ஆவணி பௌர்ணமி.. அண்ணாமலையார் கோவில் செல்லும் பக்தர்களே.. கிரிவலம் செல்ல சரியான நேரம் எப்போது?
திருவண்ணாமலை: பெளர்ணமி நாட்களில் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வதற்கான சரியான தேதி, நேரம் ஆகியவற்றை அட்டவணையாக அண்ணாமலையார் கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. ஆவணி பௌர்ணமியில் எந்த நாளில் எந்த நேரத்தில் கிரிவலம் செல்லலாம் என அண்ணாமலையார் கோவில் நிர்வாகம் நல்ல நேரத்தை குறிப்பிட்டுள்ளது.
காசியில் இறந்தால் முக்தி, திருவாரூரில் பிறந்தால் முக்தி, சிதம்பரத்தில் வழிபட்டால் முக்தி ஆனால் திருவண்ணாமலையை நினைத்தாலே முக்தி தரும் தலமாகும். யார் பெரியவர் என்று பிரம்மாவும் விஷ்ணுவும் மோதிக்கொண்டு, ஈசனின் அடிமுடி காண விரைந்த தலம் திருவண்ணாமலை. அக்னியே குளிர்ந்து மலையாகி, ஈஸ்வர அம்சமாக உள்ள இடம் திருவண்ணாமலை.

சிவபெருமானின் பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாகப் போற்றப்படுவது திருவண்ணாமலை. மலையே சிவனாக காட்சி தரும் திருவண்ணாமலையில் பவுர்ணமி நாட்களில் பக்தர்கள் கிரிவலம் வருவார்கள். கிரிவலம் வரும் போது தரிசிக்க வேண்டிய கோவில்கள் உள்ளன. கிரிவலம் வருவதற்கு ஒரு முறை உள்ளது. அண்ணாமலையார் கோவில் ராஜகோபுரம் முன்பு நின்று தரிசனம் செய்து விட்டு கிரிவலம் வந்து மீண்டும் ராஜ கோபுரத்தில் முடிக்க வேண்டும்.
அண்ணாமலையாரே ஆண்டுக்கு இரண்டு முறை கிரிவலம் வருகிறார். கார்த்திகை மாதம் தீபம் திருவிழா முடிந்து கிரிவலம் வருவார். அதே போல தை மாதம் 2ஆம் நாள் கிரிவலம் வருவார். கிரிவலப்பாதையில் உள்ள அஷ்ட லிங்கங்களையும், ஆசிரமங்களையும், கோவில்களையும் தரிசனம் செய்ய வேண்டும்.
இந்திர நந்தீஸ்வரர் அஷ்ட நந்தியில் தொடங்க வேண்டும். இந்திர லிங்கம், கற்பக விநாயகர், காமாட்சி அம்மன் கோவில், பாணிபத்திரர் கோவில், அக்னிதீர்த்த குளம், அக்னி லிங்கம், சேஷாத்திரி ஆசிரமம், காளியம்மன் கோவில், தட்சிணாமூர்த்தி கோவில், ரமணா ஆசிரமம், யோகி ராம் சூரத்குமார் ஆசிரமம், ஆறுமுகப் பெருமாள் கோவில், சிங்க தீர்த்தம், எமலிங்கம், எமநந்தீஸ்வரர், துர்வாச கோவில், துர்வாச நந்தி, சோனாநந்தி, சோனா தீர்த்தம், ஜோதி விநாயகர் கோவில், மாரியம்மன் கோவில், ஈஸ்வர தொண்டு செய் நந்தி, திருதி லிங்கம்.
அருட்பெருஞ்சோதி கோவில், திருத்தேர் அண்ணாமலை, வீர ஆஞ்சநேயர் கோவில், ராகவேந்திரர் கோவில், கண்ணப்பனார் கோவில், பழனி ஆண்டவர் கோவில், சூரிய லிங்கம், வருணலிங்கம், காசிநந்தீஸ்வரர், ஆதி அருணாசலம் அபிதகுஜாம்பாள் கோவில்,குழமணி விநாயகர், மாரியம்மன் கோவில், வாயுலிங்கம், அதிகார நந்தி, குபேரலிங்கம், இடுக்கி வழி பிள்ளையார் கோவில், பஞ்சமுக தரிசனம், சீனிவாச பெருமாள் கோவில், ஈசான்ய லிங்கம்.
ஸ்ரீபச்சையம்மன் கோவில், வடசுப்ரமணியர் கோவில், ஸ்ரீதுர்க்கையம்மன் கோவில், கட்க தீர்த்தம், துர்கா நந்தி, பெரிய ஆஞ்சநேயர் கோவில், பழகொன்று கோவில், அருணை நாயகி கோவில், பூத நாராயண கோவில், வீரபத்திரர் கோவில், இரட்டை பிள்ளையார் கோவில் என 54 கோவில்களை கிரிவலப்பாதையில் தரிசனம் செய்யலாம்.
இந்த மாதம் ஆகஸ்ட் 30 ம் தேதி காலை 10.46 மணிக்கு தான் பெளர்ணமி திதி துவங்குகிறது. ஆகஸ்ட் 31 ம் தேதி காலை 08.17 வரை பெளர்ணமி திதி உள்ளது. இதனால் ஆகஸ்ட் 30 ம் தேதியே கிரிவலம் செல்வதற்கு ஏற்ற நாளாக சொல்லப்பட்டுள்ளது. இந்த நாளில் ஆவணி அவிட்டமும் சேர்ந்து வருவதால் ஆவணி மாத பெளர்ணமி மிகவும் சிறப்புக்குரிய நாளாக கருதப்படுகிறது. அதோடு ஆகஸ்ட் 31 ம் தேதி காயத்ரி ஜபம் ஜெய்வதற்கான நாள் என்பதால் அந்த நாளின் காலை வேளையில் கிரிவலம் செல்வது மிக உயரிய பலனை தரும்.
ஞாயிற்றுக்கிழமை கிரிவலம் வந்தால் சிவலோக பதவி கிட்டும் . திங்கட்கிழமை வந்தால் இந்திர பதவி கிடைக்கும். செவ்வாய்க்கிழமை கிரிவலம் வந்தால் கடன், வறுமை நீங்கும். புதன் கிழமை கிரிவலம் வந்தால் கலைகளில் தேர்ச்சியும், முக்தியும் கிடைக்கும். வியாழக்கிழமை கிரிவலம் வந்தால் ஞானம் கிடைக்கும். வெள்ளிக்கிழமை கிரிவலம் வந்தால் வைகுண்டப் பதவி கிடைக்கும். சனிக்கிழமை கிரிவலம் வந்தால் பிறவிப்பிணி அகலும் என்று கூறப்பட்டுள்ளது.
கிரிவலம் வரும்போது அங்கிருக்கும் சாதுக்களுக்கு அன்னமிடுவது சிறப்பாகும். சாதுக்கள் வடிவில் சித்தர்கள் இருக்கலாம். அவர்களுக்கு அன்னதானம் செய்வதால், நமது பாவப்பிணிகள் அகலும். இவ்வாறாக கிரிவலம் செய்தால்தான் முழுமையான பலன் கிடைக்குமென சித்தர்கள் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications