செவிலியர் உருவத்தில் வந்த மிருகம்.. 22 நோயாளிகளைத் துடிக்கத் துடிக்க படுகொலை செய்த நர்ஸ்.. கொடூரம்
வாஷிங்டன்: செவிலியர் ஒருவர் சுமார் 22 பேர் உயிரிழக்கக் காரணமாக இருந்துள்ளார். அவர் குறித்து வெளியாகும் தகவல்கள் அனைவருக்கும் அதிர்ச்சி தருவதாகவே இருக்கிறது.
அமெரிக்காவில் பொதுவாக இந்தியாவைப் போல குடும்ப அமைப்புகள் இருக்காது. அங்கே 18 வயதான உடனேயே பிள்ளைகள் தனியாகச் சென்றுவிடுவார்கள். இதனால் ஒருவித தனிமை என்பது அங்கே எப்போதும் ஒரு பிரச்சினையாக இருக்கிறது.

இந்த வாட்டும் தனிமையால் பல்வேறு மன ரீதியான பாதிப்புகள் ஏற்படுகிறது. அவை சமூகத்திலும் கூட மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்துகிறது. அப்படியொரு அதிர்ச்சி தரும் சம்பவம் தான் இப்போது நடந்துள்ளது.
அதிர வைத்த நர்ஸ்: அங்கே நர்ஸ் ஒருவர் மிகவும் கொடூரமான ஒரு செயலை செய்துள்ளார். ஹீதர் பிரஸ்டீ என்ற இந்த நர்ஸ் வேண்டுமென்றே இன்சுலின் மருந்தைக் கொடுத்து இரண்டு நோயாளிகளைக் கொலை செய்துள்ளார். இதில் கைது செய்யப்பட்ட ஹீதரிடம் போலீசார் விசாரணை நடத்திய நிலையில், அப்போது அவர் கூறிய தகவல்கள் அனைவரையும் அதிர வைப்பதாகவே இருந்தது.
அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தைச் சேர்ந்தவர் ஹீதர் பிரஸ்டீ. 41 வயதான ஹீதர், அங்குள்ள மருத்துவமனையில் நர்ஸாக வேலை செய்து வருகிறார். இவர் வேண்டுமென்றே அதிக இன்சுலின் கொடுத்து இரண்டு நோயாளிகளின் மரணத்திற்குக் காரணமாக இருந்தார் என்று கூறி வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவரை கைது செய்த போலீசார், அவரிடம் விசாரணை நடத்தினர்.
கொடூரம்: இது மட்டுமின்றி கடந்த காலங்களில் மருத்துவமனையில் சுமார் 19 பேரின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் நோக்கில் செயல்பட்டதாகக் கூறி அவர் அதிர வைத்துள்ளார். 2020ஆம் ஆண்டு முதலே அவர் இதைச் செய்து வருகிறாராம். நோயாளிகளுக்கு நீரிழிவு நோய் இருக்கும் நிலையில், அது தெரிந்தும் அதிகப்படியான இன்சுலின் செலுத்தியுள்ளார். இதனால் மொத்தம் 17 நோயாளிகள் உயிரிழந்ததாக அதிகாரிகள் கூறுகிறார்கள்.
இதையடுத்து அவர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் மீது இரண்டு கொலை, 17 கொலை முயற்சி மற்றும் அலட்சியம் காரணமாக 19 பேர் உயிரிழக்கக் காரணமாக இருந்தது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இவரால் 43 வயது முதல் 104 வயதான 21 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது அதிர்ச்சி தரும் தகவலாகும்.
அதிர்ந்த நீதிபதி: இது குறித்து அட்டர்னி ஜெனரல் ஹென்றி கூறுகையில், "பிரஸ்டீ மீதான குற்றச்சாட்டுகள் அதிர்ச்சி தருவதாக இருக்கிறது. செவிலியர் தனது நோயாளிகளைக் கவனித்துக் கொள்வார் என்ற நம்பிக்கையில் தான் நாம் இருக்கிறோம். ஆனால், அந்த நம்பிக்கையை முற்றிலுமாக சீர்குலைக்கும் வகையில் இவரது செயல்பாடுகள் இருக்கிறது. அவர் எதற்காக இப்படி வேண்டுமென்றே செய்தார் என்பதைப் புரிந்து கொள்ளக் கஷ்டமாக இருக்கிறது.
எப்படியாவது குணமடைந்து வந்துவிடுவார்கள் என்று காத்திருந்த நோயாளிகளின் குடும்பத்திற்கு இவர் நம்பிக்கை துரோகம் செய்துள்ளார். மருத்துவமனையில் இருக்கும் அனைவரையும் பாதுகாப்பாக உணர வைக்க வேண்டும். இதுபோன்ற குற்றங்களை ஒரு போதும் ஏற்கவே முடியாது. அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்று அவர் தெரிவித்தார்.
22 பேர்: ஹீதர் மீது இதுபோல வழக்குப்பதிவு செய்வது இது முதல்முறை இல்லை. ஏற்கனவே கடந்த மே மாதம் மூன்று நோயாளிகளுக்குத் தவறாகச் சிகிச்சை அளித்தாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. அப்படி அவர் தவறாகச் சிகிச்சை அளித்தவர்களில் 3 பேர் உயிரிழந்தனர். இதன் மூலம் ஹீதரால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளது. அவர் மீது இப்போது பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
நோயாளிகளுக்கு வேண்டுமென்றே தவறான மருந்துகள் அளித்ததால் அவர் மீது கொலை வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், உயிர் பிழைத்தவர்கள் சார்பில் கொலை முயற்சி வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து ஹீதர் இப்போது ஜாமீனில் வெளியே வர முடியாத பிரிவில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications