வானில் நடக்கும் அதிசயம்! சில நாட்களில் "ரிங் ஆஃப் பயர்!" இந்தியர்களால் இதை எப்போது பார்க்க முடியும்?
வாஷிங்டன்: இந்தாண்டிற்கான சூரிய கிரகணம் வரும் அக். 2ம் தேதி புதன்கிழமை நிகழ உள்ளது. இந்த வானியல் அதிசயத்தின் போது சூரியனை விட நிலா சிறியதாகத் தோன்றும். மேலும், நிலா இருண்டு இருக்கும் நிலையில், அதைச் சுற்றி சூரிய ஒளியின் பிரகாசமான வளையம் தெரியும். இந்த கிரகணம் எப்போது நிகழும், இதை இந்தியர்கள் எப்போது காண முடியும் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
இந்த பால்வெளி மண்டலம் பல அதிசயங்களைக் கொண்டது. அதன்படி சூரிய கிரகணம் வரும் அக். 2ம் தேதி புதன்கிழமை நிகழ உள்ளது. இதனை ஆய்வார்கள் "ரிங் ஆஃப் ஃபயர்" என்றே அழைக்கிறார்கள்.

இந்திய நேரப்படி அக். 2ம் தேதி இரவு 9:13 மணிக்குத் தொடங்கி, மறுநாள் காலை 3:17 மணி வரை சுமார் 6 மணி நேரம் இந்த "ரிங் ஆஃப் ஃபயர்" நிகழ்வு நடக்கும்.. இந்த நிகழ்வு பார்க்க அவ்வளவு அழகாக இருக்கும்.
எங்கு தெரியும்: இந்த அதிசயம் பசிபிக் பெருங்கடலின் சில பகுதிகள், தெற்கு சிலி மற்றும் தெற்கு அர்ஜெண்டினா முழுவதும் தெரியும். இருப்பினும், இந்தியாவில் இது தெரியாது என்பது ஏமாற்றமே.. கிரகணம் இரவில் நிகழ்வதால் இது நமது நாட்டில் தெரியாது. நீங்கள் இந்த நாடுகளில் எதாவது ஒரு நாட்டில் இருந்தால் சூரிய கிரகணத்தை நேரடியாகப் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும். இருப்பினும், அப்போது சரியான பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகளைப் பின்பற்ற வேண்டியது அவசியம்..
நாசா சொல்வது என்ன: ரிங் ஆஃப் பயர் குறித்து நாசா சில கருத்துகளைக் கூறியுள்ளது. அதாவது, "சந்திரன் நேரடியாகச் சூரியனுக்கு முன்னால் செல்லும் போது இந்த நிகழ்வு நிகழ்கிறது. ஆனால் சூரியனின் மேற்பரப்பை நிலாவால் முழுமையாக மறைக்க முடிவதில்லை. இதன் விளைவாக வானத்தில் நெருப்பு வளையம் தோன்றும்.

சந்திரன் பூமியைச் சுற்றி நீள்வட்டப் பாதையில் சுற்றுகிறது.. எனவே ஒவ்வொரு மாதமும் இரண்டு முறை அது பூமிக்கு மிகத் தொலைவில் மற்றும் மிக அருகில் வரும். எனவே, இந்த காலகட்டத்தில் நமது வானத்தில் சந்திரன் சராசரியை விடச் சற்று சிறியதாகவும் சற்று பெரியதாகவும் தோன்றும். அதுபோன்ற நேரத்தில் கிரகணம் நிகழ்வும் போதே ரிங் ஆஃப் பயர் நிகழ்வு நடக்கும்" என்கிறது.
சூரிய கிரகணம் என்றால் என்ன: சூரியன், சந்திரன் மற்றும் பூமி ஆகியவை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ ஒரே நேர்கோட்டில் வரும் போது சூரிய கிரகணம் ஏற்படுகிறது. சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் நிலா செல்லும் போது சூரிய கிரகணம் நிகழும். சில பகுதிகளில் சூரியனின் ஒளியை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ நிலா தடுத்துவிடும். அப்போது நிலவின் நிழல் பூமியில் விழும்.. இது மிகவும் அரிதான நிகழ்வாகவே பார்க்கப்படுகிறது.
பாதுகாப்பு முக்கியம்: இதுபோல கிரகணங்கள் நடக்கும் போது மக்கள் ஆர்வமாக அதைப் பார்ப்பார்கள். ஆனால் சூரியனை நேரடியாகப் பார்ப்பது பாதுகாப்பானது இல்லை என்கிறார்கள் வல்லுநர்கள். எனலே, கிரகணங்களைப் பார்க்கும் போது தகுந்த கண்ணாடிகளைப் பயன்படுத்த வேண்டும் அல்லது அதற்கான சாதனங்களை வைத்துப் பயன்படுத்துமாறு கோரிக்கை விடுக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications