கண்கள் சிவந்த டிரம்ப்.. "இனி ஒரு குண்டு கூட ஈரான் மீது வீசக்கூடாது!" இஸ்ரேலுக்கு நேரடியாக வார்னிங்!
வாஷிங்டன்: இஸ்ரேல் ஈரான் இடையேயான போர் முடிவுக்கு வந்துவிட்டதாகவும் இரு நாடுகளும் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டதாகவும் டிரம்ப் கூறியிருந்தார். இந்தச் சூழலில் மீண்டும் இஸ்ரேல், ஈரான் நாடுகள் மீண்டும் தாக்குதலைத் தொடங்கியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகின. இது டிரம்பை மிகவும் கோபப்படுத்தியிருக்கிறது.
இஸ்ரேல் ஈரான் இடையேயான போரில் அமெரிக்கா வந்த பிறகு நிலைமை மோசமாகும் எனப் பலரும் அஞ்சினர். அதற்கேற்ப கத்தாரில் உள்ள அமெரிக்கத் தளம் மீது ஈரான் தாக்குதல் நடத்த முயன்றன. இருப்பினும், அதிபர் டிரம்ப் இரு நாடுகளுக்கும் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டதாக இன்று காலை அறிவித்தார். இதனால் அங்கு மெல்ல அமைதி திரும்பியது.

மாறி மாறி தாக்குதல்
இருப்பினும், சில மணி நேரத்திலேயே இஸ்ரேல், ஈரான் மீண்டும் மாறி மாறி தாக்குதல் நடத்தத் தொடங்கின. போர் நிறுத்தத்தை மீறி இரு நாடுகளும் தாக்குதல் நடத்தியதாக வெளியான தகவலால் அதிபர் டிரம்ப் அதிருப்தி அடைந்துள்ளார். குறிப்பாக அவர் இஸ்ரேல் மீது கடும் அதிருப்தியில் இருப்பதாகவே தெரிகிறது. போர் நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் மீறியதைக் கண்டித்துள்ள டிரம்ப், ஈரான் மீது வெடிகுண்டுகளை வீச வேண்டாம் என்று இஸ்ரேலுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கண்கள் சிவந்த டிரம்ப்
ஹேக் நகரில் நடக்கும் நேட்டோ உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காகப் புறப்படுவதற்கு முன்பு, டிரம்ப் இந்த எச்சரிக்கையைப் பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்ரூத் சோஷியல் பக்கத்தில், "இஸ்ரேல், வெடிகுண்டுகளை வீசக் கூடாது. அப்படிச் செய்தால், அது ஒரு பெரிய விதி மீறலாகிவிடும். உங்கள் விமானிகளை உடனடியாகத் திரும்ப வர சொல்லுங்கள்!" என்று குறிப்பிட்டிருந்தார். மேலும் இஸ்ரேலை அமைதியாக இருக்கும்படியும் டிரம்ப் வலியுறுத்தினார்.
இது தொடர்பாக வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், "நான் அதை மோதலை நிரந்தரமாக நிறுத்த முடியுமா என்று பார்க்கிறேன். இஸ்ரேலை நான் அமைதிப்படுத்த வேண்டும். இஸ்ரேலும் ஈரானும் நீண்ட காலமாகச் சண்டையிட்டு வருவதால், அவர்கள் என்ன செய்கிறார்கள் என்றே அவர்களுக்குத் தெரியவில்லை" என்று கூறினார்.
இஸ்ரேலுக்கு எச்சரிக்கை
போர் நிறுத்த ஒப்பந்தத்திற்குச் சம்மதித்த உடனேயே இஸ்ரேல் வெடிகுண்டுகளை வீசத் தொடங்கியதாக டிரம்ப் சாடினார். மேலும் இரு நாடுகளின் மீதும், குறிப்பாக இஸ்ரேல் மீது தான் அதிருப்தியில் இருப்பதாக அவர் தெரிவித்தார். அதேநேரம் ஈரானைப் பற்றிப் பேசும்போது, அவர்கள் மீண்டும் அணு ஆயுதங்களை உற்பத்தி செய்யவே கூடாது என்றும் குறிப்பிட்டார்.
என்ன நடந்தது?
முன்னதாக இந்திய நேரப்படி இன்று அதிகாலை இஸ்ரேலும் ஈரானும் முழு போர் நிறுத்த ஒப்பந்தத்தை எட்டியுள்ளன என்றும் இதன் மூலம் 12 நாள் போர் முடிவுக்கு வந்துள்ளது என்றும் டிரம்ப் தெரிவித்தார். இருப்பினும், முதலில் ஈரானை இதை அறிவிக்கவில்லை. டிரம்ப் அறிவிப்பை மறுத்த ஈரான், எந்த ஒப்பந்தமும் எட்டப்படவில்லை என்று கூறியது. இருப்பினும், சில மணி நேரத்தில் யூடர்ன் போட்ட ஈரான் போர் நிறுத்தம் அமலுக்கு வந்ததாக அறிவித்தது.
இதையடுத்து இரு தரப்பும் தாக்குதலைச் சற்று குறைத்திருந்தது. இந்தச் சூழலில் தான் ஈரான் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தங்கள் மீது தாக்குதல் நடத்துவதாக இஸ்ரேல் கூறியது. டிரம்ப் அறிவித்த போர் நிறுத்தத்திற்குப் பிறகு ஈரான் நடத்திய தாக்குதல்களில் குறைந்தது நான்கு பேர் கொல்லப்பட்டனர் மற்றும் ஆறு பேர் காயமடைந்தனர் என்று இஸ்ரேல் கூறியது. இருப்பினும், ஈரான் இதைத் திட்டவட்டமாக மறுத்துள்ளது. இஸ்ரேல் தான் முதலில் தாக்குதலை நடத்தியதாகக் கூறியிருந்தது.
மோதல் தொடருமா?
இப்படி இரு தரப்பும் மாறி மாறி குற்றஞ்சாட்டி வந்தது. இதுவே டிரம்பை ஆத்திரப்படுத்தியுள்ளது. உடனடியாக அவரே நேரடியாக ட்வீட் செய்திருக்கிறார். போர் நிறுத்தத்தை மீற வேண்டாம் என்று டிரம்ப் இரு தரப்பினரையும் எச்சரித்திருக்கிறார். குறிப்பாக அவர் இஸ்ரேலை நேரடியாகவே சாடியுள்ளார். இதன் காரணமாக மேற்கொண்டு தாக்குதல்கள் இருக்காது என்றே தெரிகிறது.












Click it and Unblock the Notifications