மூக்கில் பாய்ந்த நைட்ரஜன்! துடிதுடித்து உயிரிழந்த கைதி.. கடைசியில் சொன்ன "அந்த" வார்த்தை! பகீர்
வாஷிங்டன்: அமெரிக்காவில் முதல்முறையாக நைட்ரஜன் வாயுவைப் பயன்படுத்தி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
பொதுவாகப் பயங்கரவாத செயல் உள்ளிட்ட மிகவும் கொடூரமான குற்றம் புரிபவர்களுக்குத் தான் மரண தண்டனை விதிக்கப்படும். இந்தியாவில் தூக்கு மூலம் இந்த மரண தண்டனை நிறைவேற்றப்படும்.

இருப்பினும், நமது நாட்டில் மிகவும் அரிதிலும் அரிதாகவே மரண தண்டனை விதிக்கப்படும். ஆனால், அமெரிக்காவில் அப்படி இல்லை. அமெரிக்காவில் குறிப்பிட்ட குற்றங்களுக்கு மரண தண்டனை என்ற விதி இருக்கிறது.
மரண தண்டனை: அப்படி மரண தண்டனை விதிக்கப்படுவோருக்கு அமெரிக்காவில் பொதுவாக மரண தண்டனை என்பது ஊசி போடப்பட்டு நிறைவேற்றப்படும். அந்நாட்டில் பொதுவாக மரண தண்டனைக்குப் பயன்படுத்தும் முறையாக இது இருக்கிறது. இந்தச் சூழலில் தான் அங்கே கென்னத் யூஜின் ஸ்மித் என்பவருக்கு முதல்முறையாக நைட்ரஜன் வாயு செலுத்தப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. இதனால் அவர் மூச்சு திணறி உயிரிழந்தார்.
நைட்ரஜன் ஹைபோக்ஸியாவை பயன்படுத்தி மரண தண்டனை நிறைவேற்ற ஒப்புதல் அளித்த மூன்று அமெரிக்க மாநிலங்களில் அலபாமாவும் ஒன்றாகும். அமெரிக்காவைப் பொறுத்தவரைக் கடந்த 1999ஆம் ஆண்டு ஹைட்ரஜன் சயனைடு வாயுவைப் பயன்படுத்தி ஒருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. அதன் பிறகு ஒருவருக்கு வாயு மூலம் மரண தண்டனை நிறைவேற்றப்படுவது இதுவே முதல்முறையாகும்.
நைட்ரஜன் ஹைபோக்ஸியா: நைட்ரஜன் ஹைபோக்ஸியா வாயு ஒரு நபரை நைட்ரஜனை மட்டுமே சுவாசிக்கத் தூண்டுகிறது,. இதன் மூலம் நமது உடல் தேவையான ஆக்சிஜனை இழக்கிறது. இந்த முறைக்கு ஒரு சுவாச மாஸ்க் கைதியின் முகத்தில் வைக்கப்படும். ஆக்சிஜனுக்கு பதிலாக தூய நைட்ரஜன் மரண தண்டனை விதிக்கப்பட்ட நபரின் நுரையீரலில் செலுத்தப்படுகிறது. இதன் மூலம் அவர் உயிரிழப்பார்.
ஸ்மித்தின் மரணதண்டனை முழுமையாக நிறைவேற்ற சுமார் 22 நிமிடங்கள் ஆனது. மேலும் அவர் பல நிமிடங்கள் சுயநினைவுடன் இருப்பதாகவும் கூறப்படுகிறது. முதல் சில நிமிடங்கள் அவர் சிரமப்பட்டது போலத் தோன்றியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அவரது மனைவி உள்ளிட்ட உறவினர்கள் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட போது அருகே அனுமதிக்கப்பட்டனர். உயிரிழக்கும் முன்பு ஸ்மித் கடைசியாகத் தனது மனைவியைப் பார்த்து ஐ லவ் யூ என்று கூறியிருக்கிறார்.
துடித்து உயிரிழப்பு: மேலும், ஸ்மித்தின் உயிரிழக்கும் நேரத்தில் "இன்று அலபாமா மனித நேயத்தைக் காப்பதில் ஒரு ஸ்டேப் பின்னோக்கி சென்றுள்ளது" என்று கூறிவிட்டுத் துடிதுடித்து உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதேபோல அங்குள்ள தன்னார்வலர்கள் பலரும் இந்த மரணதண்டனை முறையை "மனித பரிசோதனை" என்று விமர்சித்தனர். இந்த தேவையில்லாத முயற்சியை அமெரிக்கா முழுக்க தடை விதிக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்துகின்றனர்.
இருப்பினும், அலபாமா மாகாணம் இந்த மரண தண்டனை முறையைச் சரி என்றே வாதிடுகிறது. இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மரண தண்டனை முறைகளில் இதுதான் மிகவும் மனிதாபிமான முறையில் இருப்பதாக அலபாமா மாகாணம் வாதிடுகிறது. ஆனால், இது மனிதாபிமான முறையிலான மரணம் என்பதற்கு ஆதாரம் இல்லை என்றும் இது மிகவும் கொடூரமான ஒன்றாகவும் கூட இருக்கலாம் என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications