அமெரிக்க கலவரத்தில் .. இந்தியக் கொடியுடன் பங்கேற்றவர் வின்சென்ட் சேவியர்.. வித்தியாசமான விளக்கம்!
வாஷிங்டன்: தான் ஒரு டிரம்ப் விசுவாசி என்றும் அமைதியான முறையில் அமெரிக்க நாடாளுமன்றத்தின் முன் நடத்தப்பட்ட போராட்டத்தில் புகுந்த சமூக விரோதிகள் கலவரத்தை ஏற்படுத்தியதாகவும் கலவரத்தில் தேசிய கொடியுடன் பங்கேற்ற வின்சென்ட் சேவியர் தெரிவித்தார்
அமெரிக்கா தலைநகர் வாஷிங்டனிலுள்ள அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் புதிய அதிபரா ஜோ பைடனை தேர்ந்தெடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு எதிராக டிரம்ப் ஆதவாளர்கள் பேரணி நடத்தினர்.
அப்போது திடீரென்று அமெரிக்க நாடாளுமன்றத்தில் முகுந்த போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். இதில் ஒரு காவலர் உட்பட ஐந்து பேர் உயிரிழந்தனர்.
கலவரத்தில் இந்திய கொடி
அமெரிக்க நாடாளுமன்றத்தின் வெளியே ஆயிரக்கணக்கான மக்கள் கூடி, போராட்டம் நடத்தினர். அங்கே இந்தியக் கொடியுடன் ஒருவர் போராட்டத்தில் பங்கேற்றிருந்தார். இது தொடர்பான வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதற்கு சசி தருர் உள்ளிட்ட பலர் தங்கள் கண்டனங்களைப் பதிவு செய்திருந்தனர்.
தேசியக் கொடியுடன் பங்கேற்றவர்
இந்நிலையில், அமெரிக்க கலவரத்தில் தேசியக் கொடியுடன் பங்கேற்றவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வின்சென்ட் சேவியர் என்பது தெரியவந்துள்ளது. 54 வயதான வின்சென்ட், கேரள மாநிலம் கொச்சி பகுதியைச் சேர்ந்தவர். தீவிர டிரம்ப ஆதரவாளரா இவர், தற்போது அமெரிக்காவின் விர்ஜினியா மாகாணத்தில் வசித்து வருகிறார்.
இனவாதி இல்லை
அமெரிக்க அதிபர் தேர்தலில் மிகப் பெரியளவில் மோசடி நடைபெற்றுள்ளதாகவும் அதை எதிர்த்தே அமைதியான முறையில் அமெரிக்க நாடாளுமன்றத்தின் முன் போராட்டம் நடத்தியதாக வின்சென்ட் தெரிவித்துள்ளார். தான் டிரம்ப் ஆதரவாளர் என்றும் இது இனவாதிகளின் போராட்டமாக இருந்திருந்தால் அதில் தேசியக் கொடியுடன் பங்கேற்றிருக்க மாட்டேன் என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும், டிரம்ப் பேரணிகளில் வியட்நாம், கொரியா, பாகிஸ்தான் நாடுகளைச் சேர்ந்த மக்கள் அவர்களின் நாடுகளுடன் பங்கேற்பது வழக்கமான ஒன்று என்றும் அவர் கூறினார்.
போராட்டத்தில் நுழைந்த சமூக விரோதிகள்
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், "நாங்கள் அமைதியான முறையிலேயே நாடாளுமன்ற கட்டடத்தின் முன் போராட்டம் நடத்தினோம். ஆனால் கூட்டத்தில் சமூக விரோதிகள் புகுந்துவிட்டனர். அவர்களில் 15 பேர் நாடாளுமன்ற சுவரைத் தாண்டி குதித்தனர். சுமார் 50 பேர் வன்முறையில் ஈடுபட்டனர். இதனால் அமைதியாகப் போராடிய எங்களின் நோக்கம் அழிக்கப்பட்டுவிட்டது" என்றார்.
பிளாக் லைவ்ஸ் மேட்டர்
மேலும், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் யார் என்பது குறித்து அவர் கூறுகையில், "அவர்கள் யார் என்பது சரியாகத் தெரியவில்லை. இருப்பினும், சுவரில் ஏறிய வீடியோக்களை நீங்கள் பார்த்திருந்தால் தெரிந்திருக்கும், இதற்காகவே முறையாகப் பயிற்சி பெற்றவர்களைப் போலவே அவர்கள் இருந்தனர். அவர்கள் ரவுடிகள், பிளாக் லைவ்ஸ் மேட்டர் குழுவைச் சேர்ந்தவர்களைப் போலவே அவர்கள் இருந்தனர்" என்றார்.
வாஷிங்டனில் அவசர நிலை
அமெரிக்க நாடாளுமன்ற கட்டடத்தில் நடைபெற்ற வன்முறையைத் தொடர்ந்து வாஷிங்டனில் நேற்று முதல் 15 நாட்களுக்கு பொது அவசரநிலை அமல்படுத்தப்பட்டது. அதிபர் பதவியேற்கும் நாளிலும் வன்முறைச் சம்பவம் நடைபெறலாம் என்று அஞ்சப்படுவதால் புதிய அதிபராக ஜோ பைடன் பதவியேற்றும் மறுநாள் வரை அவசரநிலை அமல்படுத்தப்பட்டுள்ளது.