ஐ.நா.சபை கூட்டத்தில் இன்று உரை.. நியூயார்க் வந்தார் மோடி.. அமெரிக்கவாழ் இந்தியர்கள் வாழ்த்து கோஷம்
வாஷிங்டன்: ஐ.நா.சபை கூட்டத்தில் உரை நிகழ்த்துவதற்காக நியூயார்க் சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு, இந்தியர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
குவாட் என்னும் நாற்கர கூட்டமைப்பின் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் விடுத்த அழைப்பை ஏற்று பிரதமர் மோடி, அமெரிக்கா சென்றார்.
வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய 4 குவாட் கூட்டமைப்பு நாடுகள், இந்த உச்சி மாநாட்டில் கலந்து கொண்டன.
குவாட்.. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் தலைவர்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு: கொரோனா குறித்து ஆலோசனை
பல விவகாரங்கள் பற்றி ஆலோசனை
இந்த மாநாட்டில் ஆப்கானிஸ்தான் நிலவரம், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் குவாட் கூட்டமைப்பை சாதகமான வழியில் பயன்படுத்துதல் உள்ளிட்ட விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. குவாட் கூட்டமைப்பு தலைவர்களின் ஆலோசனைக்குப் பிறகு உச்சி மாநாடு நிறைவு பெற்றது.
ஐ.நா.சபையில் இன்று உரை
இதனை தொடர்ந்து நியூயார்க்கில் இந்திய நேரப்படி இன்று இரவு 6.30 மணிக்கு மேல் துவங்க உள்ள ஐ.நா. சபையின் 76 வது அமர்வில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்ற உள்ளார். இதில் கலந்து கொள்வதற்காக வாஷிங்டனில் இருந்து விமானத்தில் புறப்பட்டு பிரதமர் மோடி நியூயார்க் விமான நிலையத்திற்கு சென்றடைந்தார்.
உற்சாக வரவேற்பு
விமான நிலையத்தின் வெளியே, பிரதமர் மோடியை வெளியுறவுத்துறை அதிகாரிகள் வரவேற்று அழைத்துச் சென்றனர். அப்போது பிரதமர் மோடியை வரவேற்க இந்திய வம்சாவளியினர் திரளாக அங்கே கூடியிருந்தனர். அவர்கள், பிரதமரை வாழ்த்தி கோஷம் எழுப்பினர்.
வந்தே மாதரம்
வந்தே மாதரம்.. வந்தே மாதரம்.. பாரத் மாதா கி ஜே.. என்று அவர்கள் கோஷங்களை எழுப்பினர். மோடி ஜி நாங்கள் உங்களை நினைத்து பெருமைப்படுகிறோம்.. இவ்வாறு அவர்கள் கோஷம் எழுப்பினர். இந்த வீடியோ காட்சி ஏ.என்.ஐ. செய்தி ஏஜென்சியில் வெளியாகியுள்ளது.
Recommended Video
நன்றி தெரிவித்த மோடி
கூடியிருந்த அனைவரை நோக்கியும் கையசைத்த பிரதமர் நரேந்திர மோடி, நன்றி தெரிவித்துக் கொண்டார். அப்போது கூடியிருந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண்கள் சிலர், செல்போனில் செல்ஃபி எடுத்துக் கொண்டனர். பிறகு அங்கிருந்து அவர் கிளம்பிச் சென்ற காட்சிகள் அந்த வீடியோவில் உள்ளன.