உலக நாடுகளுக்கு 5.5 கோடி தடுப்பு மருந்துகளை அறிவித்த அமெரிக்கா.. ஆனால் இந்தியாவுக்கு போதாதே!
வாஷிங்டன்: 5.5 கோடி கொரோனா வைரஸ் தடுப்பு மருந்துகளை உலக நாடுகளுக்கு விநியோகிக்கவுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ள நிலையில் இந்தியாவுக்கு 20 லட்சத்திற்கும் அதிகமான மருந்துகள் கிடைக்க வாய்ப்பில்லை என தெரிகிறது.
தங்கள் பயன்பாட்டுக்கு போக மீதம் உள்ள 80 மில்லியன் (8 கோடி) கொரோனா தடுப்பு மருந்துகளை மற்ற நாடுகளுக்கு வழங்குவதாக அறிவித்தது அமெரிக்கா.
அந்த வகையில் கடந்த இரு வாரங்களுக்கு முன்பு முதற்கட்டமாக 25 (2.5 கோடி) மில்லியன் கொரோனா தடுப்பு டோஸ்களை உலக நாடுகளுக்கு பகிர்ந்து வழங்குவதாக அந்நாடு அறிவித்தது. இதில் இந்தியாவுக்கு 20 முதல் 30 லட்சம் வரை மருந்துகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் 8 கோடியில் இரண்டாவது கட்டமாக 5.5 கோடி டோஸ் தடுப்பு மருந்துகளை உலக நாடுகளுக்கு வழங்குவதாக திங்கள்கிழமை அன்று அதிபர் ஜோ பிடன் அறிவித்தார். இந்த 5.5 கோடியில் 1.6 கோடி தடுப்பு மருந்துகள் 18 ஆசிய நாடுகளுக்கு கிடைக்கும். அவற்றுள் இந்தியாவும் ஒன்று. இந்த இரண்டாவது செட்டில் இந்தியாவுக்கு 10 முதல் 20 லட்சம் மருந்துகளுக்கு மேல் கிடைக்காது என்றே தெரிகிறது.
அமெரிக்காவில் இருந்து அனுப்பப்படும் மருந்தில் இந்தியாவுக்கு மொத்தமாக 30 லட்சம் முதல் 50 லட்சம் வரை மட்டுமே கிடைக்கும் என தெரிகிறது. ஆனால் இது இந்தியாவின் அன்றாட மருந்து தேவையை பூர்த்தி செய்யாது. ஜோ பிடன் தடுப்பு மருந்துகள் விநியோகம் குறித்து அறிவித்த நேற்றைய தினம் மட்டும் இந்தியாவில் புதிய தடுப்பு மருந்து கொள்கையின கீழ் 82 லட்சம் டோஸ்கள் ஊசி போடப்பட்டன.