"காஷ்மீருக்கு யாரும் செல்ல வேண்டாம்.." திடீரென அமெரிக்கா வெளியிட்ட எச்சரிக்கை! என்ன தான் நடக்கிறது
வாஷிங்டன்: காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளது உலகெங்கும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இதற்கு உலகின் பல்வேறு நாடுகளும் கண்டனம் தெரிவித்துள்ளன. இதற்கிடையே பயங்கரவாத தாக்குதல் மற்றும் அமைதியின்மை ஏற்படும் வாய்ப்பு இருப்பதால் அமெரிக்கர்கள் யாரும் காஷ்மீருக்குச் செல்ல வேண்டாம் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
காஷ்மீரில் கடந்த செவ்வாய்க்கிழமை யாரும் எதிர்பார்க்காத வகையில் பஹல்காமில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியிருந்தனர். அங்கு அதிகச் சுற்றுலாப் பயணிகள் திரண்டிருந்த நிலையில், திடீரென அவர்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்தத் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். மேலும், பலர் காயமடைந்தனர்.

உலக நாடுகள் எதிர்ப்பு
இந்தத் தாக்குதல் உலகெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சமீப காலங்களில் காஷ்மீரில் நடந்த தாக்குதல்களில் இதுதான் மிகப் பெரியது. இந்தத் தாக்குதலுக்கு உலகெங்கும் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்துவதை ஏற்க முடியாது எனப் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதற்கிடையே இந்தத் தாக்குதல் நடந்து இரு நாட்கள் ஆகும் நிலையில், அமெரிக்கா தனது குடிமக்களுக்குப் புதிய எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. அதாவது காஷ்மீரில் பதற்றமான சூழல் நிலவுவதாலும் தீவிரவாதத் தாக்குதல் காரணமாகவும் அங்குச் செல்ல வேண்டாம் என அந்நாட்டுக் குடிமக்களுக்கு அமெரிக்க அரசு அறிவுறுத்தியுள்ளது.
அமெரிக்கா எச்சரிக்கை
இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பயங்கரவாத தாக்குதல்கள் மற்றும் திடீர் வன்முறை காரணமாக அமைதியின்மை ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. இதனால் அங்கு யாரும் பயணம் செய்ய வேண்டாம் (கிழக்கு லடாக் பகுதி மற்றும் அதன் தலைநகரான லே தவிர்த்து). இதர பகுதிகளில் பகுதியில் வன்முறை அவ்வப்போது நிகழ்கிறது.
மேலும் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான கட்டுப்பாட்டுக் கோட்டிற்கு அருகிலும் தாக்குதல்கள் தொடர்ந்து நடக்கிறது. காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள சுற்றுலாத் தலங்களான ஸ்ரீநகர், குல்மார்க் மற்றும் பஹல்காமிலும் இது போன்ற தாக்குதல்கள் நடக்கிறது" என்று அதில் கூறப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி, ஆயுத மோதல் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதால் இந்திய- பாகிஸ்தான் எல்லையில் இருந்து 10 கிலோமீட்டருக்குள் செல்வதைத் தவிர்க்குமாறு அதன் குடிமக்களைக் கேட்டுக் கொண்டது
பஹல்காம் தாக்குதல்
கடந்த சில ஆண்டுகளாகவே காஷ்மீரில் மெல்ல அமைதி திரும்பி வந்தது. அங்குப் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் செல்லும் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கையும் அதிகரித்தது. இதற்கிடையே அங்கு அவ்வப்போது வெளிமாநிலத்தவரைக் குறிவைத்துத் தாக்குதல்களும் நடந்தன. இருப்பினும், அவை பெரியளவில் இல்லாமல் இருந்தது.
தீவிரவாதிகள் படங்கள் வெளியீடு
இந்தச் சூழலில் தான் பஹல்காமில் உள்ள புல்வெளியில் சுற்றுலா பயணிகள் நிறைந்திருந்த நேரம் பார்த்து தீவிரவாதிகள் இந்தக் கொடூரத்தை நடத்தியுள்ளனர். குழந்தைகள் மற்றும் பெண்களைத் தவிர்த்துவிட்டு ஆண்களைக் குறிவைத்துத் தாக்கியுள்ளனர். இந்த மோசமான சம்பவத்தில் 3 முதல் 5 தீவிரவாதிகள் ஈடுபட்டு இருக்கலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், சம்பவ இடத்திற்கு விரைந்த என்ஏஐ அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கினர். அங்குத் துப்பாக்கிச் சூட்டை பார்த்தவர்கள் அளித்த தகவல்களின் அடிப்படையின் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளின் போட்டோ மற்றும் வரைபடம் நேற்று வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications