ஈரான் உடன் போரா? அதெல்லாம் இல்லையே.. அந்தர் பல்டி அடித்த டிரம்ப்!
வாஷிங்டன்: மத்திய கிழக்கில் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான போர்ச் சூழல் உலகப் பொருளாதாரத்தையே உலுக்கி வருகிறது. இப்போது இரு நாடுகளும் நேரடியாகத் தாக்கிக் கொள்ளவில்லை என்றாலும் அங்குப் பதற்றம் தொடர்கிறது. எப்போது வேண்டும் என்றாலும் மீண்டும் போர் வெடிக்கும் என்ற சூழலே உள்ள நிலையில், திடீரென நாங்கள் போரில் ஈடுபடவில்லை என ட்ரம்ப் நிர்வாகம் ஒரு புதிய விளக்கத்தை அளித்துள்ளது.
அமெரிக்கா - ஈரான் இடையிலான மோதல் இன்னுமே தொடர்கிறது. இப்போது தற்காலிக போர் நிறுத்தம் அமலில் இருப்பதால் இரு நாடுகளும் நேரடியாகத் தாக்கிக் கொள்ளவில்லை. இருப்பினும், அங்கு நிலைமை முழுமையாக அமைதி திரும்பவில்லை. இதனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வரலாற்றில் காணாத உச்சத்தை நோக்கி நகர்கிறது..

60 நாள் காலக்கெடு
இந்தச் சூழலில், அமெரிக்க அரசியலமைப்புச் சட்டத்தின்படி ஒரு போரைத் தொடர நாடாளுமன்றத்தின் அனுமதி பெற வேண்டிய '60 நாள் காலக்கெடு' இன்றுடன் (மே 1) முடிகிறது. அதாவது, ஒரு நாட்டின் மீது அமெரிக்கா ராணுவ நடவடிக்கையை எடுத்தால் 60 நாட்களுக்குள் அதை முடிக்க வேண்டும். 60 நாட்களைக் கடந்தால் அந்த போரைத் தொடர நாடாளுமன்றத்தின் ஒப்புதல் தேவை! ஈரான் போரை டிரம்ப் நாடாளுமன்ற ஒப்புதல் இல்லாமலேயே ஆரம்பித்த நிலையில், இப்போது 60 நாட்கள் ஆகிவிட்டதால் நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். ஆனால், ட்ரம்ப் நிர்வாகமோ இதிலிருந்து தப்பிக்க ஒரு புதுமையான வழியைக் கண்டுபிடித்துள்ளது.
பின்னணி
கடந்த பிப்ரவரி 28 அன்று இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தியதில், அந்நாட்டின் அப்போதைய உயர்மட்டத் தலைவர் அலி காமெனி உள்ளிட்டோர் கொல்லப்பட்டனர். இந்தப் போர் நடவடிக்கை குறித்து மார்ச் 2-ம் தேதி அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நாடாளுமன்றத்திற்கு அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அமெரிக்காவின் போர் அதிகாரச் சட்டத்தின்படி, நாடாளுமன்ற அனுமதி இல்லாமல் ஒரு அதிபர் 60 நாட்களுக்கு மேல் போரைத் தொடர முடியாது. அந்த 60 நாள் கெடு இன்றுடன் (மே 1) முடிவடைகிறது.
வித்தியாசமான விளக்கம்
நாடாளுமன்றத்தின் அனுமதியைப் பெற வேண்டிய நெருக்கடியைத் தவிர்க்க, ட்ரம்ப் நிர்வாகம் ஒரு புதிய வாதத்தை முன்வைத்துள்ளது. இது தொடர்பாக அமெரிக்க அவைத் தலைவர் மைக் ஜான்சன் கூறுகையில், "தற்போது குண்டுவீச்சுகளோ அல்லது நேரடி ராணுவ நடவடிக்கைகளோ நடக்கவில்லை.. நாங்கள் அமைதியை ஏற்படுத்தவே முயல்கிறோம், அதனால் இது போர் அல்ல" என்று புதிய விளக்கத்தைக் கொடுத்துள்ளார்.
அதேபோல டிரம்ப் அரசின் பாதுகாப்புத் துறை அமைச்சர் பீட் ஹெக்செத், "தற்போது போர்நிறுத்தம் தான் அமலில் இருக்கிறது. எனவே, அந்த காலகட்டத்தையும் 60 நாள் காலக்கெடுவுடன் சேர்க்க முடியாது" என்றார். இதன் மூலம் நாடாளுமன்ற அனுமதிக்கான காலக்கெடுவைத் தள்ளிப்போட அவர்கள் திட்டமிடுகின்றனர்.
எதிர்ப்பு
இருப்பினும், ஜனநாயகக் கட்சியினர் ட்ரம்ப் நிர்வாகத்தின் இந்த விளக்கத்தைக் கடுமையாக எதிர்க்கின்றனர். இது தொடர்பாக எம்பி டிம் கெய்ன், "சட்டப்படி இப்படி காலக்கெடுவை நிறுத்தி வைக்க முடியாது" எனக் கூறியுள்ளார். இந்த இரண்டு மாதப் போரால் 13 அமெரிக்க வீரர்களின் உயிரிழந்துள்ளதாகவும் பில்லியன் கணக்கான டாலர்கள் செலவாகி இருப்பதாகவும் எதிர்க்கட்சியினர் குற்றஞ்சாட்டுகிறார்கள். இந்த போருக்காக அமெரிக்கா ஏற்கனவே அதிகம் செலவிட்டுள்ளதாகவும் இந்தப் போரை முடிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றும் எதிர்க்கட்சியினர் கூறுகிறார்கள்.
ஒருபுறம் ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை முடக்கி உலக நாடுகளுக்கு அழுத்தம் கொடுத்து வரும் நிலையில், மறுபுறம் அமெரிக்காவிற்குள் அதிபருக்கும் நாடாளுமன்றத்திற்கும் இடையே அரசியலமைப்புச் சட்டப் போர் தொடங்கியுள்ளது. "போர்நிறுத்தம் என்றால் போர் இல்லை" என்ற ட்ரம்ப் டீமின் விளக்கம், அமெரிக்காவில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.














Click it and Unblock the Notifications