ரோட் ஷோலாம் இல்லைங்க.. சும்மா போகுற வழியில வரவேற்பு கொடுத்தோம்.. ஆரணியில் அசத்திய அதிமுகவினர்!
சென்னை: நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேர்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில், அனைத்து கட்சி தலைவர்களும் வேட்பாளர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக திமுக தலைவர் முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டு பொதுக்கூட்டங்களில் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
அந்த வகையில் நேற்று ஆரணி தொகுதிக்கு பிரச்சாரம் சென்றிருந்த எடப்பாடி பழனிசாமிக்கு அத்தொகுதியை சேர்ந்த அதிமுகவினரால் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. குறிப்பாக ஆரணி டவுன் பகுதியில் ஏழு கிலோமீட்டர் தொலைவிற்கு வழிநெடுக மக்கள் சாலையில் இருபுறமும் குழுமி நின்று பூசணிக்காய் உடைத்தும், ஆரத்தி எடுத்தும் மலர்களை தூவியும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

ஆரணி மட்டுமல்லாது எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் செல்லும் அனைத்து இடங்களிலும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. இதுகுறித்து அதிமுக ஐடி விங் நேற்று வெளியிட்டுள்ள பதிவில் ஆரணி, பொள்ளாச்சி, திருப்பூர் ஆகிய தொகுதிகளில் எடப்பாடிக்கு வரவேற்பு அளிக்கபட்ட வீடியோக்களை பதிவிட்டு பாஜகவின் ரோடு ஷோ மீது கடுமையான விமர்சனங்களை வைத்துள்ளது.
சமீபத்தில் பிரதமர் மோடி நடத்திய ரோட் ஷோ குறித்து பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அதிமுகவால் இதுபோன்ற ரோட் ஷோ நடத்த முடியுமா என்ற தொனியில் பேசினார். அதற்கு உரிய பதிலடி தரும் விதமாக "எங்க பொதுக்கூட்டத்தின் ஒரே ஒரு பாக்ஸ் கூட்டத்தை Straight Lineல ரோட்டுக்கு இரண்டு பக்கம் நிக்க வச்சுட்டு, அதுக்கு பின்னாடி Relay Race நடத்திக்கிட்டு இதுக்கு ரோடு ஷோ ன்னு பேரு வேற.. பேரு வெச்சியே கூட்டத்துக்கு ஆள் வர வெச்சியா?" என்று கலாய்த்து தள்ளி பதிவிட்டுள்ளனர்.
இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. பொதுவாக களத்தில் தீவிரமாக செயல்படும் அதிமுக சமூக ஊடகங்களில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியது இல்லை என்ற கருத்து நிலவி வந்த நிலையில், இந்த தேர்தல் காலத்தில் அந்த பிம்பத்தை முறியடிக்கும் வகையில் வீரியத்துடன் அதிமுக ஐடி விங்கும் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் களத்தில் அனைத்து தொகுதிகளிலும் எடப்பாடி பழனிசாமிக்கு கொடுக்கப்பட்டு வரும் வரவேற்புகள் அதிமுகவினர் இடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி பிரச்சாரத்திற்கான புதிய உத்வேகத்தை கொடுத்துள்ளது.
களத்திலும் சமூக ஊடகங்களிலும் மேற்கொள்ளும் தொடர்ச்சியான பிரச்சாரங்கள் அதிமுகவிற்கு தேர்தலில் நல்ல வாக்குகளையும் கணிசமான தொகுதிகளையும் பெற்றுத் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications