“இந்தியாவுக்கு பாடம் புகட்டணும்” – மீண்டும் அதிர்ச்சி கொடுத்த டொனால்ட் டிரம்ப்
வாஷிங்டன்: ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எதிர்த்து வருகிறார். இதற்காக இந்திய பொருட்களுக்கான வரியை 25 சதவீதம் உயர்த்தியிருந்தார் டிரம்ப். இதனால் ரஷ்யாவிடம் எண்ணெய் கொள்முதலை நிறுத்தலாமா என்று மத்திய அரசு ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். ஆனால் இந்தியாவுக்கு உக்ரைனில் போரில் இறக்கும் மக்கள் குறித்து கவலை இல்லை. எனவே வரி மேலும் உயர்த்தப்படும் என்று டிரம்ப் அதிர்ச்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி - அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நட்பு பாராட்டுவதாக கூறி வந்தனர். ஆனால் இரண்டாவது முறை அமெரிக்க அதிபராக பதவியேற்ற டிரம்ப் தொடர்ந்து இந்தியாவுக்கு எதிராகவே செயல்பட்டு வருகிறார். அது விசா விவகாரத்தில் தொடங்கி தற்போது வரி உயர்வு வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது.

வரி உயர்வு
ரஷ்யா - உக்ரைன் நாடுகள் இடையே தொடர்ந்து போர் நிலவி வந்தது. இதில் உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல்களில் ஈடுபட்டது. இதற்கு பல நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவு தெரிவித்தன. முக்கியமாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடை விதித்தனர். இதனால் ரஷ்யாவுக்கு பொருளாதார ரீதியாக கடுமையான பின்னடைவை ஏற்படுத்தியது
தங்கள் பொருளாதாரத்தை சீரமைப்பதற்காக அந்த நாடு தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் விற்பனை செய்ய தொடங்கியது. இந்தியா உள்ளிட்ட நாடுகள் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கி வருகின்றன. இதை அமெரிக்கா விரும்பவில்லை. இதுதொடர்பாக இந்தியாவை நேரடியாக விமர்சித்த டிரம்ப், கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் இந்திய பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதித்தார்.
கைவிட ஆலோசனை
இந்த வரி உயர்வு இந்தியாவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தொழில் நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்படும் சூழல் நிலவி வந்தது. இதுகுறித்து ஆலோசனை நடத்தி வந்த பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் மற்றும் மத்திய அரசு, ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை கைவிட முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியானது.
இதனால் அமெரிக்காவின் வரி உயர்வு திரும்பப் பெறப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், இது நல்ல முடிவு என்று கூறினாலும், பொறுத்திருந்து பார்ப்போம் என்று பிடி கொடுக்காமல் பேசியிருந்தார். இந்நிலையில் இந்தியாவுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தும் விதமாக அவர் டிரம்ப் மீண்டும் ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
டிரம்ப் மீண்டும் அதிர்ச்சி
இதுகுறித்து டிரம்ப், "ரஷ்யாவின் தாக்குதலில் உக்ரைன் போரில் பலியானவர்கள் குறித்து இந்தியாவுக்கு கவலை இல்லை. மேலும் ரஷ்யாவிடம் இருந்து அதிகளவு கச்சா எண்ணெய் கொள்முதல் செய்து, பிற நாடுகளுக்கு அதிக லாபத்துக்கு விற்பனை செய்து வருகிறது. இதனால் இந்திய பொருட்களுக்கான வரி படிப்படியாக மேலும் அதிகரிக்கப்படும்." என்று என்றார்.
"இந்தியா, சீனா நாடுகள் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குகின்றன. அந்த நிதியை தான் ரஷ்யா போருக்கு பயன்படுத்துகிறது. இதை எந்த காரணத்துக்காகவும் ஏற்க முடியாது என்பதில் டிரம்ப் உறுதியாக உள்ளார். மற்றபடி அவர் இந்தியாவுடன் நட்புறவை தொடரவே விரும்புகிறார்." என்று வெள்ளை மாளிகை நிர்வாகியும், டிரம்பின் உதவியாளருமான ஸ்டீபன் மில்லர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications