"இனவெறி கருத்து.." கமலா ஹாரிஸ் ஜெயித்தால் வெள்ளை மாளிகை நாறுமாம்.. டிரம்ப் ஆதரவாளர் சர்ச்சை
வாஷிங்டன்: அமெரிக்காவில் இந்தாண்டு இறுதியில் அதிபர் தேர்தல் நடக்கிறது. இதில் கமலா ஹாரிஸ் மற்றும் டிரம்ப் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. இரு தரப்பிற்கும் இடையே மிகத் தீவிரமாகப் பிரச்சாரம் நடந்து வரும் நிலையில், கமலா ஹாரிஸை குறிவைத்து இனவெறி கருத்துகளை டிரம்ப் ஆதரவாளர் தெரிவித்துள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
அமெரிக்காவில் வரும் நவ. மாதம் அதிபர் தேர்தல் நடக்கிறது. இதில் குடியரசு கட்சி சார்பில் டிரம்ப் மற்றும் ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹாரிஸ் போட்டியிடுகின்றனர்.

இந்த முறை போட்டி மிகக் கடுமையாக இருக்கும் என்றே கணிக்கப்பட்டுள்ளது. இதனால் இரு தரப்பும் தீவிர பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர்.
இனவெறி: இதற்கிடையே டொனால்ட் டிரம்பின் தீவிர ஆதரவாளரான லாரா லூமர், கமலா ஹாரிஸ் மீது சில இன வெறி கருத்துகளைக் கூறியுள்ளார். கமலா ஹாரிஸ் இந்தியப் பாரம்பரியம் கொண்டவர் என்பது அனைவருக்கும் தெரியும். அதை வைத்து இனவெறி கருத்துகளை டிரம்ப் ஆதரவாளர் கூறியுள்ளார். இது அங்குப் பலரையும் கொந்தளிக்க வைத்துள்ளது.
அதாவது முதலில் கமலா ஹாரிஸ் தான் குழந்தையாக இருந்தபோது இந்தியாவில் தனது தாத்தா பாட்டியைப் பார்க்கச் சென்றதை நினைவு கூர்ந்து ஒரு போஸ்ட்டை போட்டிருந்தார். அதற்கு ரிப்ளை கொடுக்கும் போது தான் லாரா லூமர் இந்த சர்ச்சை கருத்துகளைத் தெரிவித்தார்.
கமலா ஹாரிஸ்: ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளரான கமலா ஹாரிஸ் தனது ட்வீட்டரில், "நான் சிறு வயதில் இருக்கும் போது இந்தியாவில் உள்ள எனது தாத்தா பாட்டியைச் சந்திக்கச் செல்வேன். அப்போது எனது தாத்தா காலை நடைப்பயிற்சிக்கு என்னை அழைத்துச் செல்வார். அப்போது எனது தாத்தா என்னிடம் சமத்துவம் மற்றும் ஊழலுக்கு எதிராகப் போராடுவதன் முக்கியத்துவத்தைப் பற்றி எடுத்துரைத்தார்.
எனது பாட்டி இந்தியா முழுவதும் பயணம் செய்தவர்.. குடும்ப காட்டுப்பாடு குறித்து அவர் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். சிறந்த எதிர்காலத்திற்காகப் போராடிய அவர்களின் அந்த அர்ப்பணிப்பு தான் என்னுள் இருக்கிறது" என்று பதிவிட்டிருந்தார்.
இனவெறி கருத்து: இதற்குப் பதிலளித்த டிரம்ப் ஆதரவாளர் லூமர் , "கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றால், வெள்ளை மாளிகையில் இருந்து இந்திய குழம்பு வகைகளின் வாசம் தான் அடிக்கும். வெள்ளை மாளிகை கால் சென்டராக மாறிவிடும். அமெரிக்க மக்கள் தங்கள் கருத்துக்களை அழைப்பின் முடிவில் வாடிக்கையாளர் மட்டுமே சொல்ல முடியும். அதுவும் அணுகவே முடியாத ஒன்றாக இருக்கும்" என்று பதிவிட்டிருந்தார்.

அவரது இந்த பதிவு உடனடியாக இணையத்தில் டிரெண்டானது. பலரும் லூமரின் இந்த பதிவுக்கு மிகக் கடுமையான கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். இந்தியர்களை இழிவுபடுத்தும் விதமாகக் கமலா ஹாரிஸை விமர்சித்து இனவெறி கருத்துகளைப் பதிவிட்டதைப் பலரும் விமர்சித்து வருகிறார்கள். இது எவ்வளவு சீரிஸயான பதிவு என்பதை உணர்ந்து டிரம்பின் குடியரசு கட்சி உடனடியாக இதற்கும் தங்களுக்கும் சம்பந்தம் இல்லை எனக் கூறிவிட்டது.
கண்டிப்பு: இது குறித்து குடியரசு மார்ஜோரி டெய்லர் கிரீன், "இது பயங்கரமானது மற்றும் மிகவும் இனவெறி கருத்து.. இது குடியரசுக் கட்சியின் அதிகாரப்பூர்வ கருத்து இல்லை. இது டிரம்ப்பின் கருத்தும் இல்லை. இதுபோன்ற செயல்களை குடியரசு கட்சி ஏற்காது. ஆதரிக்காது. இந்த பதிவை லூமர் உடனடியாக நீக்க வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications