்பிடித்த விட்டதே என்று பல நாடுகள் பேசின. ஆனால், அன்று நடந்த உண்மையான நிலவரத்தை சிஐஏ முன்னாள் ஏஜெண்ட் கூறியிருக்கிறார்.
என்னதான் பாக். அணு ஆயுதங்களை உருவாக்கி இருந்தாலும் அதை கட்டுப்படுத்தியது என்னவோ அமெரிக்காதான். இதற்காக மில்லியன் கணக்கான டாலர்கள் பாகிஸ்தானுக்கு கை மாற்றப்பட்டது என்று ஜான் கிரியாகோ கூறியிருக்கிறார். இதற்காக அப்போதைய பாக் அதிபர் பர்வேஸ் முஷாரஃப்பை விலை கொடுத்து வாங்கினோம் என்றும் கிரியாகோ கூறியுள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது, "இந்த விஷயத்திற்கு நியாயமான காரணத்தை நாங்கள் உருவாக்கியிருந்தோம். அணு ஆயுதங்கள் பயங்கரவாதிகளின் கைளுக்கு போய்விடக்கூடாது என்று கருதி பாக் அமெரிக்காவிடம் பொறுப்பை கொடுத்துவிட்டது என்ற கருத்தை உருவாக்கினோம். ஒருபுறம் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை என்று சொல்லிக்கொண்டு பாக் அமெரிக்காவுடன் இணைந்து செயல்பட்டது. மறுபுறம் இந்தியா மீது பயங்கரவாத தாக்குதலையும் ஏவி விட்டது.
அப்படி நடந்ததுதான் 2001 நாடாளுமன்ற தாக்குதல். அதை தொடர்ந்து 2008ல் மும்பை தாக்குதலும் நடந்தது. இந்த தாக்குதலுக்கு பிறகு இந்தியா எப்போது வேண்டுமானாலும் பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தும் என்று நாங்கள் எதிர்பார்த்தோம். ஆனால், இந்தியா அமைதி காத்தது. இது மிகுந்த முதிர்ச்சியான நடவடிக்கை. தாக்குதல் தொடங்குவது எளிது. ஆனால், அதை நிறுத்துவதுதான் கடினம். இந்தியா இதை உணர்ந்திருந்தது. எனவே இந்தியாவின் நடவடிக்கையை பார்த்து நாங்கள் ஆச்சரியப்பட்டோம்" என்று கூறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications