வானில் அதிசயம்.. பெங்களூரில் வட்டமாக சுற்றிய 3 கருடன்.. வியப்பூட்டும் பெங்களூரு ராஜராஜேஸ்வரி கோயில்
பெங்களூரு: ஆடி மாதங்களில் பக்தர்கள் திரண்டு வந்து வழிபாடு நடத்தும், பெங்களூர் ராஜராஜேஸ்வரி கோயிலின் சிறப்பு என்ன தெரியுமா?
பெங்களூரு ராஜராஜேஸ்வரி நகர் கெஞ்சனஹள்ளியில் அமைந்துள்ளது ராஜராஜேஸ்வரி அம்மன் கோவில்... இந்த கோவில் ராஜராஜேஸ்வரி அம்மனுக்காகவே அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

காரணம்: இந்த கோயில் எழுந்தருளியதன் ஆச்சரியமான பின்னணி காரணம் ஒன்று உள்ளது.. அதாவது, கடந்த 1960 ஜனவரி 14 ம் தேதி சங்கராந்தி தினத்தன்று திருச்சி மஹாசுவாமிகள் காரில், திருச்சியில் இருந்து மைசூருக்கு காரில் பெங்களூரு வழியாக சென்றிருக்கிறார்.. பெங்களூரு நகரின் தென்மேற்கே 6 கி.மீ. தூரத்தில் சென்றுகொண்டிருந்போது, அவருக்கு மேலே வானத்தில் 3 கருடன்கள் வட்டமிட்டு வருவதை பார்த்திருக்கிறார்.
அந்த கருடன்களில் துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி ஆகியோரின் உருவங்களையும் கண்டு சிலிர்த்து போய்விட்டார்.. இதையடுத்து உடனே தன்னுடைய காரிலிருந்து இறங்கி நடந்து சென்று, கெஞ்சனஹள்ளி என்ற கிராமத்தை அடைந்தார். அந்த இடத்தில், கருடன்கள் சுற்றிக் கொண்டிருக்கும் கொய்யா மரங்களின் தோப்புகளுக்கு இடையே ஒரு சிறிய குடிசையை கண்டார்.
ஆசிரமம்: இந்த இடத்தில்தான், தன்னுடைய ஆசிரமம் அமைக்க முடிவு செய்தார். 1960 ம் ஆண்டு ஏப்ரல் மாதம், ஆசிரமம் அமைந்துள்ள பகுதியில் ராஜராஜேஸ்வரி கோயிலை கட்டவும் முடிவு செய்து, திருச்சி மஹா சுவாமிகளால் இதற்கான அடிக்கல்லும் நாட்டப்பட்டது.
ராஜராஜேஸ்வரி கோயிலானது, திராவிட கட்டிடக்கலை பாணியில், ஆகம சாஸ்திரத்தின் வழிகாட்டுதலின்படி கட்டப்பட்டது. கோவிலின் நுழைவாயிலில் ஒரு அகன்ற ராஜ கோபுரம் காணப்படுகிறது.. இந்த ராஜகோபுரத்தை எவ்வளவு தூரத்திலிருந்தும் பார்க்க முடியுமாம்.. ராஜராஜேஸ்வரி கோயிலில் பிரதான சன்னதி, மண்டபம், திறந்த தூண் மண்டபம், பரந்த சுற்றுப்பாதை மற்றும் உள் முற்றம் உள்ளது.
தூண்கள்: அதேபோல, ராஜ ராஜேஸ்வரி கோயிலுக்குள் அனைவரையும் ஈர்க்கக்கூடியது, அங்குளள நேர்த்தியாக செதுக்கப்பட்ட தூண்களும், அழகாக அலங்கரிக்கப்பட்ட சுவர்களும்தான்.
இந்த ராஜராஜேஸ்வரி கோவிலின் முக்கிய கருவறையில் 6 அடி ராஜராஜேஸ்வரி தேவியின் கல் சிலை அமைந்திருக்கிறது.. ராஜ ராஜேஸ்வரி சிம்மாசனத்தில் அமர்ந்தும், வலது காலை மடக்கி இருக்கைக்கு குறுக்கேயும், இடது காலை முழங்காலில் வளைத்தும், கீழே நீட்டிய தாமரை முழுவதுமாக மலர்ந்திருப்பதை பார்ப்பதற்கே கண்கொள்ளாக்காட்சியாக இருக்கும்.
பிறகு அம்மன் கோவில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டது. அன்றிலிருந்து இன்று வரை மிகவும் சக்தி வாய்ந்த அம்மன் என்று போற்றப்படும் ராஜராஜேஸ்வரி அம்மன் கோவிலுக்கு, தினமும் ஏராளமான பக்தர்கள் வந்தவண்ணம் உள்ளனர்..
நேரம்: இந்த கோயிலுக்குள்ள அறிவிப்பு பலகைகள் தமிழ், கன்னடத்தில் வைக்கப்பட்டுள்ளன... செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடக்கும். தினமும் காலை 6:30 மணி முதல் மதியம் 12:30 மணி வரையும்; மாலை 4:00 மணி முதல் இரவு 8:30 மணி வரையும் கோவில் நடை திறந்திருக்கும்.
இப்போது இந்த பகுதியே ராஜராஜேஸ்வரி நகர் என்று அழைக்கப்படுகிறது.. பார்வதி தேவியின் அவதாரமான ராஜராஜேஸ்வரி தேவியின் தலமான இந்த கோவில் பெங்களூரின் பழமையான கோவில்களில் ஒன்றாக திகழ்ந்தும் வருகிறது.. ஆடி வெள்ளிக்கிழமைகளில் இந்த கோயிலில் விசேஷ பூஜைகள் நடக்கும். அந்தவகையில், இப்போது ஆடி மாதம் துவங்கியிருப்பதால், பக்தர்களின் வருகை பெருகி வருகிறது.












Click it and Unblock the Notifications