Diwali Nonbu: தீபாவளி கங்கா ஸ்நானம் செய்ய உகந்த நேரம்! நாளையே கேதார கவுரி நோன்பு எடுக்க நல்ல டைம்!
சென்னை: தீபாவளி பண்டிகை நாளை நாடு முழுவதும் கொண்டாடப்படும் நிலையில் நாளை கங்கா ஸ்நானம் எடுத்துக் கொள்ள நல்ல நேரம் என்ன என்பதை பார்க்கலாம். தீபாவளிக்கு பட்டாசு, பலகாரம் எந்த அளவுக்கு முக்கியமோ அதைவிட வழிபாடு மிகவும் முக்கியமானதாகும்.

தீபாவளி பண்டிகை நரகாசுரனை வதம் செய்த நாளாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் கங்கா ஸ்நானம் என்பது மிகவும் முக்கியமானது. அது போல் தீபாவளி அன்றும் சில வழிபாட்டு முறைகள் உள்ளன.
அந்த வகையில் தீபாவளி அன்று கங்கா ஸ்நானம் செய்ய நேரம் குறித்து ஆத்ம ஞான மையம் யூடியூப் சேனலில் தேச மங்கையர்க்கரசி விளக்கியுள்ளார். அதுகுறித்து பார்க்கலாம்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: தீபங்களை வரிசையாக ஏற்றி வைத்து சிவபெருமானை வழிபடக் கூடிய நாள் தீபாவளி திருநாள். தீபாவளி பண்டிகையின் போது நாம் சிவபெருமானிடம் என்ன வேண்டிக் கொள்கிறோமோ அதை அப்படியே சிவபெருமான் நிறைவேற்றி தந்துவிடுவார்.
இதனால்தான் சிவனை வழிபடக் கூடிய அஸ்ட விரதங்களில் ஒன்றாக இந்த விரதம் கிடைத்துள்ளது. கந்தபுராணத்தில் சொல்லப்பட்டிருக்கக் கூடிய தீபாவளி திருநாளை நாம் எப்படி கொண்டாட வேண்டும் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான்.
நிறைய விளக்குகளை ஏற்றி வைத்து அந்த விளக்குகளின் ஒளி மூலம் இறைவனை வழிபாடு செய்தால் அது இன்னமும் நிறைய பலன்களை கொடுக்கும். தீபாவளி நாளை (அக்.20) காலை 4 மணிக்கே தொடங்குகிறது. நாளை சதுர்த்தசி திதி வருவதால் அந்த நாளில் கங்கா ஸ்நானம் செய்வது சதுர்த்தசி ஸ்நானம் என அழைக்கப்படுகிறது.
தீபாவளிக்கு காலை எழுந்ததும் வீட்டில் இருக்கும் பெரியவர்களிடம் எண்ணெய், சீயக்காய் வைத்துக் கொண்டு வெந்நீரில் குளிப்பதற்கு பெயர்தான் கங்கா ஸ்நானம் என்பதாகும். ஏனென்றால் தீபாவளி அன்று கங்கா தேவி வெந்நீரில் வாசம் செய்கிறாள்.
தலையில் வைக்கும் நல்லெண்ணெய், சீயக்காய் பொடி உள்ளிட்ட ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு தேவதைகள் வாசம் செய்கிறார்கள். சரஸ்வதி, லட்சுமி, கங்காதேவி ஆகிய மூவரின் அருளுமே கங்கா ஸ்நானத்தில் நமக்கு கிடைக்கும்.
தீபாவளி பண்டிகையின் போது குளிப்பதற்கான நேரம் காலை 4 மணி முதல் 6 மணி வரையாகும். சாமி கும்பிடுவதற்கான நேரமும் அதுதான். குளித்து முடித்துவிட்டு சாமி அறையில் இருக்கும் சிவபெருமான் அல்லது அம்பிகையின் படங்களுக்கு நிறைய மலர்களை சாத்த வேண்டும். அத்துடன் ஒரு வில்வமாவது வைக்க வேண்டும்.
எத்தனை தீபங்களை உங்களால் ஏற்ற முடிகிறதோ அத்தனை தீபங்களை ஏற்றுங்கள். "ஓம்" என போட்டு அதில் 64, 51 என அந்த ஓம் எழுத்துக்கு தகுந்தாற் போல் தீபங்களை ஏற்றுவது எனது வழக்கம். இந்த விளக்குகளில் ஒரு விளக்கிலாவது நெய் ஏற்றுங்கள். மற்றவைகளில் நல்லெண்ணெய் ஏற்றிக் கொள்ளலாம்.
காலை 4 மணி முதல் 6 மணிக்குள் கங்கா ஸ்நானம் எடுத்துக் கொள்ள இயலாதவர்கள் காலை 9.10 மணி முதல் 10.20 மணி வரைக்குள் எண்ணெய் தேய்த்து குளித்துவிடலாம்.
அமாவாசை எப்போது தொடங்குகிறது என்றால் நாளை மாலை 4.15 மணி முதல் அடுத்த நாள் அக்டோபர் 21 ஆம் தேதி 5.48 மணி வரையாகும்.
நோன்பு எடுப்போர்: 20 ஆம் தேதி காலை 9.10 மணி முதல் 10.20 மணிக்குள் நோன்பை எடுக்கலாம். பாரணை (நோன்பை முடித்தல்) செய்து எப்போது நிறைவு செய்ய வேண்டும் என்றால் நாளை மறுநாள் 21ஆம் தேதி காலை 7 மணி முதல் 8.45 மணிக்குள், காலை 10.40 மணி முதல் 11.40 மணிக்குள் முடித்துக் கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications